வீடு இல்லாதவர்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டம் ஒன்றைத் தி.மு.கழக அரசு பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கித் தொடர்ந்து செயற்படுத்தி வருகிறது. ஊரின் ஒதுக்குப் புறத்தில் - ஒரே வளாகத்தில் நூறு வீடுகளைக் கட்டி, அந்த வீடுகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முற்பட்டோர் எனும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குடும்பத்தினர் குடிவைக்கப்பட்டனர். பல்வேறு சாதிப்பிரிவினரும், கிறித்துவ, இசுலாமியச் சமுதாயத்தினரும் கலந்து வாழும் வகையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அதனால் அந்தக் குடியிருப்புகள் சமத்துவபுரங்கள் என அழைக்கப்பட்டன.

        சில ஆண்டுகள் சென்றபின் பெரியார் நினைவைப் போற்றியதாகச் சொல்லி அந்தக் குடியிருப்புகள் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என அழைக்கப்படுகின்றன.

பெரியார் நினைவு...

        தந்தை பெரியார், சமுதாய சமத்துவம் ஏற்படப் பாடுபட்டார். அதனால், சமத்துவபுரங்கள் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என அழைக்கப்படுவது சாலப் பொருத்தமுடையதாகும் என்று முதல்வர் கலைஞரும் துணை முதல்வர் ஸ்டாலினும் ஒரு கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

        பலப்பல ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான சிற்றூர்களிலும் சிற்சில நகரங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு சாதியினர் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலை இருந்தது. அக்கிரகாரத் தெரு, அகமுடையார் தெரு, பிள்ளைமார் தெரு, செட்டியா தெரு, நாடார் தெரு எனத் தொகுதி தொகுதியாகச் சாதி அடிப்படையில் தெருக்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். ஒருவரது ஊர் இது என அறிந்தபின் அந்த ஊரில் எந்தத் தெரு எனக் கேட்டு, அவரது சாதியை அறிந்து கொள்ள அக்காலத்தில் முடிந்தது.

        அந்த நிலை இன்று மாறியிருக்கிறது. பெரும்பாலான சிற்றூர்களிலும் நகரங்களிலும் அடுத்தடுத்த வீடுகளில் வெவ்வேறு சாதிப் பிரிவினர் கலந்து வாழ்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் உள்ள அடுக்ககங்களில் சாதிப் பாகுபாடு இன்றிப் பல்வேறு சாதியனரும் குடியிருக்கின்றனர். ஆனாலும் சிற்றூர்களிலிருந்து நகரத்தில் குடியேற வருகின்ற தாழ்த்தப்பட்ட பிரிவினர்க்கு வீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. படித்துப் பட்டம் பெற்று, அரசுப் பணியில் உள்ளவராக இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்டவராக இருந்தால், வீட்டு உரிமையாளர்கள் அவர்க்கு வீடுதரத் தயங்குகிறார்கள்; சிலர் மறுத்துவிடுகிறார்கள். அதனால், தாழ்த்தப்பட்ட பிரிவினர், வீட்டுக்காரர் ஏற்றுக் கொள்ளத்தக்க வேறொரு சாதியைச் சொல்லி வீடு பெறும் நிலைமை இருக்கிறது.

        தாழ்த்தப்பட்டோர்க்கு அத்தகைய சிக்கல் இருந்தாலும் பிற சாதிப்பிரிவினர் பலரும் ஒரே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வாழத்தகுந்த ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தான் சமத்துவமா?

ஒரே பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு சாதிப்பிரிவினரும் அடுத்தடுத்து வாழும் நிலைமையால் சமத்துவம் ஏற்பட்டுவிட்டது என்னும் கருத்தில் தான் அரசு அமைத்துள்ள தொகுப்பு வீடுகள் உள்ள பகுதி சமத்துவபுரம் என அழைக்கப்படுகிறது. இது தான் சமத்துவம் என்றால் இன்று, பெரும்பாலான சிற்றூர்களும் நகரங்களும் சமத்துவபுரங்களாகவே உள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது.

பெரியார் காணவிரும்பிய சமத்துவம்

        பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது. பிறப்பால் சொல்லப்படும் சாதிப்பிரிவுகள் அறவே ஒழிய வேண்டும். பொருளியல் நிலையிலும் சுரண்டுகிறவன், சுரண்டப்படுகிறவன் இல்லாத நிலை வேண்டும். பெண்களை அடிமைகளாகக் கருதும் ஆணாதிக்கம் ஒழிந்து, ஆணும் பெண்ணும் அனைத்து நிலையிலும் நிகரானவர் என்னும் நிலைமை ஏற்பட வேண்டும். ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் அமைய வேண்டும். அத்தகைய ஒரு சமுதாயம் தான் சமத்துவ சமுதாயம் என அழைக்கத்தக்கது. அத்தகைய சமுதாயமே தந்தை பெரியார் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் ஆகும்.

மதநம்பிக்கை மாயவில்லை

        இன்று, சமத்துவபுரங்கள் எப்படி இருக்கின்றன? நூறு வீடுகளில் ஏறத்தாழ ஐம்பது வீடுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எஞ்சிய ஐம்பது வீடுகள் பிற்படுத்தப்பட்டோர், முற்பட்டோர் ஆகியோர்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுள் இந்து, முசுலிம், கிறுத்துவ மகத்தவர் தத்தம் மதநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் உள்ளனர். சமத்துவபுரம் வளாகத்தில் மத அடிப்படையில் வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படவில்லை. அதனால் சமத்துவபுரத்திற்கு வெளியே உள்ள வழிபாட்டு இடங்களுக்குச் சென்று வழிபட்டு திரும்புவதை அங்குள்ளோர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மதப்பரப்புரையாளர் சிலர் சமத்துவபுர வளாகத்தில் வந்து இளம்பிள்ளைகளை ஓரிடத்தில் கூடச் செய்து அவர்களுக்கு மதநம்பிக்கையை ஊட்டுகிறார்கள்.

சாதிப் பிடிப்பும் பிணக்கும்

        பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் குடியேறியவர்களில் எவரும் பெரியார் நினைவை நெஞ்சில் ஏந்திக் கொண்டு அங்கு வரவில்லை. மாறாகச் சாதிப்பிடிப்புடன் தான் அங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட பிரிவினரைத் தள்ளியே வைத்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட பிரிவில் இடம் பெற்றுள்ள சில சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்துவது; அவர்களுக்கு இன்னல் விளைப்பது; மிரட்டிப் பணியவைப்பது போன்ற அடாவடிகளில் ஈடுபடுகின்றனர்.

தாழ்த்தப்பட்டோருள் சிலர் தம்மதிப்பைக் காத்துக் கொள்ள தலை நிமிர்ந்து நடக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்களின் ஏழ்மை அந்த விருப்பத்திற்குத் தடையாக இருக்கிறது. எதிர்பாராமல் ஏற்படுகின்ற - குடும்பச் செலவுகள் - மருத்துவச் செலவுகளுக்காகத் தங்களை அரட்டி மிரட்ட ஆசைப்படுகின்ற ஆதிக்கச் சாதியினரை அண்டிப் பிழைக்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்குகிறார்கள்; அந்தக் கடன் சுமையால் அழுத்தப்பட்டு அடங்கி விடுகின்றனர்; அடிமைகளைப் போல் உழல்கின்றனர்.

ஒருங்கிருந்து உண்ணாமை

        சமத்துவபுரம் வளாகத்தில் சமூகக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்வோரின் குடும்பத்து விழாக்களை அங்கு நடத்திக் கொள்ளலாம். அந்தக் கூடம் ஒருசாதிப் பிரிவினர்க்கு என இல்லாமல் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத்தக்கதாக உள்ளது. அதனால் அங்குச் சமத்துவம் கொடிகட்டிப் பறப்பதாகக் கூறமுடியாது. தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டுத் திருமணம் நடைபெறும் போது, மணவீட்டாரின் அழைப்பை ஏற்று விழாவிற்கு வரும் உயர்சாதியினர், அங்கு கை நனைக்காமல் திரும்பிவிடுகின்றனர்; உயர்ந்தவர்கள் நாங்கள்; இழிந்தவர்கள் அவர்கள் என்ற குற்றக்கோட்பாட்டை ஒருங்கிருந்து உண்பதைத் தவிர்ப்பதன் ஊடாக வெளிப்படுத்துகின்றனர்.

எரியூட்டுமிடத்திலும் சாதி...

        சமத்துவபுரத்தில் சாவு நேர்ந்தால், உடலை எரியூட்டுவதற்காக ஓரிடம், வளாகத்திற்கு வெளியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் போது, தாழ்த்தப்பட்டவர்கள் அந்த இடத்தைப் பயன்படுத்துகின்றனர். உயிரிழந்த உறவுகளின் உடல்களை சமத்துவபுரத்திற்கென அமைக்கப்பட்டுள்ள பொது எரியூட்டுமிடத்திற்குக் கொண்டு சென்று எரியூட்டுகின்றனர். உயர் சாதிப்பிரிவினருள் பெரும்பாலோர் அந்த இடத்தைப் பயன்படுத்துவதில்லை. ஒதுக்கப்பட்ட சாதியினரின் உடல்கள் எரிக்கப்பட்ட இடத்தில் உயர்சாதியினராகிய நாங்கள், எங்கள் உறவுகளின் உடலை எரிக்கமாட்டோம்; எரிக்கும் இடத்திலும் தீட்டு இருக்கும் என்று நம்பி, அந்தப் பொது இடத்தைப் பயன்படுத்தாமல் புறக்கணிக்கின்றனர்.

        உயர்சாதி மனப்பாங்கு உடையவர்கள், தங்கள் உறவுகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களைத் தங்களின் பழைய குடியிருப்புக்கோ நெருங்கிய உறவினரின் வீட்டிற்கோ கொண்டு சென்று விடுகின்றனர். உயிர் பிரிந்தபின், அங்குள்ள அவர்கள் சாதிக்குரிய சுடுகாட்டில் எரியூட்டுகின்றனர் என்னும் செய்தி சமதத்துவத்திற்கு விழும் சம்மட்டி அடி.

சமத்துவம் இல்லாத சமத்துவபுரங்கள்

        தந்தை பெரியாரின் சமத்துவக் கோட்பாட்டினை முழுமையாக அறிந்து, உணர்ந்து, ஏற்றுக் கொண்டு சமத்துவ வாழ்வு நடாத்திக் கொண்டிருப்போர், நாடெங்கணும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு அழைத்துச் சென்று சமத்துவபுரங்களில் அவர்களைக் குடியமர்த்தவில்லை. அப்படிச் செய்திருந்தால், இன்று சமத்துவபுரங்களில் உண்மையான சமத்துவம் நிலவும்.

        மாறாகச் சாதி, மதப்பிடிப்புக் கொண்டோரும் பிறப்பால் உயர்வு தாழ்வு கடைப்பிடிப்போருமே சமத்துவபுரத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். அதனால் குடியேறும் போதே சமத்துவம் இன்மையும் அங்குக் குடியேறிக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

        சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கப்படுவதில் முறைகேடு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே வீடு உள்ளவர்களுக்குச் சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகையோர், மிக விரைவிலேயே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விற்றுவிட்டுச் சமத்துவபுரத்திலிருந்து வெளியேறி விடுவதாகவும் சொல்லப்படுகிறது. சமத்துவபுரத்திற்குள்ளேயே கந்துவட்டிக்காரர்களும் குடியிருக்கிறார்களாம்! அவர்களிடம் கந்துவட்டிக்குக் கடன் வாங்கிய தாழ்த்தப்பட்டவர்கள், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், வட்டிக்காரர்கள், கடன் பெற்ற தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளைக் கைப்பற்றிக் கொண்டு தங்கள் சாதிப்பிரிவினரை அந்த வீடுகளில் குடியமர்த்தி விடுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வகையிலும் சமத்துவம் அங்குச் சாகடிக்கப்படுகிறது.

        பல்வேறு சாதிப்பிரிவினரை ஒரே வளாகத்தில் குடியமர்த்திவிடுவதால் மட்டும் அந்த வளாகம் சமத்துவபுரம் ஆகிவிட முடியாது. வட்டகைக் காட்சிகளில்(சர்க்கஸ்) சீறும் சிங்கத்தையும் மிரளும் ஆட்டுக் குட்டியையும் ஒரே இடத்தில் நிறுத்திக் காண்போரை வியக்கச் செய்கின்றனர். அதனால் அந்தச் சிங்கத்திற்கும் ஆட்டுக்குமிடையே ஓர் இணக்கம் ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது. அது போலவே, சமத்துவக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத பலபிரிவினர்க்கும் வீடுகளைக் கொடுத்து ஒரே இடத்தில் வாழச் செய்துவிட்டதால் மட்டும் சமத்துவம் அங்குத் தழைத்துவிடாது. சாதியில், மதங்களில், சாத்திரச் சண்டையில், கோத்திரச் சந்தடிகளில் நாட்டம் கொள்ளாமல், எத்துணையும் பேத முறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணுகின்ற மனவளமும் மனிதநேயமும் உடையவர்கள் சேர்ந்து வாழும் இடத்தில் மட்டும் சமத்துவம் தழைத்து ஓங்கமுடியும்.

பெரியார் கண்ட கனவு

        புதிய சமத்துவபுரங்களைத் திறந்து வைத்து உரையாற்றுகின்ற போதெல்லாம், “பெரியார் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் கலைஞர் அரசு, சமத்துவபுரங்களை அமைத்து வருகிறது” என்று பேசுவதைத் துணை முதல்வர் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரங்கள்தாம் பெரியார் கண்ட கனவா?

        சமத்துவபுரங்கள் அமைக்கும் திட்டத்தை வகுத்த முதல்வர் கலைஞருக்கும், புதிய சமத்துவபுரங்களைத் திறந்து வைக்கின்ற துணை முதல்வர்க்கும் பெரியார் கண்ட கனவு என்ன என்பது தெரியும். சமத்துவபுரங்களால் பெரியார் கனவு நிறைவேறிடவில்லை என்பதும் தெரியும். சமத்துவபுரங்களால் பெரியாரின் கனவு நிறைவேறிவிட்டதாக உண்மையிலேயே அவர்கள் நம்புகிறார்கள் என்றால், பெரியாரின் கனவு என்ன என்பதை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மையாக இருக்க முடியும்.

- பேராசிரியர் அறிவரசன்

Pin It