வெற்றி பெற்றவர் தோல்வி கண்டவர் என்று மனிதர்களை எந்த அடிப்படையில் அடையாளம் காண்கிறது இந்தச் சமூகம்? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது கடினம். பெரும் செல்வந்தரும், அதிகாரத்தில் இருந்து ஆண்டோரும் வெற்றியடைந்தவர் எனலாமா? செல்வத்தைக் கொண்டும் அதிகாரத்தைக் கொண்டு காய் நகர்த்தி பேரும் புகழும் பெறலாம் - ஆனால் அதுதான் மனிதனின் வெற்றியா? அடுத்தடுத்த தலைமுறையினர் பயனுற வேண்டி இருந்த இடம் தெரியாமல் கடினமான சமூகப்பணி செய்து கால வெள்ளத்தில் மறைந்து போன பலரும் வெற்றி பெற்றவர்கள் இல்லையா? அப்படியானால் சிங்காரயரும் அப்படித்தான். காலம் கடந்து நின்று மக்கள் சிந்தையில் வளமேற்றும் பொதுவுடைமைத் தத்துவத்தின் சாத்தியப்பாடுகளையும், அதன் தாக்கத்தில் உலகில் விளைந்த புரட்சிகர மாற்றங்களையும் விவரிக்கும் நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் பணியில் சிங்காராயரின் பங்களிப்பு ஏராளம்.

கொள்கைப் பிடிப்பும், மனித குலத்தின் பாலிருந்த நம்பிக்கையும் மட்டுமே அவரைச் செயல்படச் செய்தன. வெற்றிகரமாக வாழ நினைத்திருந்தால் அவர் மொழிபெயர்க்க வேறு விதமான நூல்களைத் தேர்ந்திருப்பார். ஆனால் ரஷ்யப் புரட்சியும் சீனப் புரட்சியும் பின்னர் கியூபப் புரட்சியும் அளித்த நம்பிக்கையின் தெம்பில் அவர் ஏராளமான மார்க்சிய நூல்களை மொழிபெயர்த்தார். இந்தியத்திற்கு எதிரான தேசிய இனப் பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்த சி.ஆர்.சி. (சி.ஸி.சி) கட்சியில் அவர் நீண்டகாலம் செயல்பட்டார். அவர் மொழிபெயர்த்த நூல்கள் சில மொழிபெயர்ப்பாளரின் பெயர்கூட குறிப்பிடப்படாமல் வெளிவந்தன. அக்காலக்கட்டத்தில் அவர் மொழிபெயர்த் தவை யாவும் முக்கியமான அரசியல் நூல்கள்.

தொண்ணூறுகளில் கட்சி அமைப்பிலிருந்து விலகிய பின்னர் மொழிபெயர்ப்பு அவரது பிழைப்பிற்கான வேலையாகிப் போனது. பல்வேறு வகையான நூல்களை அவர் மொழிபெயர்க்கத் தொடங்கினார். அப்போது அவர் ஓஷோவின் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தார். இந்திய இடதுசாரி சிந்தனையாளர்களான தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி. கோசாம்பி, ஜோதிபாய், புலே, ஆனந்த தெல்தும்ட்டே, இர்ஃபான் ஹபீப் ஆகியோரது எழுத்துகளையும், வெளிநாட்டறிஞர்களான ஜெனரல் கியாப், பாயல் ஸ்வீசி, ரெஜி டெப்ரே, சமிர் அமீன், இஸ்த்வான் மெசரஸ், கூகி -வா- தியாங்கோ ஆகியோரது எழுத்துக்களையும் சிங்கராயர் மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழிபெயர்ப் புகளான உலகாயதம், புரட்சிகர மக்களை ஆயுத பாணியாக்குவது எவ்வாறு, புரட்சிக்குள் புரட்சி, இஸ்லாத்தின் பிரச்சனைகள், சிலுவையில் தொங்கும் சாத்தான் ஆகிய நூல்களை வாசகர்கள் என்றும் நினைவில் கொள்வார்கள்.

“மொழிபெயர்ப்புக் கலை-இன்று” என்ற தலைப்பில் 2005 ஆகஸ்டில் வெளியான (பாவை பதிப்பகம், தொகுப்பு:

ந.அரணமுறுவல் அமரந்த்தா) நூலில் சிங்கரயார் எழுதியிருக்கும் கட்டுரை மொழிபெயர்ப்புத் துறையில் கவனம் உள்ளோர் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.

‘மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்க முடியாது என்பதும், இன்றைய அறிவியல்- தொழிலியல் - தகவல் பரவல்- ஊடகங்கள் - பாடநூல்கள்- அரசியல்- கலை இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் நடைமுறை மெய்மை.... ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பது தான் சிக்கல்’ - என்ற கசப்பான உண்மையைக்கூறி, ‘மொழி காப்போரை’ கேள்விக்குட்படுத்துகிறார் சிங்கராயர். மேலும்,

‘வருமானத்துக்காக ஒரு வேலையில் இருந்து கொண்டு தாம் சாந்திருக்கும் கருத்தியல் அக்கறையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்போர் உண்டு. பதிப்பகங்களின் பணியாளர்களாக இருந்து மொழிபெயர்ப்போரும் உண்டு. இந்த இரண்டு விதக் காப்பும் இல்லாமல் மொழிபெயர்க்க வந்து, ஒரு சீரான - வரையறுத்த வருவாயும் தொடர்ச்சியான வேலைவாய்ப்பும் வருங்காலப் பாதுகாப்பும் இல்லாமல் உழலும் என்னைப் போன்றோரும் உண்டு.’

- என்று தனது நிலையை வெளிப்படையாகக் கூறி, அதிகாரத்திலுள்ள தமிழ்மொழி உணர்வாளர்களை அவர் ஞாயம் கேட்கிறார். தமிழ் மொழிக்காக கடுமையாக உழைத்த தோழர் சிங்கராயர் எந்தவித ஞாயமுமின்றி வறுமையிலும் அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளுடனும் வாழ்ந்து அண்மையில் ஜனவரி 25 அன்று அதிகாலையில் தனது 53 வது வயதில் காலமானார்.

எவ்வித காப்புமின்றி வாழ்ந்த சிங்கராயருக்கு அவரது நற்சார்பு (அவருடைய மொழியில்) காரணமாக பல நண்பர்கள் இருந்தார்கள். நண்பர் சௌந்தரன் நீண்டகாலமாக பொருளுதவி அளித்தும், விடியல் பதிப்பகம் சிவஞானம் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் பணியை அளித்தும் சிங்கராயரின் சிரமங்களைச் சற்றே குறைந்திருக்கிறார்கள். ஆயினும் அவர் தனது மனைவி ராஜத்தை எவ்வித காப்புமின்றி தனியாக விட்டுச் சென்று விட்டார். அவர் கௌரவமாக தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தமிழ் மொழி உணர்வாளர்களிடம் நிதி திரட்டி வைப்பு நிதியிலிருந்து மாத வட்டி வருமானம் பெறச் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிங்கராயர் மனைவி ராஜத்தின் எதிர்காலத்திற்கென நிதியளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ந.வே. நடராசன், மனை எண் 27, 3வது தெரு,

ராஜேஸ்வரி நகர், தையூர் சாலை, கேளம்பாக்கம்- 603103, கைப்பேசி எண்: 9445125379

காசோலை/வரைவோலை மூலம் நிதியளிப்போர் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அனுப்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் செலுத்தலாம். விவரம்:-


A/C No: 20000 390136

D.V. NATARAJAN

STATE BANK OF INDIA

(04308)- PBB BESANT NAGAR

IFS CODE: SBIN 0004308

E-159, ANNAI VELANKANNI CHURCH ROAD

7th AVENUE, BESANT NAGAR,

CHENNAI - 6000090

-அமரந்தா