அன்றைய குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் இந்தியத் திணிப் புக்கு ஆதரவாக பேசிய கையோடு தமிழ்நாட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டது. 

அவர் வந்தால் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று தந்தை பெரியார் அறிவித்தார். உடனே சிலர் “குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக் கொடி காட்டலாhம?” என்று பதற்றத்துடன் கேட்டனர். 

அப்போது “குடியரசுத் தலைவர் என்ன ராசிபுரம் நெய்யில் பொரித்த அப்பளமா” என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். 1957இல் நடந்த நிகழ்ச்சியிது. 

இளவரசர் ராகுல் காந்திக்குத் தாம் “ராசிபுரம் நெய்யில் பொரித்த அப் பளம்” என்ற நினைப்பு இருக்கும் போன்று தெரிகிறது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கும் ஈழ விடுதலைப் போரின் ஓய்வுக்கும் பிறகு நோட்டம் பார்ப்பதற்காக வென்றே சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்தார் ராகுல்காந்தி. 

காங்கிரஸ் கட்சியைப் பலப் படுத்தும் நோக்கத்துடனோ அல்லது வேறு நோக்கங்களுடனோ அவர் வந் தாலும் சென்னையில் மாநில முதல் வரைச் சந்திக்காமலே அவர் சென் றிருக்கிறார். கூட்டணி குறித்தோ, தொகுதிப் பங்கீடு குறித்தோ பேச வேண்டிய அவசியமில்லாமல் போக லாம். ஆனால், ஆட்சியில் பங்கு பெற்றுள்ள கூட்டணிக் கட்சியின் தலைவர் முதல்வராக இருக்கும் மாநிலத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமாகவாவது அவரைச் சந்திக்க வேண்டியது அவசியமில்லையா? 

நாவலர் நெடுஞ்செழியன் “மாநில அரசு என்று ஒன்று இருப்பதையே பொருட்படுத்தாத நகரம்” எனச் சிவ காசி நகரைக் குறிப்பிடுவார். அந்நகரி லுள்ள தொழிற்சாலைகள் பெரும் பாலும் இருப்பதால் அவர் அவ்வாறு வேடிக்கையாகக் கூறுவார். 

மாநில சுயாட்சிக்கோரிக்கை வலுவாக ஒலிக்கத் தொடங்கிய நேரத் தில் அதற்கு எதிராக ஒற்றையாட்சித் தன்மையை மேலும் உறுதி செய்யும் ‘பஞ்சாயத்து ராஜ்‘ சட்டத்தின் மூலம் மத்திய அரசு மாநிலங்களிலுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்தார் ராஜீவ்காந்தி. 

கருணாநிதி என்ற தனி மனிதரைப் பற்றி, தி.மு.க.வின் செயல்பாடுகள் பற்றி நமக்கு விமர்சனங்கள் இருக் கலாம். முதல்வராக அவர் செயல்படும் விதம் குறித்தும் வேறுபட்ட கருத்துக் கள் இருக்கலாம். அதற்காகத் தமிழக முதல்வரை அலட்சியம் செய்து விட்டுத் தமிழகப் பல்கலைக் கழக, கல்லூரி மாணவ, மாணவியருடனும் ஆசிரியர் களுடனும் கலந்துரையாடல் நிகழ்ச் சியை நடத்திய ராகுல் காந்தியின் பண்பு நம்மை அதிரவைக்கவில்லையா? 

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அமைச்சர்களைச் சிக்கனத்தைக் கடை பிடிக்கும்படி சொன்னவுடன் சோனியா காந்தி சாதாரண விமானத்தில் பயணம் செய்தார் என்பது நாளிதழ் செய்தி. 

தாயின் வழி நடக்கப் பஞ்சாப் மாநிலத்திற்கு விமானப் பயணம் மேற்கொள்ளாமல் தொடர்வண்டியில் பயணம் செய்தார் ராகுல்காந்தி என்பது இன்றைய தொலைக்காட்சிச் செய்தி. 

எத்துணை எளிய வாழ்வு எனப் பலரும் வியப்பதற்குப் பின்னுள்ள உண்மைகள் வெளியாக வேண்டும். 

தமிழ்நாட்டு வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடு என்பதன் பேரால் நிகழ்ந்த கொடுமைக்குத் திருக்கோவி லூர் நிகழ்வுகளே தக்க சான்றாகும். ராகுல்காந்தி சென்ற தெருவிலுள்ள வீடு களையும் கடைகளையும் திறக்கக் கூடாதென்று கடுமையான உத்தரவு! வீடுகளின் கதவுகள் மட்டுமின்றிச் சன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தன! வீடுகளை விட்டு எவரும் வெளியே வரக்கூடாது. 

தங்கும் விடுதிகளில், எவருக்கும் அறை தரப்படவில்லை. திருமண மண் டபங்களிலும் யாரும் தங்க அனுமதி யில்லை. 

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ராகுல்காந்தியின் வருகைக்காக ஒரு நகர மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கிய காவல் சர்வாதிகாரம் தமிழக முதல்வருக்குத் தெரியுமா? சொந்த மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்திய ராகுலின் வருகைக்கு அனுமதி வழங்கிய வர்களை முதல்வர் அறிவாரா? 

திருக்கோவிலூர் நிகழ்வுகள் செய்தி ஏடுகளில் வெளியாகாததைப் போன்றே ராகுல் காந்தி பங்கு பெற்ற பிற நிகழ்ச்சிகளுக்கும் வெளியாகாத செய்திகளின் மறுபக்கம் ஒன்றிருக்கும். 

பாளையங்கோட்டை, மதுரை, வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மாணவ, மாணவியருடன் கலந்துரை யாடல் நடத்தியிருக்கிறார் ராகுல் காந்தி. அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது. பிரபலமான நாளேடு ஒன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் கூறியதாகச் சில செய்திகளை வெளியிட்டுள்ளது. 

நமக்குத் தெரிய வேண்டிய உண்மை பத்திரிகையாளர்கள் அனு மதிக்கப்படாததன் காரணமென்ன? ராகுல்காந்தி ரகசியக் கூட்டம் நடத் தினாரா? அனுமதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் கடுமையான சோத னைக்குப் பிறகுதானே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். ராகுல் காந்தியிடம் கேட்கக்கூடாத கேள்விக ளென்று அவர்களிடம் பட்டியல் தரப்பட்டிருக்குமே. அதில் ஈழப் பிரச் சனை முக்கிய இடம் பெற்றிருக்கும். 

திருக்கோவிலூர் கெடுபிடிகள் ராகுல் காந்தி கலந்து கொண்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் இருந்திருக்கும். இங்குள்ள பத்திரிகைகள் வாய் திறக்க வில்லை.

நமக்குள்ள மற்றோர் ஐயம், சென்னை அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர், மதுரை காமராசர் பல் கலைக் கழகத் துணை வேந்தர் ஆகி யோர் தம் மாணவர்கள், ஆய்வாளர்கள் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு அனுமதி வழங்க விதி ஒப்புதல் தருகிறதா? இதே கேள்வியை ம.தி. மு.க.வின் வைகோவும் த.பெ.தி.க. வின் கோவை ராமகிருஷ்ணனும் எழுப்பியிருக்கின்றனர். 

துணை வேந்தர்கள் இதற்கு முறையான பதில் தரக் கடமைப் பட்டவர்கள். இவர்கள் ராகுல் காந் திக்கு ஏற்பாடு செய்து கொடுத்த கலந் துரையாடலைப் போன்ற நிகழ்ச்சியை ஏனைய அரசியல் கட்சித் தலைவர் களுக்கும் ஏற்பாடு செய்து கொடுப் பார்களா? 

தமிழக முதல்வர் இது குறித்துக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகம் திறந்த வீடாகியி ருக்கிறது. நுழைவது எதுவெனக் கண்காணிக்கும் பொறுப்பு அவரிடம் உள்ளது. 

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என ஒவ்வொன்றிலும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்துள் வந்து நதிநீர் இணைப்பு தேவையற்றது என அறிவித்துள்ள ராகுல் காந்தி எங்கிருந்து தப்பித்து வந்தார் என விசாரிப்பது தேவையானதாகும். 

மண்மொழி நிலைப்பாடு : நதிநீர் இணைப்பைப் பொறுத்தவரை ராகுல் சொன்ன கருத்து சரிதான். கட்டுரையாளர் தன் கருத்தை எழுதியிருக்கிறார். நதிநீர் இணைப்பு சாத்திய மல்ல என்பதும், இது நடப்பில் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவும், மாநில உரிமைகளை மறுக்கவுமான முயற்சியே தவிர, மற்றபடி பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்பதே மண்மொழியின் கருத்தும். 

இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்தும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார் ராகுல் காந்தி. கல்லூரிகளில் இடம் அதிகமானால் இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற அரிய கண்டுபிடிப்பைக் கூறியுள்ளார். 

இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தமே தந்தை பெரியார் போராடியதன் விளைவாகும். அறி யாமையில் உழலும் ராகுல் காந்தியின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள காங்கிரசுக் கங்காணிகள் ராகுலுக்கு எடுத்துக் கூற வேண்டும். 

ஐந்தடுக்குப் பாதுகாப்பு வளையத் துக்குள் இருப்பதாலும் முன்கூட்டியே கடுமையான எச்சரிக்கை மூலம் மிரட்டப்பட்ட மாணவ, மாணவியரே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு கொள்வர் என்ற தைரியத்தாலும் ராகுல் காந்தி தமிழ் நாட்டுக்குள் வந்து ‘சடுகுடு’ ஆடிப் போய் விட்டார். 

கருணாநிதி கொஞ்சம் சிந்தித் திருந்தால் ராகுலின் வருகை நிகழாதிருந் திருக்கும். இனி வருங்காலத்திலாவது தமிழக வாயிற் கதவுகளை இறுக மூடி வையுங்கள். “கன்னக்கோல் திருடர்கள் எச்சரிக்கை!” 

ராகுல் வருகை - தமிழக வரிப்பணம் பாழ் 

ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 8, 9 தேதிகளில் மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்து சென்றுள்ளார்.  

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பிரிவு 19இன் படி இந்திய ஆட்சிப் பரப்பெல்லைக்குள் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் நடமாட்ட உரிமை உண்டு என்கிற அடிப்படையில் ராகுல் தமிழகம் வந்து போனதைப் பற்றி யாரும் குற்றம் சொல்ல முடியாது. 

ஆனால் அவர் எந்த நோக்கத்திற்காக வந்து போகிறார். யாரை யாரைச் சந்திக்கிறார். எந்தத் தகுநிலையோடு அவர் எதிர்கொள்ளப் படுகிறார் என்பதுதான் முக்கியம். 

வந்து போனவர் ஓர் அகில இந்தியக் கட்சியின் பொதுச் செயலாளர். அவ்வளவுதான். ஆனால் அவருக்கு அவரது கட்சிக்காரர்களுக்கு அப்பாற்பட்டு இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பும், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளும், ஏற்படுத்தித் தரப்பட்ட சந்திப்புகளும் வரம்பு மீறியவை. ஓர் ஆளுங்கட்சி என்பதனாலும், நேரு குடும்ப, ராஜீவ் குடும்ப வாரிசு என்பதனாலும் நேர்ந்தவை. இது எந்த வகையில் நியாயம் என்பதுதான் சனநாயக, சமத்துவ சிந்தனையாளர்களது கேள்வி. 

அடுத்தது அவர் வந்து போனதற்கான செலவு. பாதுகாப்பு கருதி அவர் சாலைப் பயணம் போகாமல், ஹெலிகாப்டர் பயணம் போனதாகவும், இதனால் பயணச் செலவு மட்டுமே 3 கோடி ஆனதாகவும் இதை அவரது கட்சி ஏற்றுக் கொள்ளும் என்றும் சொல்கிறார்கள். 

பயணக் கட்டணத்தைக் கட்சி ஏற்றுக் கொள்ளும் சரி. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட ஐந்து வளையப் பாதுகாப்புச் செலவை யார் ஏற்றுக் கொள்வது? தமிழக அரசுதானே. தமிழக அரசு என்றால் தமிழக மக்களின் வரிப் பணத்திலிருந்துதானே இந்த செலவு. 

- அதாவது தமிழனின் தொப்புள் கொடியுறவை ஈழத் தமிழ் மக்களை கொன்றழித்த கொலைக்காரக் கட்சியின் செயலாளருக்கு தமிழக மக்களின் வரிப் பணத்திலிருந்தே பாதுகாப்புமா? இதுதான் அடிப்படைக் கேள்வி. இதைத்தான் தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும்.

இளைஞர்களை ஈர்க்க முயற்சி 

1967இல் தமிழகம் உள்ளிட்டு ஒன்பது மாநிலங்களில் ஆட்சி யதிகாரத்தை இழந்த காங்கிரஸ், அதற்குப்பின் தனித்து நின்றால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாது என்பதோடு காப்புத் தொகையைக் கூடத் திரும்பப் பெறமுடியாது என்பது மட்டுமல்ல, அதன் போட்டியே மற்ற எதிர் வேட்பாளர்களோடு இருக்காது. மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் விழும் செல்லாத ஓட்டுகளோடு போட்டியிடுமளவுக்கே அதன் செல்வாக்கு என்கிற நிலையில்தான் தொடர்ந்து தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக என மாற்றி மாற்றி யார் தோளிலாவது ஏறி ஆட்சியதிகாரத்தை ருசித்துக கொண்டிருக்கிறது காங்கிரஸ். 

இந்த நிலையில் மாநிலக் கட்சிகளின் கூட்டு இல்லாமல் தனித்து நின்று தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் முயற்சியிலோ, அல்லது இவ்விரு பெரும் திராவிடக் கட்சிகள் அல்லாமல் உதிரிக் கட்சிகள் - அதாவது தான் சொன்னால் சொன்ன பேச்சைக் கேட்கும் கட்சிகளின் - ஆதரவிலோ ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புக்கு தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறது காங்கிரஸ். அந்த முயற்சியின் ஒரு கூறுதான் ராகுலின் தமிழகப் பயணம். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு விழுந்த அடி, தமிழீழ மக்கள் படுகொலைக்கும், தமிழீழ விடுதலைப் போராளிகளின் வீழ்ச்சிக்கும் காரணமாகி, சிங்கள அரசுக்கு அது செய்த உதவிகள், அதனால் தமிழக மக்களின் கோபம், இதையெல்லாம் தணித்து தமது கட்சிக்கு ஆதரவு தேடும் முயற்சி ஒருபுறம். 

அகில இந்திய அளவில் மக்கள் தொகைக் கணக்கீட்டில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம் பெருகி வருவதாகவும், இவர்கள் நடப்பிலுள்ள கட்சிகள் பால் அதிருப்தியில் இருப்பதாகவும் உளவுத்துறை வழி கிடைக்க வரும் தகவல்களில் தன் இளமையைக் காட்டி இளைஞர்களைத் தன்பக்கம் ஈர்க்கும் முயற்சி மறுபுறம். 

இப்படிப் பல நோக்குத் திட்டத்தோடே வந்து போயிருக்கிறார் ராகுல். எனவே, காங்கிரசின் இந்த நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஈழத் தமிழினம் கொத்து கொத்தாய் மடியவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீழ்த்தவும் சிங்கள அரசுக்கு உதவிய தமிழின விரோத, கொலைகார காங்கிரசை தமிழகத்தில் வளரவொட்டாது தடுக்க முயலவேண்டும். 

தலித் வீட்டில் தங்கும் உத்தி

மாநிலம் மாநிலமாகப் பயணம் செய்து இளைஞர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ராகுல். உத்திரப் பிரதேசம் போகும்போது மட்டும் அங்கு யாராவது ஒரு தலித் வீட்டில் தங்கி அங்கேயே அவர்களுடனேயே சாப்பிட்டு, படுத்து ஒரு தூக்கமும் போட்டு எழுந்து தலித் மக்கள் மீது தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்திவிட்டு வருவார். 

உ.பி.யில் தலித் ஆட்சி நடைபெறுவதால் அங்கு மட்டும் தலித் வீட்டில் தங்குவார் போலும். மற்ற இடங்களில் அப்படிச் செய்த மாதிரித் தெரியவில்லை. தவிரவும் தில்லிக்குப் பக்கமாய் இருப்பதால் அடிக்கடி போய் தலித் வீட்டில் தங்கி வருகிறார் போலிருக்கிறது. 

சமீபத்தில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியும் ராகுல் அமேதி தொகுதியில் ஒரு தலித் வீட்டில், இப்படிப் போய்த் தங்கி வர, இப்படி முன்னறிவிப்பில்லாமல் ராகுல் வந்து போவது சரியல்ல என மாயாவதியும், இப்படி வந்து போவதற்கு முன்னறிவிப்பெல்லாம் தர வேண்டியதில்லை என காங்கிரசும் அறிக்கைப் போர் நடத்திக் கொள்ளுமளவுக்கு ராகுலின் கட்சிப் பணி பரிணாமம் பெற்றுள்ளது. 

சுயமரியாதைக்கு சோதனை

எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் ஒரு மாநிலம் போனால், அந்த மாநில முதல்வரையோ அல்லது பிற கட்சித் தலைவரையோ சந்திக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சந்திக்கலாம், சந்திக்காமலும் போகலாம். இது அவரவர் விருப்பம் சார்ந்தது. 

ஆனால் ராகுலின் பயணம் அப்படியானதல்ல. தில்லியில் ஆட்சியில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சி, அதன் தலைவர், முதல்வர், வயதிலும் மிக மூத்தவர், இப்படியெல்லாம் இருக்க மரியாதை நிமித்தமாவது ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து அதற்கேற்ப பயணத்திட்டம் வகுத்திருக்கலாமில்லையா.  

அப்படி இல்லாமல் அதைத் தவிர்த்து திட்டம் வகுத்தது ஏன்? உன்னை என்ன நான் வந்து பார்ப்பது, உன் தயவு எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது. உன் தயவில்லாமலேயே தமிழகத்தில் என் கட்சியை பலப்படுத்துகிறேன் பார். வலுப்படுத்தி வென்று காட்டுகிறேன் பார் என்கிற வீறாப்பு, ஆணவம் மமதை... 

இது திமுக தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியாதா. வெறுமனே தெரிந்து என்ன பயன்? இதன் பிறகாவது பெரியாரின் சீடர்களுக்கு சுய மரியாதைச் சொரணை வந்தால் சரி. இனியாவது காங்கிரசுக்கு காவடி தூக்காமல் இருந்தால் மகிழ்ச்சி.