தமிழ்நாட்டில் ஒரு நாடகம் நூறு நாள்கள் ஓடி முடிந்திருக்கிறது. நாம் யாருமே எதிர்பார்க்காத கதை  வசனங்களோடு, ஆனால் எதிர்பார்த்த முடிவோடு நாடகம் முடிந்திருக்கிறது. வேதா நிலையம் வெளியீட்டில், சோ சாமி இயக்கத்தில் மற்றும் மேற்பார்வையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர், 'காவிரி தந்த கலைச்செல்வி' ஜெயலலிதாவும் அவரது உயிர்த்தோழி சசிகலாவும் நடித்த உள்ளே  வெளியே நாடகம் அது.

மூன்று மாதங்களுக்கு முன்பு சசிகலா உள்ளிட்ட அவரது உறவினர்கள் சிலர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சசிகலாவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தே நீக்கி 'அக்கா' ஆணையிட்டார். அதைப்பற்றிப் பட்டி மன்றம் வைக்காத குறையாக விவாதங்களும், கருத்துகளும் மிகவும் பரபரப்பாக நடைபெற்றன.

இது திட்டமிடப் பட்ட நாடகம் என்று நம்மில் பலருக்கும் தெரிந்தது. ஆனால் அப்பாவி அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பினர். மகிழ்ச்சியில் மொட்டை எல்லாம் போட்டார்கள். இனியொரு சுதந்திரம் என்று சொல்லி இனிப்பெல்லாம் கொடுத்துக் கொண்டாடினர். ஆனால் கடைசியில் நடந்தது என்ன? 'அம்மா' என்று அழைத்த தொண்டர்களின் மொட்டைத் தலையில் மிளகாய் அரைத்து, 'அல்வா' கொடுத்துவிட்டார்.

அவாள்களுக்கு எப்போதும் ஒரு மரபு உண்டு. தாங்கள் செய்யும் தவறுகளைத் தாங்கிக் கொள்வதற்கு ஒரு தோள் வேண்டும். தங்களுக்காக தியாகம் செய்வதற்கு ஒரு தலை வேண்டும். அதுவும் சூத்ராளா இருந்தா இன்னும் தேவலை.  சசிகலா என்னும் பலி ஆடு மீண்டும் கொட்டடிக்குள் அழைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் சசிகலாவைத் தூக்கி எறிந்த போது மகிழ்ச்சி மழை பொழிந்தவர்கள், அவரை மீண்டும் ஜெயலலிதா வீட்டிற்குள் அழைத்துக் கொண்ட போது சாரலாய்க் கூட முணுமுணுக்கவில்லை.

சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி வகையறாக்கள் மீது 'நடவடிக்கை' என்னும் பரிகாரத்தின் மூலம் ஜெயலலிதாவின் நாற்காலிக்கு அடியில் இருந்த ஒட்டடைகள் சுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக முன்னாள், இந்நாள் நகைச்சுவை நடிகர்கள் சோ, எஸ்.வி. சேகர் போன்றவர்கள் 'நூல்' விட்டனர். ஆனால் இப்போது சசிகலாவுக்கு மட்டும் சுபாவ மன்னிப்பு' வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து யாருமே வாயைத் திறக்கவில்லை.

ஒரு வேளை சசிகலாவின் ஜாதகத்தில் ஏதாவது 100 நாள் 'தோஷம் கீஷம்' இருந்திருக்குமோ? அடுத்த தோஷம் எப்போ வருமோ?

ஏப்ரல் முதல் நாளில் நம்பிய எல்லோரையும் முட்டாள்களாக்கிவிட்டு, ஏப்ரல் 2ஆம் தேதி போயஸ் தோட்டத்திற்குள் மீண்டும் குடிபோய் விட்டார் சசிகலா. ஒரு நண்பர் சொன்னார், 'திருக்கடையூரில் மாலை மாற்றிக்கொண்டவர்களை யாராலும் பிரிக்க முடியாதாம்'!?