புல்லறிவை வழிபடுவோர் போக்கு மாற
புகலரிய அறிவாண்மைப் பொங்கல் செய்வோம்
அல்மனத்துக் கெடுமதியர் “தர்மம்” நீங்க
அறம்பேசும் முப்பாலின் பொங்கல் வைப்போம்
கல்மனத்துக் கொடியோர்தம் இழிவு வீழ
கனித்தமிழின் பண்பாட்டுப் பொங்கல் செய்வோம்
தொல்மரபின் தமிழ்க்குடிகள் ஈழம் தன்னில்
துயர்நீங்கி எழுந்திருக்கப் பொங்கல் செய்வோம்!
வெற்றுரையால் விளம்பரத்தால் நாட்டை ஏய்க்கும்
வஞ்சகத்தின் முகத்திரையைக் கிழித் தெறிந்து
கற்றவர்கள் அஞ்சாமல் களம்இ றங்க
காலத்தைக் குறிவைத்து வெற்றி கண்டு
நற்றமிழின் இலக்கியங்கள், ஆய்வு மையம்
நனிசீர்மை படைப்பதற்கிங் கொன்றாய் நின்று
சுற்றுகின்ற ஞாயிறுபோல் உழைக்கும் தூயோர்
தொண்டினிக்க, அரசமையப் பொங்கல் செய்வோம்!