மூத்திரச் சந்தின்
முற்றிய நெடிகளில்
சுப்ரபாதம்
எங்களுக்குச் சாத்தியமாகிறது.
காமுகர்களின் ஆணுறைகளிலும்
கருவறையின் ‘நேப்கின்’களிலும்
எங்கள்
காலைக் கனவுகள்
கலைகின்றன.
எத்தனையோ மலக்குழிகள்
எங்களின்
மரணக்குழிகளாகி
இருக்கின்றன.
நிலவறையின் கல்லறைகளில்
எங்கள்
நிகழ்காலம் புதைக்கப்படுகின்றது.
உங்கள் குடல்குப்பை
அள்ளாமல்- எங்கள்
குடல்நிறைய
வாய்ப்பில்லை.
பாவங்களை ஏற்றுக்கொண்டு
பக்தர்களை ரட்சிப்பது
பரமபிதா மட்டுமல்ல...
எங்களை அழுக்காக்கி
உங்களைச்
சுத்தப்படுத்தும்
நாங்களும் தான்!
RSS feed for comments to this post