“விதியே வாழி! விநாயகா வாழி! பதியே வாழி! பக்தி வாழி!” என்றெல்லாம் பாடிய பாரதியார், ஆத்திசூடியில் “சோதிடந்தனை இகழ்” எனக் கூறினார்.

இராசகோபாலாச்சாரியாரும் கூட சோதிடம் ஒரு மூடநம்பிக்கையே என்றார். “நம் வீட்டு எருமை, கன்று ஈன்ற நேரத்தைக் குறித்துக் கொடுத்தால்கூட, ஜோதிடன் ஜாதகம் கணித்துக் கொடுப்பானே தவிர, இது எருமை சோதிடம் என்று கூறமாட்டான்” என்றார் தந்தை பெரியார்.

அண்ணனின் ஜாதகத் தையும், தங்கையின் ஜாதகத்தையும் தந்து, பொருத்தம் பாருங்கள் என்று கூறினால், பத்துக்கு எட்டரை பொருத்தம் இருக்கிறது என்றுதான் சோதிடன் கூறுவானே தவிர, உடன் பிறந்தவர்களின் ஜாதகம் இவை என எந்த சோசியனும் கூறுவது இல்லை. ஆகவேதான் அதனை இகழ வேண்டும் என்றனர்.

மாறாக, அதனைப் பாடமாக்கி, கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர் என்றால்... இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டது, பி.ஜே.பி ஆட்சி ஆறாண்டு காலம் நடந்த போதுதான்! ஆர்.எஸ்.எஸ்.காரரான முரளி மனோகர் ஜோஷி கல்வித் துறையைக் கவனித்த அமைச்சராக இருந்தபோது அதற்கான மேடையை அமைத்தார். இந்த அறிவியல் படித்தால் பி.எஸ்.சி. பட்டம் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்தார். எல்லாரும் எதிர்த்தனர். இது எப்படி அறிவியலாகும் எனக் கேட்டனர். பதில் கூற முடியாத முரளிமனோகர் ஜோஷி பணிந்து பேசினார்.

இந்தக் கலையைக் கற்றுத்தந்தால் பல்கலைக்கழக மான்யக் குழு ((U.G..C)) நிதி கூடுதலாக வழங்கும் என்று தேன் தடவினார். பல்கலைக் கழகங்கள் சில ஈக்களாகச் சிக்கின. அதில் ஒன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்!

நாள், நட்சத்திரம் பார்த்து பிரும்மரிஷி வசிட்டன் ஜோசியம் கூறியவாறு, ராமன் பட்டாபிசேகம் நடை பெறவில்லை... காட்டுக்கு அனுப்பப் பட்டான். ‘அக்மார்க்’ முத்திரை குத்தும் அருகதை பெற்றவன் வசிஷ்டன். அவன் கணித்ததே கவிழ்ந்து போனது கைகேயியால்!

முறைப்படியும் வழக்கப்படியும் அண்ணன் நாடாள வேண்டும்.ஆனால் ஜாதகப்படி தம்பிதான் நாடாள்வான் என்றான் ஜோதிடன். தம்பி துறவு மேற் கொண்டான். அண்ணன் ஆட்சியில் அமர்ந்தான். நிமித்தகன் சொன்னதை மாற்றிக்காட்டினான் ‘சிலப்பதிகாரத்தில்’!

கேரளப் பகுத்தறிவாளர் ஏ.டி. கோவூர் 1969இல் விடுத்த அறைகூவலை ஏற்று, சோதிடம் அறிவியல் என்பதை மெய்ப்பித்துக்காட்ட எவரும் முன்வரவில் லையே! பெங்களூர் நகரில் எட்டு கூட்டங் களில் பேசி இந்த அறைகூவலை 1978இல் புதுப்பித்தார் கோவூர். இங்கிலீஷில் ஜோசியம் கூறி, ஏடு நடத்தி வந்த உலகப்புகழ்(!) பி.வி.ராமன் என்பவர் கூட பெங்களூர்க்காரர்தான். அறைகூவலை ஏற்கவில்லையே!

வைத்தீசுவரன் கோயில் என்ற ஊரில் நாடி ஜோதிடம் கூறிவந்த பூசமுத்து என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து கணக்கில் காட்டப்படாத பல இலட்ச ரூபாய்த் தொகையை அள்ளிப் போனார்கள். “பசிக்காமல் இருக்க வரம் தருவேன், எனக்குப் பழைய சோறு பிச்சை போடுங்கள்” என்று ஒருவன் சொன்னதைப் போல என்பார் தந்தை பெரியார். அதைப்போல ஊருக்கு ஜோசியம் சொன்ன ஆள், தனக்கு வருவதை உணர வில்லையே!

காந்தியாரும், இந்திராகாந்தியும், ஆபிரகாம் லிங்கனும், கென்னடியும் சுட்டுக் கொலை செய்யப்படுவார்கள் என்று எந்த நாட்டு ஜோதிடனும் கூறவில்லையே!

வானவியல் ((ASTRONOMY) என்பது வேறு. சோதிடம் ((ASTROLOGY) என்பது வேறு. முன்னது அறிவியல். பின்னது பொய்யியல். நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர்கள் வெளிப்படையாக அறிவித்த பிறகும், பலருக்கு அறிவு வரவில்லையே...---?-

வானவெளியில் ஒன்பது கிரகங்கள் மட்டுமே உள்ளனவா? ஹம்ஃப்ரி என்று பெயர் வைக்கப்பட்ட பத்தாம் கிரகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவர 204 நாள்கள் ஆகிறது என்பது உள்படப் பலவற்றையும் கண்டறிந்து உள்ளனர். இது ஜாதகத்தில் இடம் பெறவில்லை! ராகு, கேது என்பவை ஆங்கில சோதிடத்தில் இடம் பெறவில்லையே!

சூரியனைக் கிரகம் என்கிறது சோதிடம். அது நட்சத்திரம் என்கிறது அறிவியல். பின் எப்படி சோதிடம் அறிவியல்?

சந்திரன் கோள் அன்று! துணைக் கோள்தான். ஆனால் அதனைக் கோள் என்றே கணக்குப் போடுகிறது சோதிடம்! பூமிக்கு ஒரு சந்திரன், செவ்வாய்க் கோளுக்கு இரண்டு சந்திரன், வியாழ னுக்கு 16, சனிக்கு 22, யுரேனசுக்கு 15, நெப்டியூன் கோளுக்கு 3 என நூற்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் வான வெளியில் உண்டு. எந்தச் சந்திரன் சோதிடத்தில் சேர்த்தி? நாம் கண்ணால் காணும் சந்திரனை மட்டும் சேர்த்தால் போதுமா?

பூமி ஒரு கோள்(கிரகம்)! பூமியை சோதிடத்தில் கிரகமாகக் கணக்கில் சேர்க்கவில்லையே!

உலகில் அரசியல் நிலையைச் சுக்கிரன் முடிவு செய்கிறதாம். போர்களைச் செவ்வாய் உண்டாக்குகிறதாம்! தர்மச் செயல்களுக்கு குருவாம்! அதர்மச் செயல்களுக்குச் சுக்கிரன், செவ்வாய், ராகு கிரகங்களாம்!நாடு பிடிக்கும் வெறியும், பேராசை களும் உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களுக்குக் காரணிகள். நபர்களின் வக்கரிப்புகளுக்கு நாடு எப்படிப் பொறுப்பு-?

இவர்களது பஞ்சாங்கம் 30 நாழிகைக்கு மட்டும்தானே கணித்து வைத்திருக்கிறார்கள்! சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள 12 மணி நேரம், 30 நாழிகைக்கு மட்டும்தானே! உதயமோ, அஸ்தமனமோ சூரியனுக்குக் கிடையாது. அது தோற்றப்பிழை! ஆனால் அதனடிப் படையில் எதையோ பிதற்றுவது அறிவியலா?

சோதிடர்களை நற்செய்தி கூறுவோர் ((SOOTHE SAYERS) என்கின்றனர் ஆங்கிலேயர்கள்! இங்கோ, இந்தியா விலோ, சோதிடர்கள்தாம் எல்லாமுமே! அத்தகைய மடமை ஒழியவேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். கல்விச்சாலைகள் அறிவை வளர்க்க வேண்டும். பகுத்தறி வைப் பயன்படுத்திப் படிப்போரை ஊக்குவிக்க வேண்டும். சிலகோடி நிதிக்காகப் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் பாடத்திட்டங்களை ஏற்கக்கூடாது, மறுதலித்திட வேண்டும்! அந்த நாளும் வந்திடாதோ?

Pin It