modi 371பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுதெல்லாம் தமிழகத்திற்கு வருகிறாரோ அப்பொழுதெல்லம் மேடையில் தமிழ் இலக்கியப் பாடல் வரிகளை ஒப்புவிக்கத் தவறுவதில்லை.

திருவள்ளுவரையும் அவ்வையாரையும் மேற்கோள் காட்டிப் பேசும் மோடி தமிழ்மொழி உலகத்திலேயே மிகச்சிறந்த மொழி என்றும், அது பாரம்பரியமிக்க மொழி என்றும் சொல்லி நம்மை உச்சந்தலை குளிர வைக்க முயற்சி செய்கிறார்.

ஆனால், தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழ் மொழியை ஒழித்துக் கட்டிவிட்டுத் தமிழாசிரியர் ஒருவர்கூட இல்லாமல் செய்துவிடுகிறார். தமிழ்நாட்டில் இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சியை நாம் ஒரு அத்துமீறல் என்றே சொல்லலாம்.

இது ஒருபுறம் இருக்க அண்மையில் புதுச்சேரிக்கு வந்த மோடி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது வன்முறை தலைவிரித்து ஆடியதாகவும், அதனால் தமிழகம் மிகவும் பின்தங்கிப் போயிருப்பதாகவும் நாக்கூசாமல் சொல்லியிருக்கிறார்.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த படுகொலைகளை மறந்துவிட்டாரா மோடி?

பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளால் நிகழும் படுகொலைகளை மறந்து விட்டாரா மோடி? மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி அடித்துக் கொல்லும் கலாச்சாரமும், அதேபோல் ஜெய்ராம் ஜெய் அனுமான் என்று சொல்லச் சொல்லித் துன்புறுத்தும் கலாச்சாரமும் தமிழ்நாட்டில் இல்லை. அது பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இருக்கிறது என்பதை மறந்துவிட்டாரா மோடி?

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது வளர்ந்த கல்வியும், சுகாதாரமும், தொழில்துறையும் பட்டியல் இட்டால் நீண்டுகொண்டே போகும். இந்த வளர்ச்சி பாஜக ஆளும் மாநிலங்களில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா மோடியால்?

இதையெல்லாம் ஒரு பிரதமராகப் பார்க்காமல் மூன்றாந்தர அரசியல்வாதியைப் போல் தி.மு.கழக ஆட்சியைக் குறைகூறுவதற்கு எந்தத் தகுதியும் மோடிக்கு இல்லை.

மோடியின் பேச்சு வன்மையான கண்டனத்திற்கு உரியது.

- கருஞ்சட்டைத் தமிழர்