'ஒரு மொழியின் வளர்ச்சியும் சிதைவும் அம் மொழியின் தொன்மை சம்பந்தமானது மட்டுமே அல்ல.... இந்த  நவீன யுகம் தாண்டிய எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது.’

- -லெவிஸ்ட்ராஸ் (மொழியியல் - தொன்மையியல் அறிஞர்)

உலகின் முதல் செம்மொழித் தமிழ்மாநாடு என்கிற ஒன்று அறிவிக்கப்பட்டு, ஒவ்வொருநாளும் அது குறித்த சூடான ஆதரவு எதிர்ப்பு அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வழக்கம் போல ஓர் அரசியல் சண்டை... நமக்கேன் வம்பு என தமிழ் புத்தக வாசகர் ஒதுங்கிவிட முடியாது. கோடானுக்கோடி கொட்டி ஒரு மொழியின் பெயரால் நடக்கும் ஓர் அரசின் செயல்பாட்டை - இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என வேடிக்கைப் பார்த்தால்...... ‘இது தகுமோ இது முறையோ... இது தர்மம் தானோ’ என பாட்டுக்கு ஒரு புலவன் போட்டுக் கொடுத்த பாதையிலிருந்து விலகுவதாகி விடும்

....... அரசு என்ன செய்ய வேண்டும்?

* முதலில் அது குடும்ப மாநாடு அல்ல..... தமிழின் ஒட்டு மொத்த மக்களின் பெரும் குடும்ப மாநாடு எனும் நிலையை ஏற்படுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியல், அறிவு  காழ்ப்புணர்ச்சி இன்றி இடம்தந்து... மதிப்பளிக்க வேண்டும்.

* தமிழ் மொழியின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து மட்டங்களிலும் ‘தமிழ் கல்வி’ எனும் ஒப்பற்ற லட்சியத்தை அடைய அடுத்த பத்தாண்டு களுக்கான செயல்திட்டத்தை வரைந்திட மாநாட்டில் கல்வியாளர்களுக்கான ஒரு செயல் அரங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.

* ஊனும் உயிரும் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவனுக்கான பிரதிநிதித்துவம் என்றால் என்ன எனும் திறந்த விவாதம் நடக்க இதுவே நல்ல தருணம் ஆகும்.

* இன்று ஒரு மொழியின் இருப்பு கணினி வழியான செயல்பாட்டில் தான் உள்ளது... இணையத்தை சீன தேசத்தையும், ஜப்பானையும் போல நாம் நமது தமிழிலேயே முழுவதும் பயன்படுத்த தகுதியான மொழிபெயர்ப்பு தமிழ் எழுத்து வகை (திளிழிஜி) இன்னமும் சர்ச்சையானதாகவே இருப்பது நல்லதல்ல. இந்த மாநாடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழ் இலக்கண எளிமைப்பாடு பற்றி ஆராய்வதும் அதன் ஒரு பகுதியாகும்.

* தமிழின் தொன்மையும் அதன் மொழிவளமும் வரலாறும் அனைவரும் அறிந்ததே. அதை இளைய தலை முறையினருக்கு எடுத்துச்செல்வது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாணவர் - குழந்தைகள் ஆகியோர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதோடு.... அதை அவர்களது தமிழ் புத்தக வாசிப்போடு இணைத்து புத்தக வாசிப்பையும் சேர்த்து வெளிப்படுத்த வேண்டும்.

* அறிவியல் தமிழுக்கென்று ஓர் இதழ் தமிழில் இல்லை. அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரிக்க தனியே தமிழ் அறிவியல் ஆய்வு இதழை தோழர் சிங்காரவேலர்தான் முதலில் நடத்தினார் என்கிற வரலாற்று உண்மையை கருத்தில் கொண்டு, தமிழ் அறிவியலின் பிதாமகனான தோழர் சிங்காரவேலரை அறிவித்து அவர் வழியில் அறிவியல்தமிழ் ஆய்விதழ் உட்பட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான செயல் அறிக்கை தயாரித்து அதை அமல்படுத்த மாநாடு முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்.

* நைஜீரியா போன்ற ஒரு சிறிய நாட்டில் ஒரு புத்தகம் வெளிவந்தால் 25 ஆயிரம் பிரதிகளை அரசு தனது நூலகங்களுக்கு வாங்கும்  நிலை இருக்கிறது. நமது தமிழின் ‘வீடுதோறும் புத்தகம்’ எனும் நிலை உருவாக இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தது போல நல்ல தமிழ் நூல்கள் வழங்கும் ஒரு திட்டத்தை செம்மொழி மாநாடு முன்மொழிய வேண்டும்.

* பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் நல்ல பல நூல்களை மொழி பெயர்த்து வளம் பெற ஒரு சரியான சுதந்திரமான அமைப்பை - சாகித்ய அகடாமியை முன்மாதிரியாக கொண்டு, ஆனால் அதன் பலவீனங்களை களைந்த அமைப்பாக - ஏற்படுத்தி தமிழை உலக அரங்கிற்கு உயர்த்தும் ஒரு செயல் திட்டம் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட வேண்டும்.

* தொலைக்காட்சி சினிமா உட்பட பிற ஊடகங்களை தமிழ் மண் சார்ந்த தகுதிகளோடு- கலாசார சீரழிவு நோய்களில்லாத சாதனங்களாக்கி அதே சமயம் தமிழ் கலையின் அங்கங்களை சாகடித்து விடாத - சுய கட்டுப்பாடு அமைப்பாக ஆக்கிட தகுந்த ஆலோசனைகளை வழங்கிடும் மாநாடாக அது அமைய வேண்டும்.

இப்போது பலமாக தம்பட்டம் அடித்து பறைசாற்றிக் கொள்ளும் ‘வரலாற்று சிறப்பு மிக்க’  ‘உலக தலைநிமிர்வு’ போன்ற அம்சங்களை செம்மொழி மாநாடு பெறவேண்டுமென்றால் அது மந்திரிகள் மற்றும் அவர்களின் எடுபிடிகளின் மாநாடாக இல்லாமல், தமிழ் அறிஞர்களும், படைப்பாளிகளும் பெரு மக்கட்திரளும், எதிர்கால சந்ததியும் கைகுலுக்கும் சகல ஜனநாயக அம்சங்களும் பொருந்திய மாநாடாக நடத்தப்பட வேண்டும். தமிழ் மொழிக்கும் அதன் வாசக பெரு உலகிற்கும் எவ்வளவோ செய்யத் துடிக்கும் இந்த அரசு கட்டாயம் இவற்றைக் கருத்தில் கொள்ளும் என்று நம்புவோம்.

இந்த இதழ் திருப்பூர் புத்தகக் காட்சி சிறப்பிதழாக வெளிவருகிறது. அனைவருக்கும் நன்றி.

- ஆசிரியர் குழு