நியோரியலிசங்களின் ஊற்றுக்கண்ணாகவும், முதன் முதலாக திரையில் மவுனத்தின் ஆழத்தில் கேமராவை பயணிக்க செய்தவரும் ஐரோப்பிய சினிமாவுக்கான அடையாளத்தை முதலில் நிறுவியவருமான ழான் ரெனுவார் தனது ரிவர் படத்தை எடுக்கும் திட்டத்தோடு 1948 இல் இந்தியாவில் கல்கத்தா வந்து இறங்கினார். அப்போது தனக்கு ஆதரவாக சினிமாவின் காதலர்கள் அங்கே உலவிக் கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. கல்கத்தாவில் திரைப்படச் சங்கத்தை நிறுவி வழிநடத்தி வந்த இளைஞர்கள் சிலர் ரெனுவாரை சந்தித்து ஆச்சர்யபடுத்தினர். இளைஞர்களுக்கோ திரைப்பட சங்கம் மூலமாக கண்டு ரசித்த ஒரு படத்தின் இயக்குனரை நேரில் சந்தித்த மகிழ்ச்சி, ரெனுவாருக்கோ தன் படப்பிடிப்புக்கான இடத்தேர்வுக்கு இனி கவலைப் பட வேண்டியதில்லை என்ற மகிழ்ச்சி. 

வந்தவர்களில் சற்று உயரமாக மூக்கு நீளமாக இருந்த அதிகம் பேசாத ஒரு இளைஞனின் ஆர்வம் ரெனுவாரை வசீகரித்திருக்கும் போல. படப்பிடிப்புகளுக்கு தவறாமல் ஆஜாரான அந்த இளைஞன் தனக்கும் இயக்குனராகும் ஆசை இருப்பதாக கூறி தான் அப்போது அட்டைப்படம் வடிவமைத்துக் கொண்டிருந்த ஒரு நாவலின் கதையைக் கூறினான்.

அந்த இளைஞன் கூறிய கதையைக் கேட்டு ரெனுவார் அப்போதைக்கு அந்த இளைஞனை தட்டி கொடுத்து உற்சாகப்படுத்தினாலும் அவரே கூட அந்த கதை ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு உலகமே வியக்கும் அழியாக் காவியமாக பதேர் பாஞ்சாலி எனும் பெயரில் படமாக வெளியாகி கேன்ஸ் திரைப்படவிழாவில் பலரயையும் வியக்கவைக்க போகிறது என்பதை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.

இக்காலக்கட்டத்தில் உலகின் முக்கிய நாடுகள் அனைத்துமே சினிமா எனும் புதிய மொழிக்கு தங்களாலான அணிகலனை புதுபுது இயக்குனர்கள் மூலம் அழகு பூட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இந்திய சினிமா மட்டும் ராஜாக்களையும் அவர்களது பிரம்மாண்ட செட்டுகளையும் விட்டு வெளியே வரவில்லை.. இல்லாவிட்டால் மேடைநாடகத்தை ஒத்த நீளமான வசனம் மிகுந்த சமூகப்படங்களாகவே இருந்தன. இச்சூழலில் பிமல்ராய், ரித்விக்கட்டக், சேத்தன் ஆனந்த் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் சற்று வித்தியாசமான படங்களை எடுத்து வந்தாலும் அவர்களும் கூட இந்தியாவை விட்டு வெளியில் தாண்ட முடியாத சூழ்நிலை. இந்த நேரத்தில் 1950 இல் கல்கத்தாவில் ரே அப்போது பணிசெய்து கொண்டிருந்த விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான டி.ஜே கெய்மர் அவரை தொழில் நிமித்தமாக லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.

கிட்டதட்ட ஆறு மாதங்கள் அங்கு தங்கியிருந்த சத்யஜித்ரே லண்டனைவிட்டு புறப்படும்போது முழுக்க வேறு ஆளாக மாறியிருந்தார். மனம் மிகுந்த பதட்டத்தில் இருந்தது அதற்கு காரணம் கிடைத்த குறைந்த அவகாசத்தில் அங்கு அவர் பார்க்க நேர்ந்த 90 திரைப்படங்கள். அதில் சில குறிப்பிட்ட படங்கள் அவரது உலகை முற்றிலுமாக மாற்றின. அப்படி அவருக்குள் பாதித்த படங்கள் எவை தெரியுமா இத்தாலியின் நியோ ரியலிஸ அலையில் உருவான திரைப்படங்கள் அதிலும் குறிப்பாக ஒரு திரைப்படம் விக்டோரியா டிசிகா வின் பை சைக்கிள் தீஃவ் தான் அந்த அந்தபடம். படத்தின் அச்சு அசலான எதார்த்த்தை கடந்து படத்தில் சித்தரிக்கப்பட்ட சிறுவன் ரிசியின் அக உலகம் ரேவை வெகுவாக கவர்ந்திருந்தது. இப்போது ரிசி இருந்த இடத்தில் தான் எடுக்கவிருந்த நாவலின் கதையில் வரும் அபு இருந்தான்.

சிறுவயது முதலே ரேவுக்கு குழந்தைகளின் உலகத்தோடு ஒருவித தீவிர ஈடுபாடு இருந்து கொண்டே இருந்தது.. உண்மையில் வாழ்க்கை பெரியவர்களுக்கானது மட்டுமல்ல அங்கு குழந்தைகளும் சிறுவர்களும் வயதான பாட்டிகளும் இருக்கிறார்கள். அவர்களின் உலகங்கள் பொதுபுத்தியில் இயங்கும் பெரியவர்களின் (இளைஞர்கள் மற்றும் நடுத்தரவயதுடையோரின்) உலகங்களிலிருந்து வேறானவை.இதை உணர்ந்ததாலோ என்னவோ ரேவின் கேமராபார்வை எப்போதும் சிறுவர்களை குறிவைத்தே சுழன்று வந்தது, ஆனால் அன்றைய திரைப்படங்கள் உலகம் முழுக்கவும் அவரது பார்வைக்கு தலைகீழாகத்தான் சுழன்றன. இதனால்தான் முதல் முறையாக குழந்தைகளின் உலகத்தை ஓரளவுக்காவது அங்கீகரித்த பை சைக்கிள் தீஃவ் அவரை மிகவும் தொந்தரவு செய்திருந்தது. லண்டனிலிருந்து கப்பலில் இந்தியாவுக்கு புறப்படும்போது இத்தகைய மன அவசத்துடன் புறப்பட்டவர் கல்கத்தா வந்து இறங்குவதற்குள் முழு திரைக்கதையையும் எழுதி முடித்திருந்தார். படம் எடுக்க பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார் இறுதியில் வேறு வழியே இல்லாமல் அவரது மனைவியின் நகைகள் அவரது கழுத்தைவிட்டு இறங்கி அடகு கடைக்குள் ஓட அடுத்த நாள் காமிரா சுழலத்துவங்கியது. ரே தானே இப்படத்தை தயாரிக்க துவங்கினார். ஒளிப்பதிவாளராக சுப்ரதோ மித்ராவை நியமித்தார்.

ரேவை போலவே சுப்ரதோ மித்ராவுக்கும் முன்பின் எந்த திரைப்பட அனுபவமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்வரை சினிமா கேமராவை தொட்டது கூட கிடையாது. ரெனுவாரின் ரிவர் படப்பிடிப்பின் போது வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட்ட ரேவை போலத்தான் மித்ராவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள மட்டும் அனுமதிக்க பட்டார். அப்போது இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட கைக்குலுக்கிக்கொண்டு நண்பர்கள் ஆயினர் இருவரும். மித்ராவின் புகைப்படங்களை பார்த்த ரே தான் படம் எடுக்கும் போது நிச்சயம் உதவி கேமராமேனா சேர்த்துக் கொள்கிறேன் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் படம் துவங்கும்போது ரே சொன்ன தொகை கட்டுபடியாகாத காரணத்தால் பலரும் வர மறுக்க இறுதியில் வாய்ப்பு 21 வயதே ஆன சுப்ரதோமித்ரா ஒளிப் பதிவாளராகவே நியமிக்கப்பட்டார். அதே போல கலை இயக்குனரையும் ரிவர் படத்தில் பணி புரிந்த பன்சிதாஸ்குப்தாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். படத்தில் முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைப்பது என முடிவு செய்த ரேவுக்கு அபுவின் தந்தை பாத்திரத்துக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் வங்காள படங்களில் ஏற்கனவே நடித்து அனுபவம் பெற்ற நடிகரான கானு பானர்ஜியை ஓப்பந்தம் செய்ய வேண்டியதாகிப் போனது. அவரது மனைவி சரபோஜியாவாக நடிக்க ரேவின் மனைவி தன்னுடைய தோழி ஒருவரை கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். அவருக்கு முன்பே நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்கவே அவரை தேர்வு செய்து கொண்டார். சிறுமி துர்காவாக நடிக்க நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. உமா தாஸ் குப்தா எனும் சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆனால் அபு பாத்திரத்திற்கு மட்டும் சரியான சிறுவன் கிடைக்காதபோது அப்போதும் ரேவின் மனைவி வீட்டின் அருகில் இருந்த சிறுவன் ஒருவனை கொண்டு வந்தார்.

இறுதியில் பாட்டி இந்திர் பாத்திரத்துக்குத்தான் ஆளே கிடைக்கவில்லை. பின் ஒரு விபச்சார விடுதி ஒன்றில் அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல ஒரு வயது முதிர்ந்த கூன் விழுந்த பெண் இருப்பதை கேள்விப்பட்டு அவரை சென்று பார்த்த ரேவுக்கு அவரை பிடித்து போக அதன் பிறகுதான் படப்பிடிப்பு தளத்துக்கே ரே புறப்பட்டார்.

27 அக்டோபர் 1952 இல் துவங்கிய படப்பிடிப்பு பல பொருளாதார தடைகளால் அடிக்கடி நின்று போனது வருடங்கள் ஓடின. மீதி படப்பிடிப்புக்கு தேவையான போதிய பணம் கிடைக்காத சூழலில் ரே கையை பிசைந்து கொண்டு நின்றபோது அவரது தாயார் ஒரு ஆலோசனை தந்தார். அதன்படி அப்போதைய வங்காள முதல்வர் பி.சி. ராய்க்கு தாயரின் வேண்டுதலுக்கிணங்க போட்டுக் காண்பித்தார். படத்தை பார்த்த முதல்வர் அதன் கவித்துவமான அழகியல்வசம் ஈர்க்கப்பட்டு மீதிப் படத்தை வங்காள அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் எடுக்க முடிவு செய்து அதற்குண்டான பொருளுதவிக்கு ஒத்துழைத்தார். இறுதியில் 1952 இல் துவங்கிய படப்பிடிப்பு பின் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு பின் தொடரப்பட்டு முழுமையாக முடிந்தது.

அபுவின் தந்தை ஹரிஹர ரெ காலம் காலமாக நிஷிந்பூர் கிராமத்தில் மத சடங்குகளை நிகழ்த்தி பிழைப்பு நடத்துபவர். வருமானம் மிக குறைவு ஆனாலும் அதைபற்றி கவலைப்படாமல் எப்போதும் பாட்டு கவிதைகள் என எழுதி என்றாவது ஒருநாள் அதன் மூலம் பெரிய பணம் ஈட்டிவிட முடியும் என கனவு காண்பவர். இதனாலேயே குடும்பம் போதிய வருமானம் இல்லாமல் கடன், வறுமை ஆகியவற்றில் சிக்கி தத்தளிக்க துவங்குக்கிறது. கணவன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாரே என மனைவி சரபோஜாயா விசனப்படுகிறாள் காரணம் அவர்களது மூத்தமகள் துர்கா. ஒருமுறை மணிமாலை ஒன்றை துர்கா திருடிவிட்டதாக புகார் வருகிறது .ஆனால் துர்கா அதை அப்போதைக்கு மறுத்துவிடுகிறாள்..

எப்போதாவது சர்போஜயா கோபத்தில் திட்டும்போதெல்லாம் இந்திர்பாட்டி கூன் விழுந்த முதுகுடன் பக்கத்து வீடுகளில் சென்று தஞ்சம் புகுவாள். இதுதவிர துர்காவின் உலகம் முழுக்க தம்பி அபுவை சார்ந்தது. அது போலத்தான் அபுவுக்கும் அக்காவைத் தவிர வேறு உலகம் இல்லை. அவர்களது உலகத்தில் அந்த சிறு கிராமத்தின் வயல்வெளி, குளம் அங்கு வசிக்கும் உயிரினங்கள் மற்றும் எப்போதாவது மாலை நேரங்களில் மணி அடித்தபடி வரும் மிட்டாய்காரன் கிராமத்தின் இதர பணக்கார சிறுவர்கள் இவைகளால் ஆனது. அவர்கள் இருவரும் தங்களது வயல்வெளிகளில் விளையாடும்போதெல்லாம் எப்போதாவது தொலைவில் ரயிலின் ஓசை கேட்கும். ஒருநாள் அக்கா தம்பி இருவரும் ரயிலின் ஓசையை கேட்டு அதனை பார்க்க வயல் மற்றும் தோப்புகளின் வழியே ஓடுகின்றனர். ஓரிடத்தில் அவர்களின் எதிரே சற்று தொலைவில் புகைவிட்டபடி ரயில் போய்க்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கின்றனர்.

வறுமை காரணமாக ஹரிஹரபாபு வெளியூருக்கு சென்று பஞ்சம் பிழைக்க புறப்படுகிறார். திரும்ப வரும் போது கைநிறைய பணத்துடன் வருவதாக மனைவியுடன் கூறுகிறார். எப்போதுமே குடும்ப கவலையால் வருத்தமுற்றிருக்கும் மனைவி சரபோஜயாவுக்கு கணவனின் வார்த்தைகள் சிறிதளவு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது. ஆனால் கணவன் சென்ற பின் தான் குடும்பசூழல் மேலும் வறுமைக்கு ஆளாகிறது. ஓருபக்கம் தனிமை இன்னொரு பக்கம் வறுமை இதனால் சரபோஜயாவின் வாழ்க்கை மிகுந்த துயரத்தை பாரமாக சுமக்கிறது. ஒருநாள் விளையாட போகும் துர்காவும் அபுவும் திரும்பும் வழியில் தங்களது இந்திர்பாட்டி பிணமாக வழியில் இறந்து கிடப்பதை பார்க்கின்றனர்.

இதனிடையே பருவம் மாறுகிறது. மழைக்காலம் துவங்குகிறது. துர்கா மழையில் நீண்டநேரம் நனைகிறாள். விளைவு மறுநாள் அவள் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். வறுமையில் அவதிப்படும் சரபோஜாயா தனக்கு தெரிந்த வைத்தியங்களையெல்லாம் செய்து பார்க்கிறாள். இறுதியில் காலத்தின் சதியின் முன் தோற்றுபோகிறாள். இச்சூழலில் பணம் சம்பாதிக்க வீட்டைவிட்டு வெளியூர் போன கணவன் ஹரிஹரரே மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறான். ஆவலுடன் வீட்டுக்குள் நுழைபவன் மனைவி சிலைபோல அமைதியாக இருப்பதை பார்க்கிறான் அடுத்த நொடி அவனது காலில் விழுந்த மனைவி வீறிட்டழுவதை பார்த்தபின்தான் மகள் துர்கா தன்னை விட்டு போய்விட்டதை ஹரிஹர பாபு உணர்கிறான்.

இறுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஊரை விட்டு வெளியேற ஹரிஹரரே முடிவு செய்கிறார். பொருட்கள் மூட்டை கட்டப்படுகின்றன. அப்போது அபுவின் கைகளில் துர்கா தான் திருடவில்லை என மறுத்த மணிமாலை கிடைக்கிறது. அதனை தானும் துர்காவும் அடிக்கடி சுற்றி விளையாடிய குளத்தில் அபு எறிகிறான். அது மூழ்குவதையே பார்க்கிறான். திரைப்படம் இத்தோடு முடிகிறது.

(அடுத்த வாரம் ரே... இந்திய சலனத்திரையின் முடிவுறாத அழகியல்)