அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததால் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் சின்னப்பெத்தனால் செய்ய முடிந்தது. வீதியில் நடக்கும்போது காலில் அணியும் செருப்பை கையில் தூக்கிச் செல்வார்; தோளில் போட வேண்டிய துண்டை இடுப்பில் கட்டுவார். டீ கடையில் தனி டம்ளரெல்லாம் கிடையாது. சிரட்டையில்தான் டீ ஊற்றுவார்கள். அங்கே பிற ஜாதியினர் முன் கூனிக் குறுகி நிற்பார். கடைக்காரர் நீட்டும் சிரட்டையை பணிந்து வாங்கி, தலையைக் கவிழ்ந்தபடி டீயை உறிஞ்சிக் குடிப்பார்.

dalit illakya

சின்னப்பெத்தனின் மகன் சுந்தரம் அடுத்த தலைமுறை ஆயிற்றே. செருப்பு தைத்ததில்லை. பட்டி, தொட்டியெல்லாம் சைக்கிளில் சென்று பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கவும் விற்கவும் செய்கிறார். அப்போது சம்சாரி வீட்டுப் பெண்கள் பழைய பொருட்களை விற்கும்போது “ஏம்பா நீ குடியானவனா?’’என்று கேட்பார்கள். சுந்தரமோ “என்னம்மா நீங்க? பழைய பொருளை விக்கிறதுக்கு ஜாதியெல்லாம் கேட்கிறீங்க? நான் அருந்ததியர்ம்மா’’என்பார். அவ்வளவுதான்... முகத்தைச் சுளித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிடுவார்கள் அந்தப் பெண்கள். சுந்தரத்தின் மனைவி கற்பகம் தனது மகள் இலக்கியாவை அழைத்துக் கொண்டு தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார். உள்ளே சென்று வழிபடுவதற்கு அனுமதி இல்லாததால், கோவிலுக்கு வெளியே நின்று கும்பிட்டுவிட்டு வந்தார். அப்போது “ஏம்மா நாம கோயிலுக்குள்ள போகக்கூடாது?’’என்று கேட்டாள் இலக்கியா. “இங்கே எல்லாமே இப்படித் தான். தொணதொணன்னு உசிர எடுக்காத’’என்று சத்தம் போட்டார் கற்பகம். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சின்னஞ்சிறு வயது இலக்கியாவுக்கு “இதுதான் ஜாதிக்கொடுமை’’ என்பதை உணர முடியவில்லை. அப்போது அவள் மூன்றாம் வகுப்பு படித்தாள். அவளது பாட்டி சுப்பம்மாள் வீட்டு வேலை பார்த்துவந்தார். அவர் வேலை பார்த்த சம்சாரி வீட்டுக்குச் சென்று தன் பாட்டிக்கு ஒத்தாசையாக துணிகளை துவைத்தாள் இலக்கியா. பாத்திரங்களை யும் கழுவினாள். வேலையை முடித்து விட்டு பாட்டியும் பேத்தியும் கிளம்பும் போது, “இந்தாங்கடி... டீ குடிச்சிட்டுப் போங்கடி...’’என்றார் அந்த சம்சாரி வீட்டு அம்மாள். டீ குடிப்பதற்கு ஆர்வமாகத்தான் இருந்தாள் இலக்கியா. கொட்டாங்கச்சியில் தனக்கு டீ தந்த போது முகம் வாடிப்போனாள்.

அதே சம்சாரி வீட்டு அம்மாள் இலக்கியாவிடம் இப்போது வாஞ்சையாகப் பேசுகிறார். “என்னம்மா நல்லா இருக்கியா? வீட்டுக்குள்ள வாம்மா... டீ சாப் பிட்டு போம்மா’’என்று பாசம் காட்டுகிறார். வீட்டுக் குள் அழைத்துச் சென்று ஷோபாவில் அமர வைத்து கப்பில் டீயும் தருகிறார். “இப்ப மட்டும் என் ஜாதி எங்கே போச்சு?’’ என்று வியக்கிறார் இலக்கியா.

அப்படியென்றால்... ஜாதி, பேதமெல்லாம் ஒழிந்துவிட்டதா? குடிசைவாசியான இலக்கியாவுக்கு இந்த மரியாதை எப்படி கிடைத்தது? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடைதான். ஆம்! எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டராகிவிட்டார் இலக்கியா.

திண்டுக்கல் மாவட்டம் -ஒட்டன்சத்திரத்தில் இலக்கியாவின் தந்தை சுந்தரத்தைச் சந்தித்தோம்.

“அப்ப அவளுக்கு மூணு வயசுகூட இருக்காது. காணாம போயிட்டா.. நாங்களும் தேடி அலைஞ்சு தவிச்சு போனோம். ‘என்னம்மா இவளாவே பால்வாடிக்கு படிக்க வந்துட்டா’ன்னு டீச்சர்தான் கொண்டுவந்து விட்டுட்டுப் போனாங்க. படிக்கிறதுல நம்ம புள்ள ரொம்ப ஆர்வமா இருக்குன்னு அப்பவே எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. பொறந்த ஜாதியால அவமானப்பட்டு வாழறது வெறுத்துப் போயி ஐ.ஏ.எஸ். படிக்கணும்னு நானும் ஆசைப்பட்டேன். வீட்ல வசதியில்ல, எட்டாம் வகுப்போட என் படிப்பு நின்னுப் போச்சு. மாட்டுத்தரகர் வேலை பார்த்ததுல நஷ்டப்பட்டு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குப் போயிட்டேன். அப்புறம்தான் ஆதி தமிழர் பேரவை அதியமான் அய்யா பண்ணுன உதவியால, இந்த பழைய இரும்பு, பிளாஸ் டிக் வியாபாரம் பார்த்து பொழைக்க ஆரம் பிச்சேன். சின்ன வயசுல இருந்தே எம் மகளை பக்கத்துல உட்கார வச்சு அடிக்கடி சொல்லுவேன். “கேவலப்பட்டு வாழறது எங்களோட போகட்டும். நல்லா படிச்சாத் தாம்மா இந்த ஊரு உலகம் உன்னை மதிக்கும்னு சொல்லுவேன்.’’ அவளும் நாஞ் சொல்லுறத கவனிச்சு தலையை தலையை ஆட்டுவா. என் பேச்சைக் கேட்டு நல்லா படிச்சா. இப்ப டாக்டராயிட்டா. என் கனவு நிறைவேறிருச்சு’’என்றார் பெருமிதத்தோடு.

முதலில் பேசத் தயங்கிய இலக்கியா பிறகு கொட்டித் தீர்த்துவிட்டார். “நான் டாக்டர் ஆனதுல எங்கப்பா அடைஞ்சிருக் கும் சந்தோஷத்துக்கு அளவே இல்ல. அவருக்கு புள்ளையா பொறந்து அவரு மனசை நிறைய வைக்க என்னால முடிஞ் சிருக்கு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந் தாலும், நான் ரொம்ப பேருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். மொதல்ல எங்க டீச்சர்ஸ் சிலம்புசெல்விக்கும், சாந்திக்கும், அப்புறம் கலைஞர் அய்யாவுக்கு.

2009-ல அவரு முதலமைச்சரா இருக்கும்போதுதான் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடுங்கிறது சட்டமாச்சு. அப்ப கலைஞர் அய்யா குறிப்பிட்டுச் சொன்னது என் மனசுல நல்லா பதிஞ்சு போச்சு. ‘அடிமட்டத்துக்கெல்லாம் அடிமட்டமாக கிடந்து அவதியுறும் மனித ஜீவன்கள்’ன்னு அருந்ததிய மக்களைப் பத்தி உருக்கமா சொன்னாரு. எங்க மக்கள் புதிய உலகம்.. புரட்சியுகம் காண வேணும்னு சொல்லித்தான் உள் ஒதுக்கீடு சட்ட முன் வடிவை அவையில வச்சாரு. அப்பத்தான் எனக்கு ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துச்சு. 1085 மார்க் எடுத் திருந்தேன். மூணு சதவீத உள் ஒதுக்கீட்டுலதான்... தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரில எனக்கு சீட் கிடைச்சது. இந்த இட ஒதுக்கீடு மட்டும் இல்லைன்னா நான் இன்னைக்கு டாக்டர் ஆயிருக்க முடியாது.

ஜாதி பார்க்காம உதவுற எத்தனையோ நல்லவங்களும் இருக்காங்க. நான் கவுன்சிலிங் போறதுக்காக தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சின்னக் கண்ணுங்கிறவர் அவரோட மனைவி நகையை அடகு வச்சு ரூ.10,000-எங்கப்பாகிட்ட கொடுத்தாரு. ரூ.17000 தந்து காலேஜுல எனக்கு மொத ஃபீஸ் கட்டினது எம்.எல்.ஏ.சக்கரபாணி அய்யாதான். ஒட்டன்சத்திரத்துல கவர் மெண்ட் ஹாஸ்பிடல் திறக்கிறதுக்கு வந்த மு.க.ஸ்டாலின் என்னைப் பத்தி கேள்விப்பட்டு படிப்புச் செலவுக்குன்னு அப்ப ரூ.10,000 கொடுத்தாரு. கஷ்டப்படற குடும்பத்துல இருந்து எம்.பி.பி.எஸ். படிக்க வந்திருக்கேன்னு எனக்கு அப்பப்ப டிரஸ்ஸ§... செல்போனெல்லாம் வாங்கிக் கொடுத்தது எங்கூட படிச்ச ஃப்ரண்ட்ஸ்தான். ஃபைனல் இயர் படிக்கிறப்ப என்னால ஃபீஸ் கட்ட முடியல. சுபாஷிணி, பரமேஸ்வரி, பத்மா, சீதா, சாரதி, செம்பருத்தி, பிரகாஷ், இளவரசன், விஜின்னு ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் ஆளுக்கு ஆயிரம், ரெண்டா யிரம்னு போட்டு ஃபீஸ் கட்டினாங்க. இவங்கள்லாம் ஜாதியா பார்த்தாங்க? என் அனுபவத்துல சொல்லுறேன்... எந்த சமுதாயத்துல பிறந்தாலும் படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டா... இந்த ஊரும் உலகமும் ஜாதி பார்க்காம நம்மை மதிக்கத்தான் செய்யும்.

அதே நேரத்துல.. எங்க சமுதாய மக்கள் ஜாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்டு... வேதனையில துடிச்சிக்கிட்டிருக்கிறது உண்மைதான். அவங்க படிச்சு முன்னேற ணும்னா கல்வி ரொம்ப ரொம்ப அவசியம். எனக்கு முதல்மாச சம்பளம் வரும்ல... அதுல டிரஸ்ட் ஒண்ணு ஆரம்பிச்சு, எங்க மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கிறதுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்யணும்கிற திட்டம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டிருக்கு.

எல்லா மனுஷங்களும் ஒண்ணுதான்.. இதுல ஜாதியெல்லாம் எங்கேயிருந்து வந்து தொலைச்சுச்சோ? ஒரு டாக்டரா இருந்து எல்லா மக்களுக்கும் மருத்துவ சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. என்னோட வாழ்நாள் முழுதும் அதை நல்லபடியா செய்வேன்...’’ என்றார் உறுதியான குரலில்.

சமூக நீதிக்கான போராட்டம் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது.

நன்றி : nakkeeran.in