70-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறையினால் அப்போது நடத்தப்பட்டு வந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் என்ற இதழில் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஒருவர் அவரிடம் பயிலும் ஒரு மாணவன் குறித்துக் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். பொதுவாக ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசுவதற்கு நிறைய இருக்கும். ஆனால் அப்போது மாணவர் குறித்த உயர்வான வி­யங்களையும் ஆசிரியர் தயக்கமின்றிப் பேசுவர் என்ற நிலையும் இருந்தது. இது அக்கல்லூரியில் கல்வி ஒரு வாழ்க்கையாக இருந்ததைப் பறைசாற்றியது.

ஆனால் இப்போது சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அரசு மேனிலைப் பள்ளியில் நடந்துள்ள ஒரு சம்பவம் கல்வித் துறையில் எத்தனை கொடிய சீரழிவு தலையயடுத்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் பணிரெண்டாம் வகுப்புப் படிக்கும் தாசநாயக்கன்பட்டிக் காலனியைச் சேர்ந்த சேகர்அமலா தம்பதியின் கடைசி மகனான சீனிவாசன் தன்னுடைய வகுப்பில் கணிதப்பாடம் எடுக்கும் ஆசிரியரிடம் அவர் பாடம் எடுப்பது மாணவர்களுக்குச் சுத்தமாகப் புரியவில்லை என்று பலமுறை கூறியுள்ளான். கணித ஆசிரியர் அதைக் கண்டு கொள்ளாமல் கணக்குகளை வெறுமனே கரும்பலகையில் எழுதிப் போட்டுவிட்டுச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

அந்த மாணவன் புரிதல் குறைவாக உள்ளவனுமல்ல. ஏனெனில் இன்று அரசுப் பள்ளிகள் இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றில் படித்து 10‡ம் வகுப்பில் 500-க்கு 409 மதிப்பெண்கள் எடுக்க முடிந்த மாணவனான அவன் நிச்சயமாக புரியும் திறன் குறைந்தவனாக இருக்க முடியாது. தனது படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாது தான் தெரிந்து கொண்டவற்றை மற்ற மாணவர் அனைவருக்கும் அவர்களை வகுப்பில் அமர வைத்தே சொல்லிக் கொடுப்பவனாகவும் அம்மாணவன் இருந்திருக்கிறான்.

இவ்வாறு பலமுறை கூறியும் கணித ஆசிரியரிடம் எந்த மாற்றமும் இல்லாததால் மாணவர் நலனை மனதிற்கொண்டு அவர் குறித்து புகார் மனு ஒன்று எழுதி அதில் அனைத்து மாணவரிடமும் கையயாப்பம் பெற்றுத் தலைமை ஆசிரியரிடம் அவன் கொடுத்துள்ளான். ஆனால் ஆசிரியர் இனத்திற்கே களங்கம் போல் ஆகிவிட்ட அப்பள்ளியின் கணிதம், தமிழ், வேதியியல், உயிரியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை இடைநீக்கம் செய்யப் போவதாகவும், மாற்றுச் சான்றிதழில் அவனது நடத்தையை மோசம் என்று எழுதிவிடப் போவதாகவும், செய்முறைத் தேர்வுகளில் அவனைத் தோல்வியுறச் செய்வோம் என்றும் பல வகைகளில் மிரட்டியுள்ளனர்.

பாத்திரம் அடைக்கும் ஏழைத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த அந்தப் பையன் இதனால் மனமுடைந்து கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு 18-06-2011 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளான். அக்கடிதத்தில் தனது தற்கொலை மூலம் ஆசிரியர்களின் அகம்பாவப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளான்.

இது ஏதோ ஒரேஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் பாடம் நடத்துவதில் சிரத்தையற்ற போக்கினைக் காட்டும் தனிப்பட்ட நிகழ்வல்ல. அரசுப் பள்ளிகளில் நிலவும் கற்பித்தலில் உள்ள மலையளவு கோளாறுகளின் ஒருசிறு முகடு போன்ற வெளிப்பாடேயாகும். இதைக் கருத்திற் கொண்டாவது அரசுப் பள்ளிகளின் ஆசிரியரின் கற்பிக்கும் தரத்தை மேம்படுத்த அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும். படித்தவன் பாவம் செய்தால் அவன் அம்போவென்று போவான் என்று கூறினான் பாரதி. படிப்பிப்பவர்கள் இப்படி பாவம் செய்வார்கள் என்று அவன் அன்று யோசித்திருக்க மாட்டான். யோசித்திருந்தால் அவர்களைப் பற்றிக் கூறுவதற்கு அவனுக்கே கூட வார்த்தைகள் கிடைத்திருக்காது.

Pin It