சாமி தெரியலப்பா
என்று சொன்ன குழந்தையைத்
தலைக்கு மேலே தூக்கியபோது
கடவுளுக்குக் கிடைத்தது
குழந்தையின் தரிசனம்
- சின்னமனூர் ராஜமழை
***
வருடம் தவறாமல்
குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகிறவர்களே!
தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகின்றீர்கள்!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
***
தார்ச்சாலை
விரிசல்களில் கேட்கிறது
கல்லுடைக்கும் சிறுமிகளின்
விசும்பல்கள்!
- வே. வினாயகமூர்த்தி
***
ஒரு வயது
குழந்தையின்
கையில் கத்தி
முதல் பிறந்தநாள்
- இரா. உமா
***
குழந்தையிடம்
மழையை வரையுமாறு
கேட்டுக்கொண்டேன்
அது ஒரு வீட்டை வரைந்தது
மழை எங்கே என்றேன்
நாம் வீட்டிற்குள் இருக்கிறோம்
மழை வெளியே பெய்கிறது என்றது குழந்தை!
- தஞ்சாவூர் கவிராயர்
***
குழந்தைகளிடம் கற்றுக் கொள்ளுங்கள்
பொம்மைகளை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்பதை
பொம்மைகளிடம் கற்றுக் கொள்ளுங்கள்
குழந்தைகளை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்பதை!
-ரத்திகா