"நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு யுகம் யுகமாக மனித குலம் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறது. அடிமைத் தளையிலிருந்து அடக்கு முறையிலிருந்து விடுதலை பெற விழைந்து வருகிறது. காலங்காலமாக இந்த பூமியில் நிகழ்ந்த போராட்டங்கள், புரட்சிகள் யுத்தங்கள் எல்லாம் மனித விடுதலை எழுச்சியின் வெளிப்பாடன்றி வேறல்ல'' - என்பது தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை. தமிழீழ மண்ணில் தாயகத்தின் விடுதலைக்காகத் தன் இன்னுயிரை ஈத்தவர்கள் பல்லாயிரவர். எனினும் அவர்களில் மறக்க முடியாத மாவீரர் கர்னல் கிட்டு. சதாசிவ கிருட்டிண குமார் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர், சதாசிவம் - இராசலக்குமி இணையரின் இரண்டாம் மகனாக 1960 சனவரி 2ஆம் நாள் பருத்தித் துறையில் பிறந்தார்.

kittu_313அவர் தாய் இராசலக்குமி, ஈழத்தந்தை செல்வா நடத்திய 1961 - சத்தியாகிரகப் போராட்டத்தில் கைக்குழந்தை கிட்டுவுடன் பங்கேற்ற போர்க்குணம் மிக்கவராவார். அவ்வீரத்தாயின் மகனான கிருட்டிணகுமார் 1978இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த போது தோழர்களால் "கிட்டு' என்று அன்போடு அழைக்கப்பட்டார். பின்னர் கிட்டண்ணா என்பதே அவரின் பெயராயிற்று.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு - "போக்கற்ற சில இளைஞர்களின் பொறுப்பற்ற கூட்டம்'' என்று சிலர் வசைபாடிய போது, தங்கள் போர்க்குணத்தையும், திறனையும் நாடறியச் செய்ய வேண்டுமென்ற வேட்கை அவரிடம் இருந்தது. யாழ்குடாப் பகுதியின் தளபதி பொறுப்பை ஏற்றபின், இயக்கத்தில் ஒழுக்கத் தையும், கட்டுப்பாட்டையும் பெரிதும் போற்றி வலியுறுத்தினார். தவறு செய்தவர்கள் கடுமை யாகத் தண்டிக்கப்பட்டனர். இதன் காரணமாக, புலிகள் இயக்கம் ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகுந்த போற்றுதலுக்குரிய விடுதலைப் போராட்ட இயக்கம் என்ற பெயரீட்டியது.

1987 மார்ச் 13ஆம் நாள் அவர் யாழ்ப்பாண நகரில் தன் லான்சர் ஊர்தியில் சென்றபோது, போட்டிக் குழுவினரின் தாக்குதலுக்கு ஆளானார். அதில் அவரது மெய்க்காவலர்கள் இருவர் உயிரிழந்தனர். கிட்டு தன் வலது காலை இழந்தார். அதன்பின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல், சென்னைக்கு வந்து இயக்கப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டார். கிட்டு முழுக்க முழுக்க இராணுவப் பயிற்சி பெற்றவர்தான்,

அரசியல் பயிற்சி பெறாதவர்தான் என்றாலும், அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்கிச் சிறந்த முறையில் தன்னை தகவமைத்துக் கொண்டார். சமாதான நடவடிக்கைகள் முறிந்தபோது, இந்திய அரசு தமிழ்நாட்டில் இயங்கிவந்த புலிகளின் அலுவலகங்களை மூடியதுடன், கிட்டு உள்ளிட்ட சுமார் 150 விடுதலைப்புலிகளை கைது செய்தது. எனினும் அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியாமல் காவல்துறை திணறியது. காரணமின்றித் தங்களைக் கைது செய்ததைக் கண்டித்துக் கிட்டண்ணா காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். வேறுவழியின்றி அவர்களை விடுதலை செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். அதன்பின் பலாலி விமான நிலையத்திற்குக் கொண்டு சென்றர்.

அங்கே கிட்டுவுடன் இருந்த மற்றவர்களை எல்லாம் இராணுவக் கட்டுப்பாட்டு முகாமில் வைத்துக்கொண்டு, கிட்டுவை மட்டும் நடுவழியில் தனித்து விட்டுவிட்டுச் சென்றனர் இந்தியப் படையினர். எனினும் கிட்டண்ணா தன்னுடைய சாதுர்யத்தாலும், மக்கள் துணையோடும் - புலிகளின் தலைமையிடத்துக்குச் சென்று சேர்ந்தார். தேசியத் தலைவர், கிட்டண்ணாவை வெளிநாட்டுக்கு அனுப்பிச் செயற்கைக் கால் பொறுத்த வேண்டும் என்று விரும்பினார்.

தான் மீண்டும் முன்போல் செயல்படச் செயற்கைக் கால் பொறுத்த வேண்டும் என்று கிட்டண்ணா விரும்பினாலும், தான் பெரிதும் நேசிக்கும் புலிப்படைத் தோழர்களை விட்டுப் பிரிய நேரிடுமே என்று தயங்கினார். ஒருவழியாக அவர் சிகிச்சைக்காக இலண்டன் செல்வது என முடிவானது. கடுமைமிகுந்த களப்போராளியாக அவர் இருந்தாலும், அந்தக் கல்லுக்குள்ளும் ஈரமாக - அவர் மனத்திலும் ஒரு காதல் இருந்தது.

சிந்தியா என்னும் மருத்துவக் கல்லூரி மாணவியை அவர் காதலித்து வந்தார். இலண்டன் செல்லும்முன் அவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்றது. இலண்டனில் சிகிச்சை பெற்றபின், பாரீசு, சுவிட்சர்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கும், இடங்களுக்கும் சென்று தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். மேற்குலக நாடுகள், "தமிழீழப் பகுதியின் எல்லை எது'வெனக் கேட்டபோது, "எங்கெல்லாம் சிங்கள இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்துள்ளனவோ அவைதான் தமிழீழப் பகுதி'' என்று மிக எளிதாக ஒரு பெரிய வினாவுக்கு விடையளித்தார். மேற்குலக நாடுகளில் சில, சமாதானத் தீர்வுத்திட்டங்களை முன்வைத்தன.

அத்தீர்வுத் திட்டங்களுடன் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்திக்க 1993ஆம் ஆண்டு சனவரி 13ஆம் நாள், எம் வி அகத் என்ற கப்பலில் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் கிட்டு. சர்வதேசக் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த அவரது கப்பலை, சனவரி 15அன்று இந்தியக் கப்பற்படை மறித்தது. மேற்குலக நாடுகளின் தீர்வுத்திட்டத்தைச் சிதைக்கும் நோக்கத்துடன் அக்கப்பலைச் சென்னை துறைமுகம் கொண்டு செல்ல முயன்றனர். சரணடையும் படியும், மறுத்தால் கப்பல் வெடிவைத்துத் தகர்க்கப்படும் என்றும் மிரட்டினர். தான் சரணடைந்தால் தன்மீது பொய் வழக்குகள் புனைந்து இயக்கத்தைக் களங்கப்படுத்தி விடுவார்கள் என்றுணர்ந்த கிட்டு, கப்பல் பணியாளர்களைக் கப்பலைவிட்டு இறக்கிய பின்னர், கப்பலுக்கு வெடிவைத்துத் தன் தோழர்களுடன் வீரச்சாவைத் தழுவினார். அன்றைய நாள் சனவரி 17. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெருந்துணையாயிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள். மக்கள் திலகம் மறைந்த போது, வீட்டுக்காவலில் இருந்த கிட்டு நேரில் சென்று இயக்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.

தந்தை பெரியார் சொல்வார், "ஒருவன் தன் இலட்சியத்தை நேசிக்கிறான் என்பதற்கு அடையாளம், அதற்காக அவன் சாகச் சித்தமாயிருக்கிறான் என்பதுதான்''. அவரின் வைர வைரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவரான கர்னல் கிட்டு என்றென்றும் நினைவு கூரத்தக்கவர். இம்மாமனிதர்களின் செயல் பண்பில் எள்ளளவாவது எமக்கும் இருக்கிறது என்று கூறிக்கொள்ள நம்மை தகுதிப்படுத்திக் கொள்வோம்.