Amrutha and Kousalya2016ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் ஒரு சாதி ஆணவப் படுகொலை நடைபெற்றது. மனைவி கவுசல்யாவின் கண் முன்னால் அவரின் கணவர் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் கவுசல்யாவின் தந்தை, உறவினர்கள்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், தெலுங்கானாவில் இதே போன்று ஒரு சாதி ஆணவப்படுகொலை நடைபெற்றிருக்கிறது. ஐந்து மாதங்கள் கருவுற்றிருந்த அம்ருதாவின் கண் முன்னால் அவரின் கணவர் பிரணய் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் அம்ருதாவின் தந்தை, உறவினர்கள்.

சாதி மறுப்புத் திருமணங்கள் பெருவாரியாக மக்களால் வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் சாதிக்காக, சாதி வெறியோடு படுகொலைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

கடந்த காலங்களை விட இப்பொழுது சாதியைக் கூர்மைப் படுத்துவதும், சாதியின் பெயரால் மதங்களைக் கூர்மைப் படுத்துவதும் மதங்களின் பெயரால் மக்களைப் பிளவு படுத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ‘ஏக இந்தியா’, ராமர் கோவில் போன்ற மதவாத சக்திகளின் திரை மறைவில் இருந்து சாதியம் மேலும் மேலும் கூர்மையாகிக் கொண்டிருப்பது இது போன்ற சாதி ஆணவப்படுகொலைகளுக்கு அடிப்படையாக அமைகிறது.

இனியும் இதுபோன்ற ஆணவப் படுகொலைகள் தொடரக் கூடாது. இதற்கு எதிரான போராட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும். அம்ருதாவைக் கவுசல்யா நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். அவர்களே போராட்டத்திற்குத் தலைமை தாங்குவது பொருத்தமாக இருக்கும்.