இந்தியா, இலங்கை… இவ்விரு நாடுகளின் அரசியல் அதிகார ‘உச்சாணிக் கொம்பில்’ இருப்பவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் சில சமையங்களில் ‘வடிவேலு’வையும் மிஞ்சிவிடுபவையாக அமைந்து விடுகின்றன! (இங்கே ‘வடிவேலு’ தி.மு.க.வுக்காகப் பரிந்து பேசியதைக் குறிப்பிடவில்லை; அவரது திரையுலக ‘கோமாளித்தனங்களை’யே சுட்டிக் காட்டியுள்ளேன்)

ஈழத் தமிழர்களது அரசியல் உரிமைகள் தொடர்பாக இந்தியா தம்மை வலியுறுத்தவில்லை என்னும் ‘புதிய குண்டொன்றை’த் தூக்கிப் போட்ட இலங்கை அதிபர் ஒரு புறமும்; 'ஈழத் தமிழர்கள் தம்மை அந் நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாக உணர்கிறார்கள். இந்தியா அவர்கள் அனைவரும் இலங்கையில் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடும்' எனக் கூறும் இந்தியப் பிரதமர் மறுபுறமுமாக…. இந்த இரு நாட்டுத் தலைவர்களது அறிக்கைகளைப் படிக்கும் எவருக்கும் நான் ஏற்கனவே கூறிய ‘வடிவேலு’ சமாச்சாரம் மனதில் தோன்றுவதில் வியப்பில்லை தானே ?

ஆனால், இந்த இரு தலைவர்களும் உண்மையில் ‘ஈழத் தமிழர்கள்’ அந் நாட்டில் சம உரிமையுடன் வாழவேண்டும் என விரும்புகிறார்களோ என்னவோ….. இன்று அந்நாட்டில் தமிழர்களுக்கு உரிய மரியாதையும், அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பும் கிடையாது என்பதைத் தமது பேச்சுகளின் மூலமாக ஒப்புக் கொள்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!

ராஜபக்‌ஷேவைப் பொறுத்தவரை அவர் ஈழத் தமிழர்களுக்காகக் கவலைப்படும் ஒருவர் என நம்புபவர்கள் மீதுதான் எமக்குச் சந்தேகம் எழும். ஓர் பயங்கரவாத(!?) அமைப்பினைத் துடைத்தொழிப்பதற்காகப் பன்னாட்டு ராணுவ ஆலோசனைகளையும், ஆயுத உதவிகளையும் பெற்றுக் கொண்ட அவருக்கு இந்தப் போராட்டம் அந் நாட்டின் தமிழர்கள் ஆயுத முனையின் அடக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டதே என்னும் உண்மை நிச்சயம் தெரிந்தே இருக்கும்!

இத்தனையும் ஏன்? ஆயுதம் ஏந்தியவர்கள் ‘பயங்கரவாதிகளாகவே’ இருந்தாலும், அவர்களையும்… அவர்களால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களையும் ஒட்டு மொத்தமாக அழித்துவிட்டு…. அந்த ‘இன அழிப்பினை’ வெற்றி விழாவாகக் கொண்டாடும் மனநிலை எந்தத் தலைவருக்கும் வரமாட்டாது. குறிப்பிட்ட ஓர் இனத்தை வெறுக்கும் ஒருவரால் மட்டுமே இது போன்ற ‘விழாக்களை’ நடாத்துவது சாத்தியம் என்பதை மன்மோகன் உட்படக் ‘கருணாக்கள்’வரை புரியாமல் இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

1971 ஆம் வருடம், சிங்கள இளைஞர்களால் உருவான ‘மாவோ’ இயக்க சாயம் பூசப்பட்ட ஜாதிக விமுக்திப் பெரமுனவின் ஆயுதக் கிளர்ச்சியினை அடக்க அன்றைய இந்திய அரசும் உதவியிருக்கிறது. அப்போது ஆட்சியில் இருந்தது… இன்று ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திராக் கட்சி அரசே ஆகும். அப்போது பல்லாயிரம் சிங்களப் ‘பயங்கரவாதிகள்’ கொல்லப்பட்டார்கள்…… இலங்கையின் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ‘யாழ்ப்பாணக் கோட்டை’யினுள் மறைந்திருந்ததாகவும் அப்போது ‘வதந்தி’ பரவியிருந்தது. இத்தனை கொடூரமான ‘பயங்கரவாதிகளை இந்தியாவின் உதவியுடன் அடக்கிய அன்றைய பிரதமர் அந்தப் பயங்கரவாதிகளை அடக்கிய நிகழ்வை மாபெரும் கொண்டாட்டமாக நடாத்தவில்லை…

அப்போது இன்று இலங்கையின் அதிபராக இருக்கும் ராஜபக்‌ஷேயும் அதே சுதந்திராக்கட்சியில்தான் இருந்தார். அவருக்குக் கூட அந் நிகழ்வினை- அதுதான் சிங்களப் பயங்கரவாதிகளை ஒடுக்கிய நிகழ்வினை- திருவிழாவாகக் கொண்டாடும் எண்ணம் எழுந்ததில்லை! காரணம் அன்று அழிக்கப்பட்டவர்கள் சிங்கள இளைஞர்கள் மட்டுமே.

ஆனால், ராஜபக்‌ஷே அரசினால் இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்த்தப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்றும் இனப் படுகொலைகளே என்றும் சர்வதேசம் உணர்ந்திருக்கும் இந்தத் தருணத்தில்…….. இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக உணர்கிறார்கள் என்னும் பேருண்மையைக் கண்டறிந்து அதனை வெளியிடுகிறார் இந்தியத்தின் பிரதமர்!

அவ்வாறாயின்… 1986ல் திம்புவில் ஈழப்போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளில்……. இலங்கை ‘அணு ஆயுத வல்லரசாக மாறுவதை அமெரிக்கா எதிர்ப்பது(!)’ குறித்தா ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்?

அதனைத் தொடர்ந்து 1987ல் மறைந்த ராஜீவ் காந்தி அவர்களுக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம்….. ஈழத்தமிழர்களது ஒடுக்கப்பட்ட உரிமைகளில் சிலவற்றையாதல் மீளப் பெற்றுத்தரவென உருவாக்கப்பட்டதல்லவா? அப்போது மன்மோகன் அவர்கள் அயலுலக அரசியல் அறியாதவராக இருந்தாரா?

தந்தை செல்வா முதல் பிரபாகரன் வரை அந்த நாட்டின் தமிழர் தலைவர்கள் ஆறு தசாப்தங்களாகப் போராடிக் கொண்டிருந்தது……. அந்நாட்டில் தமிழர்களும் சிங்களர்களும் சம உரிமையுடன், அவர்களுக்கே உரிய கௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகத் தான்.

இதில் உள்ள வேறுபாடு யாதெனில்… தந்தை செல்வா ‘காந்தீய வழியில்’ போராடியதற்கு மதிப்பளிக்காது….. அதற்குப் பதிலாக அரச அடக்குமுறைகளையும், இனக் கலவரங்களையும் பதிலாக அளித்த சிங்கள அரசுகளின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள்…….. இலங்கை சுதந்திரம் அடைந்து சுமார் முப்பது வருடங்களுக்குப் பின்னர் ஆயுதப் போர் பற்றிச் சிந்தித்தார்கள்.

அங்கு, தமிழர்களது அறவழிப் போராட்டங்களும் அவற்றுக்குப் பதிலாக அரச அடக்குமுறைகளும்…… தொடர்ந்து கொண்டிருந்தபோது அங்கு வாழ்ந்த தமிழர்கள் தம்மை ‘முதலாந்தரப் பிரஜை’களாகவா எண்ணிக் கொண்டிருந்தார்கள்? மன்மோகன் சிங் அவர்களது இன்றைய விளக்கத்தைக் கேட்கும்போது சிரிப்பதா அழுவதா என்னும் குழப்பம் ஏற்படாமல் வேறென்ன செய்யும்?

ஈழத் தமிழர்களைப் ‘பேச்சுவார்த்தைகள்’ மூலம் ஏமாற்றும் செயலை, நீண்ட காலமாக நடாத்திக் கொண்டிருக்கும் இலங்கையின் அரசுகள் போல இந்திய அரசும் அவர்களது உரிமைகள் மற்றும் உயிர்கள் தொடர்பில் ஏமாற்றம் தரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது தாய்த் தமிழகத்தின் உணர்வுகளை மதியாது புண்படுத்தும் செயலுக்கு ஒப்பானதாகும் என்பதை அதன் தலைவர்கள் எப்போதுதான் உணர்வார்களோ?

[www.sarvachitthan.wordpress.com]

Pin It