நூல்கள் அறிமுகம்
கடவுளின் கதை (5ஆம் பாகம்)
ஆசிரியர் :அருணன்
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்
69-24ஏ, அனுமார் கோயில் படித்துறை, சிம்மக்கல்,
மதுரை - 625 001
0452-2621997-/9442261555
விலை : ரூ. 250
மனிதகுலம் நடந்து வந்த பாதையை எத்தனை முறை திரும்பிப் பார்த்தாலும் அலுக்கப்போவதில்லை. மகா கலைஞர்களின் கற்பனைகளைவிட மனித குல வரலாறு பெரும் அதிசயங்களைக் கொண்டது. அதிலொன்றுதான் கடவுள். யுக மாறுதலானது ஒற்றைக் காரணியைக் கொண்டதா? ஒன்றுக்கு மேற்பட்டதைக் கொண்டதா? பல காரணிகளில் ஒன்றுதான் அஸ்திவாரத்தைப் புரட்டிப்போடுகிறதா? அப்படியெனில் இதர காரணிகளின் பங்களிப்பு என்ன? ஒரு யுகத்தில் நடந்தது போலவே அடுத்த யுக மாறுதலும் வெறும் கூறியது கூறலா? அல்லது அதற்கென்று சில சிறப்புக் கூறுகள் உண்டா? உண்டு என்றால் அவை என்ன? முந்தைய யுக மாறுதல்களின் அதே கணக்கின் படிதான் தற்போதைய யுகம் நடப்புக்கு வந்ததா? அல்லது இதற்கென்று தனித்த அம்சங்கள் உண்டா? அனைத்திற்கும் மேலாகத் தற்போதைய யுகம் எப்போது முடிவுக்கு வரும்? அதற்கான உந்துசக்திகள் என்னவாக இருக்கும்?...கடவுளின் இருப்பு நிச்சயமற்றது என்பது நிச்சயமாகிறது. மிஞ்சிய கேள்வி இன்னும் எவ்வளவு காலம் இந்தப் பேச்சு அடிபடப்போகிறது? நூலாசிரியர் அருணனின் இந்தக் கேள்விகளுக்கு அவரின் விளக்கம் இந்நூலுள் அடங்கியிருக்கிறது.
...........................................................................................................................
மிச்சமென்ன சொல்லுங்கப்பா
ஆசிரியர் : கி-.பி.அரவிந்தன்
வெளியீடு : ஒளி
கிடைக்குமிடம் : அகல்,
348, டி.டி.கே.சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014
9840231074
விலை : ரூ.200
கி.பி. அரவிந்தனின் கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள், தமிழகத்தில் வாழ்ந்த இடைக்கால அனுபவங்கள், அகதி வாழ்வின் பாதிப்புகள். இக்கவிதைகள் வரலாற்றனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை. மட்டுமல்ல. அனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால், பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டுப் பண்படுத்தப்பட்டுக் கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. அகதியின் மனத்தாங்கல்கள் சிந்திக்கும் மனிதர் எவருக்கும் உண்டாகும் ஐயப்பாடுகள், தர்மசங்கடங்கள் இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிலையை இக்கவிதையில் காணலாம்....இப்படைப்பாளியின் உணர்வும் உணர்ச்சிகளும் தனியருவரது உணர்ச்சிகள், அனுபவங்கள் என்றளவில் நின்றுவிடாது, குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில், குறிப்பிட்ட வரலாற்று நிர்பந்தங்களுக்கும் கட்டுப்பட்டு வாழும் ஈழ மக்கள், போராளிகள், அகதிகள் ஆகிய அனைவரது கூட்டு உணர்வாக, கூட்டு அனுபவமாக, கூட்டு நினைவாகப் பரிணமிக்கின்றன. வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை ஆகியோரின் அறிமுகம் இது - இந்நூலுக்கு.
...........................................................................................................................
ஒரு பத்திரிகையாளனின் எழுத்தும் எழுதுகோலும்
ஆசிரியர் : பி.டி.சக்திவேல்
வெளியீடு : சீதை பதிப்பகம்
4/7, ராஜா அனுமந்தா தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005
9790706548/9790706549
விலை : ரூ.100
உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை இந்நூலில் எல்லாச் செய்திகளும் அடங்கியுள்ளன. 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கிய காலத்திலிருந்து, அண்மையில் தருமபுரியில் குழந்தைகள் தொடர்ந்து இறந்துபோன சோகம் வரையில் பலவற்றையும் படம்பிடிக்கிறது இந்நூல். எனவே இடப்பரப்பிலும், காலப்பரப்பிலும் விரிந்த செய்திகளை இதில் நாம் காணமுடிகிறது...ஒரு பத்திரிகையாளனின் படிப்பும், அனுபவமும் பரந்துபட்டன என்பதற்கு இந்நூல் சாட்சியாய் இருக்கிறது. பத்திரிகையாளர் ஒவவொருவரும் வெவ்வேறு தளங்களில் கால்பதித்தாலும், அவரவர் காலூன்றி நிற்கும் இடம் ஒன்று இருந்தே தீரும். நண்பர் சக்திவேல் காலூன்றி நிற்கும் இடம் திராவிட இயக்கமே...இந்நூல் இன்றைய நடப்புகள் குறித்துப் பேசுகின்றன. அன்றாடம் மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், காவிரிப் பிரச்சினை, ஆம் ஆத்மி, லோக்பால் என்று தொடங்கி எபோலா வரையில் எல்லாவற்றைக் குறித்தும் தன்பார்வையை வெளியிடுகிறது. ஸ்காட்லாண்ட் பிரிந்து போகவேண்டுமா எனக் கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பைப்பற்றிய கட்டுரையில் இங்கிலாந்தின் வரலாறே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி அவலங்களையும், அரசியல் பிழைத்த அவருக்-கு இன்று அறம் கூற்றாகி நிற்கும் காட்சியையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் சக்திவேல் என்பது பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் மதிப்பீடு.
...........................................................................................................................
முல்லைப் பெரியாறு அணை - உண்மைகளும் உரிமைகளும்
ஆசிரியர் : ஜோ.சலோ
வெளியீடு : வைகறை பதிப்பகம்
மெயின்ரோடு,
திண்டுக்கல் - 624 001
0451 - 2430446/2435062
விலை : ரூ.10
முதன் முதலாக 1798ஆம் ஆண்டு இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லையாறு - பெரியாறு இரண்டையும் இணைத்து அணைகட்டி, நீர்தேக்கித் தென் தமிழகப் பகுதிகளை வளமுறச் செய்ய எடுத்த முயற்சி கிடப்பிற்குப் போய்விட்டது. தொடர்ந்து ஜார்ஜ் பெரீஸ், ஜேம்ஸ் கால்டுவெல், கர்னல் பேபர், மேஜர் ரைவ்ஸ், ஸ்மித் போன்றோர்கள் அணைகட்ட எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. 84 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்னல் ஜான் பென்னிகுக் எடுத்த முயற்சியில் உருவானது முல்லை - பெரியாறு அணை. இந்த அணை உள்ள இடம் உண்மையில் தமிழகத்திற்குச் சொந்தமானது. ஆனால் அன்றைய பிரதமர் நேருவின் தலையீட்டால் அது கேரளத்திற்குச் சொந்தமாகிவிட்டது. இவ்வணை 999 ஆண்டுகள் ஒப்பந்தப்படி கி.பி.2885 வரை தமிழகம் நீரைப் பயன்படுத்த உரிமை உண்டு. ஆனால் இவ்வொப்பந்தம் செல்லாது என்று முதல் குரல் எழுப்பியவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். அதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகள், அணையின் உரிமை, நீர் பயன்பாடு, அதன் பயன், நடைபெற்ற போராட்டங்கள் நீதிமன்றச் செய்திகள் என்று சுருக்கமாக, சிதறலற்ற செய்திகளைத் தருகிறது இந்நூல். தமிழ் மக்களிடையே தன்னெழுச்சியாக எழுந்த போராட்டங்கள் எல்லாம் வெற்றிபெற்றிருக்கின்றன என்ற உண்மையை முன்வைத்து, முல்லை - பெரியாறு அணை குறித்த வரலாற்று உண்மைகளையும், தமிழர்களின் உரிமைகளையும் இந்நூல் விளக்குகிறது.