உலக அளவில் தனது முன்னோடியான ஆய்வு களுக்காக அறியப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங் களில் ஒன்று தலைநகர் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இங்கு உலக மொழிகளைப் பயிற்றுவிப்பதிலும் மொழிசார்ந்த வல்லுநர்களை உருவாக்குவதிலும் மொழிப்பள்ளி (School of Language, Litreature & Culture Studies) திறம்பட செயல்படுகிறது. இங்குப் பெரும்பாலான உலக மொழிகள் கற்பிக்கப் படுகின்றன. இப்பள்ளியின் ஒரு பிரிவாக உள்ள இந்திய மொழிகள் மையத்தில் உள்ள தமிழ்ப் பிரிவில் முனைவர், இளமுனைவர் பட்ட ஆய்வுப் பிரிவுகளில் தற்பொழுது 32 மாணவர்கள் உள்ளனர். இவ்வாய்வு மாணவர்கள் ஒப்பாய்வு, மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு நூல்களின் திறனாய்வு நூலடைவு ஆகிய ஆய்வுப் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தை இலக்கியம், பயண இலக்கியம், கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையை உலக அளவில் ஓங்கியுரைக்கும் நோக்குடன் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களைப் பிற மொழி இலக்கண, இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆராய்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும். இவ்வகை ஆய்வுகள் உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழின் தொன்மையையும் இலக்கிய வளத்தையும் முறையான சான்றாதாரங்களுடன் எடுத்துரைக்க வழிவகை செய்யும். அந்த வகையில் தமிழ் மொழியில் முதலில் கிடைக்கும் இலக்கண நூலாகக் கருதப்படுகிற தொல்காப்பியத்துடன் கிரேக்கம், அறபு, பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் மொழிகளில் உள்ள இலக்கண நூல்களை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இலக்கண ஒப்பாய்வுகள்

உலக மொழிகளில் தொன்மை வாய்ந்த கிரேக்க மொழியின் முதல் இலக்கண நூலாகக் கருதப் படுவது டயோனிஸிஸ் திராக்ஸ் என்பவரின் ‘டெக்கணே கிராமட்டிக்கே’ என்பதாகும். அந் நூலில் உள்ள இலக்கணப் பகுதிகளைத் தொல் காப்பியத்துடன் ஒப்பிட்டு முனைவர் பட்ட ஆய் வாளர் ஒருவர் ஆய்வு செய்து வருகிறார். அதே போன்று செவ்வியல் மொழியான அறபு மொழியின் முதல் இலக்கண நூலான அல்கிதாபுடன் தொல்காப்பிய ஒலியனியல் பகுதியை ஒப்பிடும் ஓர் ஆய்வும் இங்கு நடைபெறுகிறது. பிராகிருத மொழியின் முதல் இலக்கண நூலான ‘பிராகிருதப் பிரகாசம்’, பாலி மொழியின் முதல் இலக்கண நூலான ‘கச்சாயணம்’, சமஸ்கிருத ‘ஐந்திற’ மரபில் அமைந்த இலக்கண நூலான ‘காதந்திரம்’ ஆகியவற்றுடன் தொல் காப்பியத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். ஒரு மொழிக்குள் உள்ள இலக்கணங்களை ஒப்பிட்டு ஆராயும் முறைகளிலிருந்து வேறுபடும் இவ்வாறான ஆய்வுகள், தொல்காப்பியத்தின் இலக்கணச் சிறப்பு, உலக அளவில் பல்வேறு தொன்மை மொழிகளின் இலக்கணப் பிரதிகளுடன் அது பகிர்ந்துகொள்ளும் பொதுமைக் கூறுகள், பிற இலக்கணங்களுக்கும் தொல்காப்பியத்திற்குமுள்ள தனித்தன்மைகள் முதலானவற்றை எடுத்துரைப்பனவாக அமையும்.

மொழிபெயர்ப்பு சார்ந்த ஆய்வுகள்

வளர்ந்து வரும் அறிவுத்துறைகளில் மிக முக்கிய மான ஒன்றாக உள்ள மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆய்வு மாணவர்கள் பலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உலகத்தை இணைக்கும் இணைப்புக் கருவிகளுள் முக்கியமான ஒன்றாக இன்று விளங்கி வரும் மொழிபெயர்ப்பு இன்று அனைத்துத் துறை களிலும் தவிர்க்கமுடியாத முக்கிய ஒன்றாக உள்ளது. மொழிபெயர்ப்பின் தேவையும், அது குறித்த ஆய்வு களும் விவாதங்களும் இன்றளவில் ஒரு முக்கிய ஆய்வுப்பரப்பை அறிமுகப்படுத்துகின்றன. மேற் கத்திய நாடுகளில் உள்ள மொழிபெயர்ப்பியல் துறையில் நடைபெறும் ஆய்வுகள், இந்தியச் சூழலில் காலந்தோறும் நடைபெறும் மொழிபெயர்ப்புகளை வேறுவகையான கோணங்களில் அணுகவேண்டிய தேவையை அறிவுறுத்தும் வகைமாதிரிகளாக உள்ளன. மேலும், இந்தியா போன்ற பன்மொழிச்சூழல் உள்ள நாட்டில் மொழிபெயர்ப்பு இலக்கியத் தளத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இலக்கியத் துறையில் வளர்ந்து வரும் ஒப்பிலக்கிய ஆய்வுகளுக்கும் அடிப் படையாக இருந்து வரும் மொழிபெயர்ப்புத் துறையைக் கவனத்தில் கொண்டு அதனை மையப்படுத்தி ஆய்வுப் பணிகளை இங்குள்ள தமிழ்ப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, உருது, கொங் கணி, குடூக் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்கும் ஊடாக நடைபெற்றுள்ள மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுகளை மாணவர்கள் தற்போது மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு மொழியிலிருந்து குறிப்பிடும்படி மொழிபெயர்ப்புப் படைப்புகள் தமிழ் மொழிக்கு வந்துள்ளன. அவ்வாறு தமிழுக்கு வந்துள்ள படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும், பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு ஓர் இலக்கியப் பிரதியை மொழிபெயர்க்கும்போது ஏற்படக்கூடிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் குறித்தும் ஆய்வாளர் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் அதிகம் மக்கள் பேசப்பட்டு வருகிற மொழியான இந்தி மொழியின் முக்கிய இலக்கிய ஆளுமைகளான பிரேம்சந்த், பாரதேந்து ஹரிச்சந்திரர், மோகன் ராகேஷ் முதலானோரின் இலக்கியப் பிரதிகளை எடுத்துக் கொண்டு அதனைத் தமிழில் நேரடியாக மொழிபெயர்த்தும், மொழிபெயர்க் கையில் ஏற்படும் சிக்கல்களை ஆராய்ந்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

இந்திய மொழிகளில் மிகுதியும் கவனம் பெறாமல் உள்ள இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குச் சிறுகதைகளை மொழிபெயர்த்தும், வடதிராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த குடூக் மொழியிலிருந்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அதனை நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதன்வழி மொழிபெயர்ப்புச் சிக்கல்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யும் நோக்கிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலக்கிய ஒப்பாய்வுகள்

எழுதும் முறையில் மற்ற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் உருது மொழியில் நவீன காலத்தின் ஆரம்பத்தில் எழுதிப் புகழ்பெற்ற புரட்சிகர இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயுடன், தொடக்ககால இஸ்லாம் தமிழ்ப் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா பேகத்துடன் ஒப்பிட்டு மேற்கொள்ளப்படும் ஆய்வு, தமிழ் ஒப் பிலக்கிய ஆய்வுச்சூழலில் குறிப்பிடத்தக்கதாகும். நவீனத்துவம் அறிமுகமாகும் குறிப்பிட்ட காலத்தில் இந்திய அளவில் பெண்ணியக் குரல்கள் எவ்வாறு ஒலித்தன என்பதை எடுத்துரைத்து இவை போன்ற ஆய்வுகள் துணைசெய்யும். அதேபோன்று உலகில் அதிக மக்களால் பேசப்பட்டு வரும் சீன மொழியின் இலக்கியச் சிற்பி லூசூனுடன், தமிழின் தேர்ந்த சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனை ஒப்பிட்டு ஒருவர் ஆய்வு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தலித் இலக்கிய ஒப்பாய்வுகள்

இன்று சமூக மாற்றத்தில் ஓர் அங்கமாக விளிம்பு நிலை மக்கள் குறித்துப் பேசும் தலித் இலக்கியங் களிலும் ஒப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தி - தமிழ் தலித் கவிதைகளை ஒப்பிட்டும்,

கே.ஏ.குணசேகரன் தமிழில் எழுதியுள்ள தலித் தன் வரலாற்றுப் படைப்பான ‘வடு’ என்ற நூலையும், இந்தியில் ஓம் பிரகாஷ் வால்மீகி எழுதிய தலித் தன்வரலாற்றுப் பிரதியான ‘ஜூட்டான்’ என்ற நூலையும் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வரு கிறார்கள். இந்தி - தமிழ் தலித் பெண்ணியத்திலும் ஆய்வாளர் ஒருவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பிறமொழி இலக்கண ஒப்பாய்வு, மொழி பெயர்ப்புச் சிக்கல்கள், இலக்கிய ஒப்பாய்வுகள் அதன் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்பு என நடை பெறும் ஆய்வுகளை ஒருங்கே வைத்து நோக்கு மிடத்து, இந்தியச் சூழலில் ஒப்பிலக்கிய ஆய்விற் கான தேவையை உணர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளாக இவற்றைக் கருதவேண்டும். ஒரே இடத்தில் பலமொழிகளைப் பயிலும், பேசும் சூழல், இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளத்தளம் அமைத்துத் தருகின்றன. மேலும் இச்சூழலைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் மொழிபெயர்ப்பு, இலக்கிய ஒப்பாய்விற்காகத் தான் தேர்வு செய்து கொண்ட மொழியைத் தன் ஆய்வுக் காலத்தில் கற்று ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிபெயர்ப்பு நூல்கள்

திறனாய்வு நூலடைவு

தகவல் பரிமாற்றத்திற்கும், இலக்கியச் சிந்தனைப் பரவலாக்கலுக்கும் அடிப்படையாக விளங்கும் மொழிபெயர்ப்பின் துணைகொண்டு உலக மொழி களுக்கிடையே பரிமாற்றங்கள் குறிப்பிடும்படி நடந்தேறி வருகின்றன. தமிழ் மொழியிலும் மொழி பெயர்ப்பு சார்ந்த இலக்கிய ஆக்கங்கள் பெருமளவு வந்துகொண்டிருக்கின்றன. ஆதலாலேயே பல மொழிகளின் இலக்கியங்களை இன்று நாம் தமிழ் மொழியிலேயே வாசிக்க முடிகிறது.

இந்நிலையில், தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்பின் மூலம் வந்துள்ள நூல்களை நாம் படித்து இன்புற மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ள தகவல் களைப்பற்றி அறிந்துகொள்வது அடிப்படையாகும். அதற்கான மொழிபெயர்ப்பு நூற்றொகை ஒன்று தமிழுக்கு அவசியமான ஒன்றாகும். சிவகாமி அவர்கள் 1983ஆம் ஆண்டு வரை தமிழுக்கு வந்துள்ள மொழி பெயர்ப்பு நூல்களைத் தொகுத்து நூலாக வெளி யிட்டார். ந.முருகேச பாண்டியன் உலக மொழி களிலிருந்து தமிழ் மொழிக்கு வந்துள்ள நூல்களைத் தொகுத்து (1990ஆம் ஆண்டு வரை) வெளியிட்டார். இவ்விரு நூல்களைத் தவிர்த்து இப்பணியில் எவரும் ஆர்வம் காட்டாத நிலையில் தேக்கமாகியிருக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுப்பினைத் திறனாய்வு நூலடைவாகவே செய்யும் தொகுப்பு ஆய்வினை இங்குள்ள தமிழ்ப் பிரிவு ஆய்வு மாணவர்கள் மேற் கொண்டு வருகின்றனர். பிரெஞ்சு, சீனம், ஜப்பான், சமஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பின் மூலம் தமிழ் மொழிக்கு வந்துள்ள நூல்களைத் திரட்டி, திறனாய்வு நூலடைவு ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.

சிறப்பு ஆய்வுகள்

மேற்கத்திய நாடுகளில் முக்கியத்துவம் பெற்ற குழந்தை இலக்கியம், அது குறித்த ஆய்வுகள் தமிழ் ஆய்வுச் சூழலில் பெயரளவில் மட்டுமே உள்ளன. இங்குள்ள தமிழ்ப் பிரிவில் ‘குழந்தை இலக்கியத்தில் குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வாளர் விருதுநகர் மாவட்டப் பள்ளிக் குழந்தைகளிடம் கள ஆய்வு மேற்கொண்டு தகவல்களைத் திரட்டி அவர் களின் மொழித்திறன் வளர்ச்சியைக் கண்டறியும் நோக்கில் ஆய்வு செய்து வருகிறார். நாளைய சமூக மாற்றத்திற்கான ஆதாரம் குழந்தைகளின் கல்வி யிலேயே இருக்கிறது. அதில் குழந்தை இலக்கியத்தின் பங்கும் மகத்தானது. குழந்தை இலக்கியம் குழந்தை களின் மொழித்திறன் வளர்ச்சியில் எங்ஙனம் பங்கு பெறுகிறது என்பதை இவ்வாய்வு தெளிவுபடுத்தும்.

பயண இலக்கியம் குறித்த பங்களிப்பாக ஆய் வாளர் ஒருவர் ‘தமிழ்ப் பயண இலக்கியங்களின் வட இந்தியச் சித்திரிப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை வந்துள்ள தமிழ்ப் பயண நூல்களில் வட இந்தியச் சித்திரிப்பினை இவ்வாய்வு விளக்கும். வரலாறு, சமூகப் பண்பாடு, நுட்பமான அழகியல் செய்திகள் எனப் பல புதிய தகவல் களுக்கு இவ்வாய்வு அடிகோலும்.

வரலாற்றினை அறிய உதவும் கூறுகளில் கல்வெட்டுகள் முக்கிய இடம்பெறுகின்றன. கல்வெட்டு களில் இடம்பெற்றுள்ள செய்திகளின் மூலமே பழைய வரலாற்றினை நாம் மீட்டுருவாக்கம் செய்துகொள் கிறோம். முக்கியத்துவம் பெற்ற கல்வெட்டுக் குறிப்பு களில் இடம்பெற்றுள்ள சட்ட மொழியினை ஆய்வு செய்து வருகிறார் ஆய்வாளர் ஒருவர். சட்டம் பயின்ற இவர் கள ஆய்வின் வழி கல்வெட்டுகளில் சட்ட மொழியை ஆராய்கிறார்.

இவ்வாறு பல்வேறு துறைசார்ந்த ஆய்வுகள் இங்குள்ள இந்திய மொழிகள் மையத்தின் தமிழ்ப் பிரிவில் நடைபெறுகின்றன. தமிழ் ஆய்வுச் சூழலில் புதுவெளிச்சத்தைப் பாய்ச்சும் ஆய்வுகளாக இவ் ஒப்பிலக்கிய, மொழிபெயர்ப்பு மற்றும் பிறதுறை ஆய்வுகள் அமையும்.

Pin It