முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜனசக்தி பிரசுராலயத்திலிருந்து ‘ஒப்பில்லாத சமுதாயம்’ என்ற சிறுநூல் வெளிவந்தது.  அப்போது இந்த நூலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.  நானும் இதை விற்றிருக்கிறேன்.

இந்திய மக்கள் விருப்பு, வெறுப்பில்லாமல் புரிந்துகொள்ளும் வகையில் சோவியத் யூனியனில் சோஷலிஸ அமைப்பின் சிறப்பு பற்றி எழுதப் பட்டிருந்தது.

கான்டர்பரி பிஷப் (Dean of Canterbury) எழுதிய ‘உலகில் ஆறில் ஒரு பங்கு’ ( One sixth of theworld) என்ற ஆங்கில நூலின் சுருக்கத்தை ஆரவார மில்லாத அழகிய தமிழில் எழுதிய தோழர்

நா. வானமாமலை அவர்கள் அந்நூலுக்குக் கொடுத் திருந்த தலைப்புதான் “ஒப்பில்லாத சமுதாயம்.”

இச்சிறு வெளியீட்டின் மூலமே தோழர் என்.வி. அவர்களை முதன் முதலில் புரிந்து கொண்டேன்.

முதல் சந்திப்பு

1946-ல் நான்குநேரி தாலுகாவில் விவசாயி களிடையே கட்சிப் பணிக்காக முழுநேர ஊழியராக அனுப்பப்பட்டேன்.  அரசியல் ஆர்வத்தில் கல்லூரிப் படிப்பை அரைகுறையாக நிறுத்தி விட்டு, சொந்த ஊரில் அரசியலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கட்சித் தலைமைக்கு எழுதினேன்.

திடீரென்று ஒருநாள் தோழர் பாலதண்டா யுதம் அவர்களிடமிருந்து கடிதம் வந்தது.  உடனே நான்குனேரிக்குப் புறப்பட்டு ஆசிரியர் நா. வான மாமலை அவர்களைச் சந்திக்குமாறு எழுதி யிருந்தார்.  வழிச்செலவுக்குரிய பணத்தை தோழர் களிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

நான்குநேரி போய்ச் சேர்ந்தேன்.  ஆசிரியர் அவர்களைச் சந்தித்தேன்.  வயதுக்கும் திறமைக்கும் மிஞ்சிய அடக்கம்; ஆழ்ந்தடங்கிய அறிவாற்றலின் காரணமாகும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

தாலுகாவில் உருவாகியிருக்கும் விவசாயிகள் எழுச்சி பற்றிய சுருக்கத்தை தெளிவாகக் கூறினார்.  எப்பகுதி மக்கள் எத்தகைய நிலப் பிரபுக்களை எதிர்த்து நிற்கிறார்கள்? சமூக, சாதிக் கொடுமை களின் வரலாறு, அரிசன மக்களின் தலைவர்களாகவும், இப்புதிய இயக்கத்தின் வழிகாட்டிகளாகவும் விளங்கும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் எல்.டி. பால் வாத்தியார், டி.டி.சி. துரை, சண்முக வாத்தியார், பால்ராஜ் மற்றும் செட்டிமேடு ஆசிரியர் வெங்கிட்டு ஆகியோர்களைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.  ஒவ்வொருவரைப் பற்றியும் என்.வி. அவர்கள் கூறிய மொழிகள் அத்தனையும் அத் தோழர்களைப் புரிந்துகொள்ளவும், பழகவும், அணுகவும் பேருதவியாக இருந்தது.  மடாதிபதிகளின் தாக்குதல்களை எதிர்த்துக் கடுமையாக நடந்த போராட்டத்திலும், மேல் சாதிக் கொடுமைகளை எதிர்த்து அரிசன மக்களைப் பாதுகாக்கவும் பல்வேறு சோதனைகளுக்கிடையே உறுதியாக நிற்பதற்கும் தோழர்களிடையே உணர்வு பூர்வமான உறவுநிலை இருப்பது அவசியமாக இருந்தது.  தோழர் என்.வி. அவர்கள் முதலில் எனக்குக் கொடுத்த அறிமுக அறிவுரை மிகவும் பயன் பட்டது.

விவசாயிகள் இயக்கத்தின் துணைவன்

வாரத்துக்கு ஒரு தடவை நான்குநேரி சென்று தோழர் வானமாமலை அவர்களைச் சந்திப்பேன்.  அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களைக் கேட்பேன்.  நீண்ட விளக்கவுரை கிடைக்கும்; தெளிவு பெறு வேன்; இதன் மூலம் என்னை அறியாமலே ஒரு தெம்பு ஏற்படும்.

மாதம் இரு துண்டுப் பிரசுரங்களாவது கொண்டு வருவோம்.  ஏன் இந்தப் போராட்டம்? என்பதை விளக்கி துண்டுப் பிரசுரம் போடவேண்டி யிருக்கும்.  நேரடி இயக்கத்தில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு ஆத்திரம் வருவது இயற்கை.  என்னுடன் பணியாற்றி வந்த தோழர்களும், துண்டுப் பிரசுரம் கடினமான வார்த்தைகளில் இருக்க வேண்டு மென்று நினைப்பார்கள்.  தோழர் வானமாமலை அவர்களிடம் கலந்து துண்டுப் பிரசுரம் எழுதி அச்சுக்குக் கொடுத்துவிடுவேன்.  சிறுசிறு வாக்கியங்களாக இருக்கும்.  பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கக்கூடியதாக இருக்கும்.  கூடுமான வரை ஆட்களை எதிரிகள் பக்கம் சேர்க்க விடாமல் தடுப்பதே துண்டுப் பிரசுரத்தின் நோக்கமாக அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக, பரம் பரையாகப் பல்லாண்டுகளாக பழக்கப்பட்டு வந்த சமூகக் கட்டுகளை அறுத்தெறியும் முயற்சியில் நிதானம் இல்லாமலிருந்தால், நாம் தனிமைப்பட்டு நிற்க வேண்டியிருக்கும்; பழமைக்கு புதுபலம் ஏற்பட்டுவிடும்.  தோழர் என்.வி. அவர்களிடம் இதுபற்றியும் பேசித் தெளிவு பெறுவது வழக்கம்.

1947 மே தினம் நாங்குநேரியில் விவசாயிகள் ஊர்வலம் நடத்தினோம்.  மறைந்த வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி அவர்கள் பேசுவதாக அறிவித்திருந்தோம்.  தோழர் வி.எஸ். காந்தி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  ஊர் வலத்தில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்டவர்கள்.  ஊர்வலத்தின் முன்பு தோழர்கள் என்.வி.யும் நானும் சென்றோம்.  தெற்கு மாடவீதி கடந்து கோவில் கல்மண்டபத்தில் காலெடுத்து வைத் தோம்.  கோவிலுக்குள் நுழைவதற்கு உத்தேசம் கிடையாது.  இருந்தாலும் ஜீயர் மடத்துக் காவல் காரர்கள் கம்பு ஆயுதங்களுடன் வந்து தடுத்தார்கள்.  “கல்மண்டபத்து வழியாக வடக்குமாட வீதி செல்லு கிறோம்.  இதையும் தடுக்காதீர்கள்.  சாமியார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போகாதீர்கள்.  சட்டம் புதிசா வந்திருக்கு” என்று தோழர் என்.வி. கண்டிப்பான குரலில் எடுத்துச்சொன்னார்.

“கிராம முன்சீப் தாதர் மகனே இப்படிச் சொன்னா, ஊரு விளங்குமா? எங்க சாதிக்காரனும் ஒருவன் உங்களோடு சேர்ந்திருக்கான்! விளங்க மாட்டாய்” என்று கோபத்தோடு பேசியும் முனகிக் கொண்டும் போனார்கள்.

‘செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு.’ அப்போது எங்கள் பக்கம் கூட்டம் அதிகம்.  ஊர்வலத்தின் முடிவில் கூட்டம் நடந்தது.  கூட்டம் முடிந்து எல்லோரும் சென்ற பின்னர் மடத்துச் சாமியாரின் தூண்டுதலில் நூற்றுக்கணக்கான அடியாட்கள் வந்தனர்.  இரவு கூட்டத்தை நடத்த விடாமல் கலகம் செய்து தடுத்துவிட்டார்கள்.

ஆசிரியர் பணி

தோழர் என்.வி. ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார்.  சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அரசு நிர்வாகத்துக்குட்பட்ட இடத்தில் வேலை செய்வது தடையாக இருந்தது.

ஜில்லா கல்வி அதிகாரிகளில் பலர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்தனர்.  ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டிக்குரங்கு பத்தடி பாயும்’ என்பார்கள்.  பிரிட்டிஷ் ஆட்சியின் அந்திம காலமாக இருந்தாலும், இந்திய அதிகாரிகள் அந்நிய ஆட்சிக்கு அடிமையாக இருந்தார்கள்.  தேசியத் தலைவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள்.  தேசியத்தை ஆதரித்துப் பேசும் ஆசிரியர்கள் மீது விசாரணைகள், துவங்குவது வழக்கமாக இருந்தது.  இதெல்லாம் தோழர் என்.வி.க்கு அறவே பிடிக்கவில்லை.

தேசிய உணர்வுக்குத் தடையில்லாமலும், முற்போக்குக் கருத்துக்களைக் கூற வாய்ப்பாகவும் சாத்தான்குளத்தில் துவக்க இருந்த தேசிய உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப் பேற்கத் தயாராக இருந்தார்.  ஜில்லா போர்டு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.  எதிர் பார்த்தபடி, சாத்தான்குளத்தில் உயர்நிலைப் பள்ளி துவங்கப்படவில்லை.  இதன் பின்னரே, பாளையங்கோட்டையில் மாணவர் டியூட்டோரியல் கல்லூரியைத் துவக்கினார்கள்.

தோழர் என்.வி. பாளையங்கோட்டைக்கு வந்தது எல்லோருக்கும் பல வகையில் உதவியாக இருந்தது.  புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருப் போரின் சந்திப்பு இடமாக இருந்தது.  இதற்கேற்ப நெல்லை வட்டாரத்தில் பீடித் தொழிலாளர் போராட்டம், டி.எம்.பி.எஸ். மோட்டார் தொழி லாளர் போராட்டம்,  ரெயில்வே தொழிலாளர் போராட்டம், தச்சநல்லூர் கணபதி மில் தொழி லாளர் போராட்டம் - இவ்வாறு பல போராட்டங்கள் நடந்துவந்த காலம், இப்போராட்டங்களுடனும், சங்கங்களுடனும் தோழர் என்.வி. நேரடித் தொடர்பு கொண்டிருந்தார்.

1948-இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.  தோழர் என்.வி.யும் கைது செய்யப் பட்டார். விடுதலையடைந்த பிறகும் கட்சியோடிருந்த இணைப்பை விட்டுவிட வில்லை.

மார்க்சிய அறிவில் தேர்ச்சி பெற்றார்.  மேலும் மேலும் பல்வேறு ஆய்வு நூல்களை எழுதினார்.  இருப்பினும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு இருக்கிற தொடர்பு வலுப்பட்டு வந்திருக்கிறது.

1970-இல் நடைபெற்ற நிலமீட்சிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  சிறையில் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தோம்.  சிறையிலும் மார்க்சிய அறிவைப் புகட்டுவதில் சளைக்கவில்லை.  உற்சாகம் குன்றாமல் உறுதியோடு சிறைவாசத்தைக் கழித்தார்.

திவான் ஜர்மன்தாஸ் என்பவர் மகராஜ் என்ற நூலை எழுதியிருந்தார்.  இந்திய சமஸ்தான மன்னர் களின் வாழ்க்கை நெறிகள், ஆடம்பரம், தேசத் துரோகம் பற்றியெல்லாம் நேரடி அனுபவத்தில் எழுதியிருந்தார்.  இதைச் சுருக்கி தோழர் என்.வி. கட்டுரைகளாக சாந்தியில் வெளியிட்டார்.

1971-இல் நடைபெற்ற தேர்தலில் மன்னர் மான்யம் ஒரு பிரச்சினையாக இருந்தது.  அப் போது இக்கட்டுரைகள் பலனளித்தன.

பேராசிரியர் வானமாமலை அவர்களுடன் நெருங்கிப் பழகுவதில் அலாதியான அனுபவம் கிடைக்கும்.  வாரம் ஒருமுறை பேராசிரியரிடம் உரையாடச் சென்றால் எத்தனையோ நூல்களைப் படிப்பதனால் ஏற்படும் தெளிவும் பலனும் ஏற்படுவதுண்டு.

பேராசிரியர் எழுதிய நாடோடிப் பாடல் தொகுப்புகளும் கதைப் பாடல்களும் தமிழ் நாட்டில் கிராமப்புற மக்களின் பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் போர்க்குணத்தையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.

சோழ மன்னர்கள் காலத்திய நில உறவு முறை களைப் பற்றி பேராசிரியர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் புதிய வரலாற்றுக் கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றன.

‘பூம்புகார்’ திரைப்படம் வெளிவந்த நேரத்தில் அப்படத்தின் கதாசிரியர் திரு. கருணாநிதி செய் திருந்த கதை மாற்றத்தையும் கருத்துச் சிதைவையும் சுட்டிக்காட்டி ஒரு சிறுநூலை எழுதினார்.  அது சாதாரண மறுப்பு நூலாக இல்லாமல், ஒரு ஆய்வு நூலாக அமைந்தது.

சோவியத் எதிர்ப்பு 1974-75-வது ஆண்டுகளில் இந்தியாவில் புது உருவம் எடுத்தது.  வளர்முக நாடுகளின் முன்னேற்றத்துக்காக சோவியத் ரஷ்யா செய்துவரும் உதவிகளினால் - இந்தியாவில் நட்புணர்வு வளர்ந்து வந்தது.  இதைத் தடுக்க, முதலாளித்துவ அறிவாளிகளில் வக்கிரபுத்தி படைத்த சிலர் முனைந்தனர்.  ‘துக்ளக்’ பத்திரிக் கையில் ஆசிரியர் சோ எழுதி வந்த “இந்தியாவின் தலைநகர் மாஸ்கோ/டில்லி” என்ற தொடர் கட்டுரை மிகவும் நுணுக்கமானது.  நடுநிலையாக இருக்கும் யாவரையும் சோவியத் உதவி பற்றி சிறிது சந்தேகத்தைக் கிளப்பிவிடும்.  இக்கட்டுரைகளுக்குப் பதில் எழுத வேண்டுவது அவசியமெனப் பலர் பேசிக் கொண்டோம்.  பாளையங்கோட்டையி லிருந்து பேராசிரியர் என்.வி. அவர்களும் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த மாணவன் மோகனும் சேர்ந்து ‘துக்ளக்’குக்கு ஆணித்தரமான பதில் கொடுக்கும் தொடர் கட்டுரைகளை எழுதினார்கள்.  அவை ஜனசக்தியிலும், சாந்தியிலும் வெளிவந்தன.

தோழர் வானமாமலை-பேராசிரியர் என்.வி. ஆராய்ச்சியாளர் நா. வா. அவர்களைப் பற்றி ஏராளமாக எழுதலாம்.  முற்போக்குக் கருத்துள்ள அரசியல்வாதிகளுக்குச் சிறந்த கருத்துக் கருவூல மாகத் திகழ்கிறார்.  தமிழ் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகத் துணை நிற்கிறார்.  தனிமனிதனாக இருந்தாலும், தமிழகத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த முறையில் ‘ஆராய்ச்சி’ இதழை வெளியிட்டு வருகிறார்.  ஆய்வும் அறிவும் தன்னோடு மட்டும் நின்றுவிடாமல், இத்துறையில் ஆர்வமுள்ளவர் களை ஒன்றாக இணைத்துப் பயிற்சி கொடுத்து, ஆய்வுரைகள் எழுதத் தூண்டும் முயற்சியிலும் வெற்றி கண்டு வருகிறார்.

பேராசிரியர் என்.வி. அவர்களின் முயற்சி மேலும் மேலும் வெற்றி பெற உறுதுணையாக நிற்போம்!

- (நா.வா. மணிவிழா மலரிலிருந்து, 1978)