தி.மு.கழக செயல் தலைவரும் சட்டப் பேரவை எதிர் கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் 8.12.2017 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...

நான் தொடக்கத்திலிருந்தே மணல் மாஃபியா சேகர் ரெட்டி கும்பலுடன் ஓ.பன்னீர்செல்வம் எந்த அளவுக்குத் தொடர்பு வைத்திருக்கிறார் என்பதைப் பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறேன். மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறைச் சோதனை நடந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் ஓ.பி.எஸ் மற்றும் குட்கா புகழ் விஜய பாஸ்கர் உள்ளிட்ட 8 அமைச்சர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்ட ஆதரங்களோடு தெரியவந்தது.

இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உடனடியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது மேதகு ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டும் அல்ல முழுமையான உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தி.மு.க. கோரியுள்ளது.

...இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாக உள்ளது. இந்த அரசு ஒரு குதிரை பேர அரசாக நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கு முன் பொறுப்பில் இருந்த கவர்னரிடம் இது குறித்து ஏற்கனவே மனு அளித்தும், இப்போது புதிய ஆளுநர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

 ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாகப் பல முறை நாங்கள் கூறிவந்தோம்.

அதனை உறுதி படுத்தும் வகையில் ‘தி வீக்’ மற்றும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்திகள் வருகின்றன. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையாக உள்ளது.

தேவைப்பட்டால் புதிய கவர்னரை சந்திக்க வேண்டிய சூழல் வரும்.   

- இவ்வாறு கூறியிருக்கிறார்.