சட்டமன்றத் தேர்தல் (2011) நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழக மக்களின் பால் அன்பும் அக்கறையும் பெருக்கடுக்கத் தொடங் கியுள்ளது. 

      அ.தி.மு.க. தலைவி செல்வி. ஜெயலலிதா தமது நெடுந்தூக்கம் கலைந்து கோவையில் ஒரு பொதுக் கூட்டமும், பின்பு திருச்சியில் ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்தி பிரம்மாண்டமாக மக்கள் கூட்டத்தைக் கூட்டி ஆட்சியாளர்களுக்கு கிலி ஏற்படுத்தி உள்ளார். அவரது உரையில் தற்போதைய ஆட்சியின் ஊழலைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றில் மிக முக்கியமானது தமிழக ஆற்றுப் படுகையில் நடக்கும் “மணல் கொள்ளை”. 

      தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக அவர் கூறும் ஊழல்குற்றச் சாட்டுகள் உண்மையானவையே. 

      ஆனால் அவர் பட்டியலிடும் அனைத்து ஊழல்களும் தேர்தலுக்காக பரிசுத்த வேடம் போடும் அம்மையார் ஆட்சியில் தொடங்கியவையே. 

      அதில் மணல் கொள்ளை அம்மையாரது இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் அவதாரமெடுத்தது. 

      வெள்ள காலங்களில் ஆற்றுப் படுகைகளில் அடித்துக் கொண்டு வரப்படும் மணல், வெள்ளம் வழிந்தோடிய பிறகு ஆங்காங்கே திட்டுத்திட்டாகத் தேங்கி விடுகிறது. ஆற்றுப் படுகையில் தள மட்டத்திற்கு மேல் தேங்கும் மணல் உபரியாகக் கருதப்படும். இந்த உபரி மணல் எடுக்கப்பட வேண்டிய இடமும் எடுக்கப்பட வேண்டிய அளவும் பொதுப் பணித்துறையால் குறிக்கப்பட்டு வருவாய்த் துறையால் ஏலமிடப்பட்டு வந்தது. இவ்வாறு குறிக்கப்படும் இடம் “மணல் குவாரி” என்று அழைக்கப்படுகிறது. 

      இந்த மணல் குவாரிகளில் அரசு விதி மீறல்களும் முறைகேடுகளும் நிறையச் செய்து, கொள்ளை இலாபம் பார்த்த குவாரி ஒப்பந்தக்காரர்கள், குவாரி ஆய்விற்கு வரும் நேர்மையான அதிகாரிகளைத் தாக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது. 

      2003ல் இதுபோன்ற நிகழ்வு ஒன்று அப்பொழுது முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களது கவனத்திற்கு வந்தது. கட்டட கட்டுமானப் பணியின் எல்லா மட்டத்திலும் மணல் தேவைப்படுகிறது. மணல் இல்லையேல் கட்டுமானப் பணிகள் இல்லை. எனவே மணல் குவாரி என்பது ஒரு தங்கச் சுரங்கம் என்பதை தொடர்புடையவர்கள் அம்மை யாருக்குத் தெளிவு படுத்தினார்கள். 

      எனவே 2003ல் மணல் குவாரிகள் ஏலம் விடுவது நிறுத்தப்பட்டது. பொதுப் பணித்துறை மூலமாக அவற்றை அரசே நடத்துவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன. 

      2003 முதல் தமிழகத்தின் ஆற்றுப் படுகைகளிலுள்ள நூற்றுக் கணக்கான மணல் குவாரிகளில் நாள்தோறும் எடுக்கப்படும் பல்லாயி ரக்கணக்கான லாரி மணலுக்கு, ஒரு லோடுக்கு இவ்வளவு என கையூட்டு பொறியாளர்களால் வசூலிக்கப்பட்டு தொடர்புடைய அமைச்சர் மூலமாக அம்மையாரிடம் சென்றடைந்தது. 

      இவ்வாறு 2003லிருந்து 2006 வரை வசூலிக்கப்பட்ட கையூட்டுத் தொகை பல்லாயிரம் கோடிகள் என விவரமறிந்த பொறியாளர்கள் கூறு கிறார்கள். எனவே, தாம் விதை போட்டு வளர்த்து அனுபவித்து வந்த ஊழல் பண்ணையின் பலனை இன்று வேறொருவர் அனுபவிக் கிறார் என்ற வயிற்றெரிச்சல் அம்மையாருக்கு ஏற்படுகிறது. அதன் எதிரொலியே அவரது மணல் கொள்ளை ஊழல் எதிர்ப்புப் பேச்சு. 

      அம்மையாரால் உரம் போட்டு வளர்க்கப்பட்ட ஊழல் இன்று மிகப்பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என்பதுதான் உண்மை. 

      இவ்வாறு பலருக்கும் கையூட்டுக் கொடுத்து எடுக்கப்படும் மணலின் விலை மூன்று - நான்கு மடங்காகி அதனைப் பயன்படுத்தும் பொது மக்களுக்கு லோடு ஒன்று ரூ. 3000லிருந்து 5000 வரை விற்கப் படுகிறது. இதுவே கேரளாவிற்குக் கடத்தப்பட்டுலோடு ஒன்று ரூ. 10,000 லிருந்து 15,000க்கு விற்கப்படுகிறது. தற்சமயம் தமிழகத்திலிருந்து கேரளா விற்குக் கடத்தப்படும் மணல் அங்கிருந்து சிங்கப்பூர், மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்குக் கொள்ளை லாபத்திற்கு விற்கப் படுவதாகத் தெரிய வருகிறது. 

தமிழக மணல் கொள்ளையும் கேரளாவும் 

      கேரளாவில் 45க்கும் மேற் பட்ட ஆற்றுப் படுகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் மணல் எடுக்க கேரள அரசு தடை போட்டுள்ளது. அப்படியானால் கேரள மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணிகளின் மணல் தேவைக்கு என்ன செய்வது? 

      அங்குள்ள அரசியல்வாதி களிலிருந்து சாதாரண பள்ளிச் சிறுவர்கள்வரை யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலும் கிடைக்கக் கூடிய விடை “பாண்டிப் பயல்கள் (முட்டாள் தமிழர்கள்) கொண்டு வருவார்கள்” என்பது தான். 

      இவ்வாறு கேரளாவிற்குக் கடத்தப்படும் மணல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரள - தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் கம்பீரமாகப் பவனி வருகின்றன. இவ்வாறு கடத்தப்படும் மணலைத் தடுத்தாலே, முல்லைப் பெரியாற்று அணையின் தமிழக உரிமையைத் தடுக்கும் கேரள அடாவடிகள் நின்றுவிடும். 

      அரசு நினைத்தால் மணல் கடத்தலைத் தடுப்பது என்பது மிகச் சாதாரண நடவடிக்கை தான். 

      இதனைச் செய்யும் எண்ணம் தற்போதைய அரசுக்கு மாத்திரமல்ல முந்தைய அரசுக்கும் எப்போதும் இருந்ததில்லை. 

மணல் கொள்ளையால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு? 

      தமிழக ஆற்றுப் படுகை களில் மணல் ஒட்டுமொத்தமாக சுரண்டி கொள்ளையடிக்கப்படு வதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இங்குள்ள மெத்தப்படித்த மேதாவிகளே புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. 

      தமிழகத்து பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற முகாமையான ஆற்றுநீர் உரிமை களை ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்கள் தடுத்து தமிழர்களை வஞ்சிக்கின்றன. இந்நிலையில் மழைநீரை உள்வாங்கி நிலத்தடி நீராக சேமித்துத் தரும் மணலும் இல்லையென்றால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஐந்து வகை நிலங்களில் ஒன்றான பாலை வனமாகிவிடும். அதன்பிறகு தமிழன் சங்கப் பாடல்கள் மூலம் தான் மற்ற நால்வகை நிலங்களைத் தெரிந்து கொள்ளமுடியும். 

தமிழர்களின் இன்றைய கையறு நிலை 

      மணல் கொள்ளையில் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் (பொதுவுடைமைக் கட்சிகள் தவிர) பங்கு கிடைக்கிறது. கூட்டணி தர்மம் கருதி பொதுவுடைமைக் கட்சிகளும் மவுனம் சாதிக்கின்றன. 

மணல் கொள்ளையருக்கு ஒரு கேள்வி 

      கொள்ளையடித்த பணத்தை கரன்சி நோட்டாகவும், தங்கமாகவும் மாற்றி அடுத்த தலைமுறை வாரிசு களுக்கு சேர்த்து வைப்பவர்களே, கரன்சி நோட்டுகளைத் தின்று பசியாற முடியுமா? இல்லை தங்கத்தைக் காய்ச்சித்தான் குடிக்க முடியுமா? நீங்கள் அடுத்த தலை முறைக்குச் சேமித்துப் பாதுகாக்க வேண்டியது உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாயுள்ள நீர் வளப் படுகைகளையல்லவா? 

       மணல் கொள்ளையைத் தடுக்க எந்த அரசியல் கட்சியும் மனதளவில் கூட அணியமாகாத இன்றைய நிலையில், தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றி, மாற்றி வாக்களித்து கொதிக்கும் எண்ணெய் சட்டிக்கு மாற்றாக எரியும் தணலில் பாயத் தயாராகும் கையறு நிலைதான் தமிழர்களது பரிதாபநிலை. காலம் மாறுமா? அப்பாவித்தமிழன் என்றாவது விழித்துக் கொள்வானா?

Pin It