என் தாய் சின்னத்தாயம்மாள் சேலம் டவுனுக்கு 1 மைலில் உள்ள தாதம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு பிரபல செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். மிக்க செல்லமாக வளர்க்கப்பட்டவர்.

உதாரணமாக, தமது கிராமத்தில் புஷ்பவதி ஆனதற்கு சேலம் டவுனில் ஊர்வலம் விடத்தக்க தடபுடல் வாழ்க்கையில் இருந்தார். ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே தகப்பனார் காணாமற்போன பிறகு, ஒரு மிக ஏழ்மை வாழ்க்கை நடத்திய தாயாரால் காப்பற்றப்பட்டவரும் பள்ளிக்கூடமே இன்னதென்று அறியாத வரும் 6 வயதிலேயே கூலி வேலை செய்யவும் 18 வயதில் கல் உடைப்பு வேலை செய்தவருமாய் இருந்து வந்தவரும் 25 வயதில் வண்டி வைத்து வாடகைக்கு ஓட்டப்போகிறவருமான வெங்கிட்ட நாயக்கருக்கு நெருங்கிய பற்று உறவு காரணமாக வாழ்க்கைப்படுத்தப்பட்டவர்.

ஏழையை மணந்தார்; இன்னல்களை ஏற்றார்

அம்மை செல்வக் குடும்பத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்தவராயிருந்தாலும் வெங்கிட்ட நாயக்கரை மணந்த பிறகு அம்மையார் செங்கல் ஓடு முதலியவைகளை காளவாயிலிருந்து ஊருக்குள் கட்டடம் கட்டுபவர்களுக்குக் கூலிக்குக் கூடைகளில் சுமந்து போட்டு தினம் 8 பைசா கூலி வாங்கிப் பிழைத்தவர்கள். புருஷனுக்கு தினம் 2 அணா கூலியும் பெண்சாதிக்கு 8 பைசா கூலியுமாக சம்பாதித்து வந்தனர்.

பிறகு புருஷனுக்கு கல் சித்திர வேலையில் தினம் பகலில் 8 அணாவும் இரவில் 12 அணாவும் பெறக்கூடிய யோக்கியதையும் வேலைத் திறமையும் ஏற்பட்டபோது, அம்மையார் வெளிவேலைக்குப் போகாமல் இருக்க நேர்ந்தது. ஆன போதிலும் பின்னால் புருஷன் வண்டி ஓட்டிக் கொண்டு அடிக்கடி வெளியூர்களுக்குப் போவதை சகிக்காத அம்மையாரின் தகப்பனார் ஒரு சிறு தட்டுக்கடை வைத்துக் கொடுத்தார். அந்தக் கடை ஒரு வண்டிப் பேட்டையில் வைத்தால் தன்னுடைய தோழர்களாயிருந்த வண்டிக்காரர்கள் தம்மிடம் சாமான் வாங்குவார்கள் என்று கருதி, சட்டிபானை, அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய்ப் பொடி, விறகு முதலிய சாமக்கிரியை சாமானும் ஒருங்கே வைத்து வியாபாரம் செய்தார்கள்.

கடை வியாபாரம்

இந்த சமயம் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டன. இந்த நிலையில் அந்தக் கடையில் நல்ல லாபம் கிடைத்தாலும் பிறகு போட்டி ஏற்பட்டதாலும் அந்தக் கடையை அப்படியே மற்றொருவருக்கு விற்றுவிட்டு லாபப் பணத்தையும் கை முதல் பணத்தையும் சேர்த்து ஈரோடு பஜார் ரோட்டில் ஒரு மளிகைக்கடை வைத்தார். அம்மையைக் கை பிடித்த சம்பவத்தால் கல்தச்சு வெங்கிட்டன் என்ற பெயர் மாறி மளிகைக்கடை வெங்கிட்ட நாயக்கரானார். அதில் மூன்று வருடத்திலேயே மற்றவர்கள் பொறாமைப்படும்படியான லாபமடைந்தார். ஒரு சிறு குச்சு- அதாவது கதவு இல்லாமல் தட்டி வைத்து இரவு முழுவதும் நாயை விரட்டிக் கொண்டிருக்க வேண்டிய குடிசை மாறி ஒட்டுவில்லை கட்டட வீடும் இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள நல்ல வயல் நிலமும் உடையவராயினார்.

பிள்ளை வரம் கேட்டு ஸ்தல யாத்திரை

இந்த சமயம்தான் அம்மையாருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துபோய் “ஸ்தல யாத்திரைகள்”, “தவங்கள்” செய்ய “வரடி”க்கல் சுற்றி நிலத்தை வழித்து அதில் சாப்பாடு போட்டுப் பிசைந்து சாப்பிட்டு, சந்நியாசிகளின் எச்சிலைச் சாப்பிட்டு “வரம்” பெற்று ஈ.வே. கிருஷ்ணசாமியையும் ஈ.வெ.ராமசாமியையும் பெற்றிருந்த காலம் என்றாலும், அம்மையாருக்குள்ள பிள்ளை ஆசையால் மூத்த பிள்ளை ஒன்றே போதும் என்று கருதி அதற்கே தனது முலைப்பால் முழுவதும் கொடுக்க ஆசைப்பட்டு இளைய பிள்ளையாகிய ராமனை மற்றொரு குழந்தையில்லாத அம்மையாருக்கு - அதாவது, தனது புருஷனின் சிறிய தகப்பனார் மனைவி ஆகிய ஒரு விதவைக்கு ஒரு சிறுவீடும் சிறிய நிலமும் இருந்த காரணத்துக்கு ஆக அவர்களையே வளர்த்துக் கொள்ளும்படி இனாமாய்க் கொடுத்துவிட்டார்கள். அந்தக் காரணத்தாலேயே ராமன் (ஈ.வெ.ராமசாமி) பள்ளிக்கு அனுப்பப்படாமல் தெருத்தெருவாய்ச் சுற்றவும், கேள்வி கேட்பாடு இல்லாமல் அலையவும், “கம்மனாட்டி வளர்ப்பது கழுதைக் குட்டிதான்” என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு உருவாரமாக இருந்து வரவும், மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியை மிக அருமையாய் செல்லமாக வளர்க்கவும் ஆன நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்த சமயம்தான் - அதாவது, இந்த இரு குழந்தைகளும் பிறந்த சமயம்தான் வெங்கிட்ட நாயக்கருக்குப் பெரிய செல்வம் பெறும் சந்தர்ப்பமும் பெருகிவந்த காலமுமாகும். அதாவது, கடைசியில் சொன்ன மளிகைக்கடை வியாபாரமானது வளர்ந்துவிட்டது. வீடு, வயல், தங்க நகைகள் கேட்போர் மனமும் பார்ப்போர் கண்களும் திடுக்கிடும்படியான தோற்றமாய் இருந்தது தான். எப்படியாவது அந்த மளிகைக் கடை நடக்கும் கட்டடத்தைப் பிடுங்கிக் கொண்டால் தங்களுக்கு அந்த லாபம் கிடைக்கும் என்று கருதிச் சிலர் அந்தக் கடையைக் கட்டடக்காரனிடம் அதிக வாடகை வைத்துக் கேட்க ஆரம்பித்தார்கள். அம்மையும் புருஷனும் யோசித்து கடையை சகல சாமானுடனும் பாக்கியுடனும் ஒப்புக்கொள்ளுபவர்களுக்குக் கொடுத்து விடுவதாய் விலை கூறினார்கள். அதற்கு ஏற்பட்ட போட்டியில் நல்ல விலை கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு உடனே ஒரு மண்டிக்கடை அதாவது மொத்த வியாபாரக்கடை வைக்க யோசித்தார்கள்.

மண்டி வெங்கிட்ட நாயக்கர் தன் கடையில் வியாபாரம் செய்தால் சின்னத்தாயம்மாள் வீட்டில் நெல்குத்தும் கொட்டணம், துவரை உளுந்து உடைக்கும் வேலை, விளக்கெண்ணெய் காய்ச்சி ஊத்தும் வேலை முதலியவைகளில் எப்பொழுதும் 20, 30 பேர் வேலை செய்யும்படியான தொழில் செய்து புருஷனைப் போலவே தானும் வருஷம் முழுவதும் சிறிதாவது பணம் சம்பாதித்து புருஷனுக்குக் கொடுத்தே வருவார்கள். பணம் சேர்ந்தவுடன் மதபக்தி, மதச்சின்னம், விரதம், நோன்பு, முதலியவைகள் தானாகவே தேடி வருவது வழக்கமல்லவா? அதுபோல் அம்மையார் மிகவும் பக்தி உடையவரானார். விரதங்கள் அதிகமாய் அனுஷ்டிக்கத் தொடங்கினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கும் நாமம் பலமாகப் பட்டை பட்டையாய்த் திகழ்ந்தது. இதன் மத்தியில் வீட்டில் செல்லமாய் வளர்க்கப்பட்ட மூத்தபிள்ளை கிருஷ்ணசாமியும் பாகவதராக ஆகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் அதாவது வைத்த மண்டிக்கடை நன்றாய் நடக்க ஆரம்பித்துச் சிறிது எதிர்பார்ப்பதற்கு மேல் லாபம் வர ஆரம்பித்தவுடன் சின்னத்தாயம்மாள் சின்னப்பிள்ளை ராமனை (ஈ.வெ.ராமசாமியை) ஒரு சிறு சண்டை காரணமாக (தத்து)க் கொடுத்துவிட்ட அம்மாளிடமிருந்து பிடுங்கிக்கொண்டார்கள்.

ராமனை வளர்த்த அம்மாள் ஊர்ப்பஞ்சாயத்து கூட்டினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கு ஒன்றும் தட்டிச் சொல்ல முடியவில்லை. சின்னத்தாயம்மாள், “இரண்டு கண்ணு தான் எனக்கு இருக்கிறது. இதில் ஒன்றைக் கொடுக்க முடியுமா? முடியாது போ” என்று சொல்லி விட்டார்கள். முடிவில் ராமனை 9 வயதில் கைப்பற்றினாலும், அவன் விதவை வளர்த்த பிள்ளையாய் ஊர் சுற்றியாய் “லோலனாய்”த் திரிந்ததால் படிப்பு இல்லை, படிப்பு இல்லை. அது மாத்திரமா? இனிமேல் படிக்கவும் லாயக்கில்லாத சோதாவாய் ஆகிவிட்டான். இருந்தபோதிலும் பள்ளியில் வைத்து, வீட்டில் வாத்தியார் வைத்துப் பார்த்தார்கள். வாத்தியாருடன் சண்டை, பிள்ளைகளுடன் பலாத்காரம் - அடிதடி, கடைசியாய் “வாத்தியாரை வைவதில்லை” “பிள்ளைகளை அடிப்பதில்லை” என்கிற வாசகம் ஆயிரம் தடவை, அய்யாயிரம் தடவை “தண்டக்காப்பி” எழுதுவதே வேலையாய் இருந்ததால் ராமனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டு மண்டிக் கடையில் அதாவது தரகு வியாபார இலாகாவில் மஞ்சள், மிளகாய் ஏலம் கூறும் வேலையில் போட்டார்கள். இருந்தாலும் ராமன் எங்கு வளர்த்த தாயிடம் போய் விடுவானோ என்று சின்னத்தாயம்மாள் சின்ன மகனுக்குச் சிறிய சலுகை காட்டி பொய் அன்பாவது காட்டியே வருவார்கள்.

மதிப்பு உயர்ந்தது

எப்படியோ பணம் சேர்ந்துகொண்டே வரும் இந்த சந்தர்ப்பம்தான் வெங்கிட்ட நாயக்கர் என்கிற பெயர் மாறி நாயக்கர் ஆனதும் சின்னத்தாயம்மாள் என்கிற பெயர் மாறி நாயக்கம்மா என்கிற பெயர் ஏற்பட்டதுமாகும்.

அம்மையாருக்குத் தெய்வபக்தி கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. நாயக்கரும் அம்மா சொன்னபடி ஆடி ஆக வேண்டும்.

காடு மேடெல்லாம் கோயில் சத்திரம் கட்ட ஆரம்பித்தார். பார்ப்பனர்களின் புகழ் உரைகளுக்கு அடிமைப்பட்டு பல குருமார்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு கலியாணத்தின் போதும் தருமக் கல்யாணங்கள் செய்வார்கள். நாயக்கர் (புருஷன்) ஏதாவது தட்டிச் சொன்னால் “நீங்கள் பணம் கொடுக்க வேண்டியதில்லை, என் பணத்தில் செய்யுங்கள்” என்று எடுத்தெறிந்தாற்போல் பேசி விடுவார்கள். வாரம் ஒரு காலட்சேபம் ராமாயண பாரத வாசகம், எங்கெங்கோ திரியும் சன்னியாசிகளுக்கும் பாகவதர்களுக்கும் சதாசர்வகாலமும் உலையில் நீர் கொதித்தவண்ணமாய் இருக்கும் படியான தண்டச்சோற்றுச் சத்திரம் போல் வீட்டை நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் ஒரு விஷயம் குறிப்பிடத்தக்கது. இளைய மகன் ராமனிடம் எவ்வளவு அன்பு காட்டினாலும் அம்மையார் ராமன் தொட்ட செம்பு- டம்ளர் ஆகியவைகளைக் கழுவியே வைப்பார்கள். ராமனை சமையல் வீட்டிற்குள் விடமாட்டார்கள். அப்பொழுதே அவன் ‘ஜாதி கெட்ட’ பயலாய் விளங்கினான்.

ராமனுக்கு ஆகவே சமையல் வீட்டுக்குள் வேறு யாரும் நுழையக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் அம்மையார் மாமிசம் சாப்பிட மாட்டார். ராமனுக்கு தினமும் மாமிசம் வேண்டும். ஆதலால் ராமனுக்குக் கல்யாணம் ஆனவுடன் அவனுடைய “அனாச்சாரத்துக்கு” ஆகவே அம்மையார் ராமனை வேறு வைத்துவிட்டார்கள்.

சதா சர்வகாலமும் தன் வயிற்றில் இப்படிப்பட்ட பிள்ளை ராமன் பிறந்ததற்குத் துக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

பொதுவில் சொல்ல வேண்டுமானால் அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள், நன்றாய்ச் சம்பாதித்து நன்றாய் செலவு செய்வார்கள். பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள், அளவிற்கு மீறிய ஆசாரங்களை அர்த்தமில்லாமல் பின்பற்றி வந்தவர்கள். எத்தனையோ பேரைத் திருத்திய ராமனால் அம்மையாரிடம் தன் கொள்கையை சொல்லுவதற்குக்கூட தைரியம் ஏற்படும்படியாக அம்மையார் இடம் கொடுக்கவில்லை.

சின்ன பிள்ளையிடம் பரிவு

கடைசி வயதில் கூட அம்மையாரைப் பார்க்க வந்தவர்களிடம் என் மகன் ராமனைச் சிறிது பார்த்துக் கொள்ளுங்கள். இளம்கன்று பயமறியாது என்பது போல் கண்டபடி திரிகிறான் என்று ஆவலாகச் சொல்லியே வருவார்கள்.

ஒரு காலத்தில் மவுலானக்கன் ஷவுக்கத் அலி, முகமது அலி அம்மையாரின் கையில் தங்கள் தலையை ஒட்ட வைத்து வாழ்த்தும்படி கேட்டபோது, தன்னை அவர்கள் தொட்டு விட்டதற்காக முகத்தைச் சுளித்துக் கொண்டார். இதை நான் வெளிப்படையாய் எடுத்துக் காட்டி கேலி செய்து, அம்மையாரை மன்னிப்புச் சொல்லும்படி செய்தேன். அதனால் அரசியல் தலைவர்களான காந்தியார் முதல் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் அங்குத் தன்னைத் தொட்டு விடுவார்களோ என்று பயந்து ஒடுங்கி ஒரு மூலையிலேயே நின்றுதான் அவர்களுடன் பேசுவார். மூட நம்பிக்கைகளுக்கும் குருட்டு அனாச்சாரங்களுக்கும் சாதகமாய் இருந்த என் தாயார் 95 வயது வாழ்ந்து 28.7.36 செவ்வாய் இரவு 12 மணிக்கு முடிவெய்திவிட்டார்.

(பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் எழுதிய இக் கட்டுரையை அவரது 82-ஆம் ஆண்டு பிறந்த நாள் வெளியீடாக, இருளப்ப கோனார் நினைவு படிப்பகம், 19 இராமாயணச் சாவடி தெரு, மதுரை ஒரு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டுள்ளது.  இந்தப் பிரசுரம் சென்னை, பெரியார் திடலில் உள்ள படிப்பகத்தில் கண்ணாடிச் சட்டம் போட்டு வைக்கப்பட்டுள்ளது.  அதை நகலெடுத்து அனுப்பியவர் க.ரவீந்திரன்.)

Pin It