thamizhar kannottam logo

பெரிய கட்சிகளை எதிர்பார்க்காமல் குடியியல் சமூக (சிவில் சமூக) இயக்கங்கள் முன்னெடுக்கும் மக்கள் போராட்டங்கள் அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் வேகம் பெற்றுள்ளன. தாங்கள் முன்வைக்கும் இலக்குகளை நோக்கி முன்னேறியும் வருகின்றன.

அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., போன்ற தமிழகத்தின் முதன்மை கட்சிகளையோ காங்கிரசு, பாரதீய சனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளையோ சாராமல் இவ்வியக்கங்கள் முன்னேறி வருகின்றன. எடுத்துக்காட்டாக மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் கருதத் தக்க இடைக்கால வெற்றி அடைந்திருக்கிறது.

காவிரிப் படுகை மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் மீத்தேன் எடுப்புத் திட்டம் தற்காலிகத் தடையை இப்போது சந்தித்துள்ளது.

காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பதற்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தோடு இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை தற்காலிகமாகத் தடுத்து வைத்துள்ள தமிழக அரசு இத்திட்டத்தின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமர்த்தியது. அது இன்னும் அறிக்கை அளிக்கவில்லை.

மீத்தேன் திட்டம் முற்றிலும் கைவிடப்படவில்லை. காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் களிமண் பாறை எண்ணெய் (ஷேல் பெட்ரோலியம்) மற்றும் களிமண் பாறை எரிவளி (ஷேல் வாயு ) எடுக்க அளிக்கப்பட்டுள்ள அனுமதி நீக்கம் செய்யப்பட வில்லை என்ற போதிலும் மீத்தேன் திட்டம் தற்காலிகமாகவாவது நிறுத்தப்பட்டது மக்கள் இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றியே.

மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் தொடக்கம் மிக எளிமையானது. ஆனால் உறுதியானது.

சூழலியல் போராளி ஐயா நம்மாழ்வார் அவர்களின் தலைமையில் தோழர்கள் கே.கே.ஆர். லெனின், பொறியாளர் கோ. திருநாவுக்கரசு ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்ட போராட்டம் வளர்ச்சி பெற்றது. அடுத்து பேராசிரியர் த.செயராமன் ஒருங்கிணைப்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் தழுவி மாபெரும் மக்கள் இயக்கமாக மலர்ந்தது.

பல்வேறு ஊர்களில் புதைக்கப்பட்ட குழாய்கள், நடப்பட்ட எல்லைக்கற்கள் ஆகியவை அந்தந்த ஊர் மக்களால் பிடுங்கி எறியப்பட்டன. ஆடுதுறை முருகன் (ம.தி.மு.க.) போன்ற மக்கள் போராளிகள் கிளர்ந்தெழுந்தனர்.

சிவகெங்கை மாவட்டத்தில் மீத்தேன் திட்டம் தலை காட்டிய போது அங்கும் மீத்தேன் எதிர்ப்பு இயக்கங்களும் மக்களும் போராடினர்.

மக்கள் போராட்டங்கள் வெடித்ததால் கீழை ஆற்றல் பெறு நிருவனம் (கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜ்ஜி கார்ப்பரேசன்) தஞ்சையிலிருந்த தனது தலைமையகத்தைக் கடந்த சனவரி (2015) மாதம் காலிசெய்து கொண்டு வெளியேறியது.

இத்திட்டத்தால் உடனடியாகப் பாதிக்கப்படாத தமிழகத்தின் பிறபகுதிகளுக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்த விழிப்புணர்வு தேவை என்றாலும் கிடைத்துள்ள இடைக்கால வெற்றி ஊக்கமளிப்பதாக உள்ளது.

அதேபோல் கெயில் குழாய் பதிப்பை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களும், பெருந்துறையிலும், திருச்சியிலும் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு எதிராக மக்கள் இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டங்களும் முன்னேறி வருகின்றன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான நீண்ட போராட்டம் அந்த அணு உலையை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

முனைவர் சு.ப. உதயகுமார் தலைமையில் புஷ்பராயன், முகிலன். மை.பா.சேசுராசன் உள்ளிட்டோர் முன்முயற்சியில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கடலோர மக்கள் நடத்தி வரும் போராட்டம் உலககெங்கும் அணு உலைக்கு எதிரான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிராக தமிழகம் காக்கும் மக்கள் போராட்டம் எழத் தொடங்கியிருக்கிறது.

இத்திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் வழக்கு தொடர்ந்து பெற்றிருக்கிற இடைக்காலத்தடை இப்போராட்டத்தை வீச்சாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்பது உறுதி.

மேக்கே தாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக காவிரி உரிமை மீட்புக்குழு முன்னெடுத்த மேக்கே தாட்டு முற்றுகைப் போராட்டம் கடந்த 07.03.2015 அன்று தேன்கனிக் கோட்டையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

பல்வேறு உழவர் அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றை சேர்ந்தோரும் தனிப்பட்ட உணர்வாளர்களும் ஐயாயிரத்திற்கு மேற்பட்டோர் பெருந்திரளாகப் பங்கேற்ற இப்போராட்டம் தமிழகக் காவிரி உரிமைப் போராட்டத்தில் ஒரு மைல் கல்லாகும்.

இதுவரையிலும் இல்லாத வகையில் உழவர் அமைப்புகள் முன்னெடுத்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு 28.03.2015 இல் நடைபெற்ற தமிழகம் தழுவிய காவிரி உரிமைக்கான முழு அடைப்புப் போராட்டம் தமிழக மக்களின் ஒருங்கிணைந்த சீற்றத்தை வெளிப்படுத்துவதாக, வெற்றிகரமாக அமைந்தது.

முதன் முதலாக தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சென்று தலைமை அமைச்சர் நரேந்திரமோடியை சந்தித்து அழுத்தம் கொடுத்தது ஒரு முன்னேற்றம்.

 இவை மட்டுமின்றி அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் மக்கள் போராட்டங்கள் நடந்து வருவதை தொலைக்காட்சிகள் காட்டி வருகின்றன. மொத்தத்தில் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

பெரிய கட்சிகளின் துணையின்றி பெரிய ஆரவாரமின்றி குடியியல் சமூகத்தின் முயற்சியில் நடைபெற்று வரும் இப்போராட்டங்கள் தமிழகத்தின் அடிப்படை அரசியல் ஒரு திருப்புமுனைக்கு அணியமாகி வருவதைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.

 மேலடுக்கு அரசியலில் நிகழ்ந்துவரும் கேடுகெட்ட சீரழிவுக்கு எதிர்வினை யாகவும் இவை அமைகின்றன. நடந்துவரும் இப்போராட்டங்கள் அனைத்துமே இந்திய அரசை எதிர்த்து கூர்முனை கொண்டுள்ளதை உணரலாம்.

ஆயினும் இந்திய அரசின் தமிழினப்பகை அரசியலை புரிந்து கொண்டு தமிழ்த்தேசிய மாற்று அரசியலோடு இணையாமல் நடப்பதால்தான் இவை தனித்தனிப் போராட்டங்களாக சிறுசிறு வெற்றிகளோடு நிற்கின்றன.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவெங்கும் நடைபெற்ற பல்வேறு தனித்தனிப் போராட்டங்கள் கூட பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குவிக்கப்பட்டதைப் போல் தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் தனித்தனியான மக்கள் போராட்டங்கள் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தமிழ்த்தேசியப் போராட்டமாக நிலை கொண்டால் இறுதி வெற்றியை உறுதி செய்வது திண்ணம்.

இந்திய அரசின் தமிழர் பகைத் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திவரும் குடியியல் சமூக இயக்கங்கள் இத்திசையில் சிந்திப்பது இன்றைய தேவையாகும்!

Pin It

அரசியல் சூதாடிகளுக்குப் பொற்காலம்; மக்களோ கைவிடப்பட்ட அனாதைகள்! இதுதான் இன்றைய தமிழ்நாட்டுக் காட்சி!

ஆட்சியிலிருப்பவர்கள், ஆட்சியிலிருந்தவர்கள் அனைவரும் குதூகலத்தோடும் கும்மாளத்தோடும் பவனி வருகிறார்கள். பணத்திற்குப் பஞ்சமில்லை. அடுத்த ஆண்டு அவர்களுக்கு அறுவடைத் திருவிழா வரப்போகிறது. அதற்கான ஆரவாரத்தில் இப்போதே இறங்கி விட்டார்கள். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016இல் நடைபெற வேண்டும்.

ஆனால் 25.03.2015 அன்று தமிழக சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க. பொருளாளர் மாண்புமிகு ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் --_ அவரை அப்படித்தான் அழைக்கிறது ஆளுங்கட்சி -_ - முன்வைத்த 2015-_2016க் கான நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு திவாலாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அம்பலப் படுத்திவிட்டது.

pannerselvam 600

‘புரட்சித்தலைவி’யின் பொற்கால ஆட்சிக்கு வழி பாட்டுச் சொற்களால் வண்ணம் தீட்டத்தான் பன்னீர்ச்செல்வம் முயன்றார். ஆனால் தமிழக நிதிநிலை குறித்து அவர் ஒப்பாரி வைத்தபோது, அவரை அறியாமல் வழிந்த கண்ணீர்த் துளிகள் அரிதாரம் பூசப்பட்ட அம்மா புகழ்ச்சிச் சொற்களை நனைத்துச் சாயம் போகச் செய்துவிட்டன! இதோ அவரது அழுகுரல் :

“. . . தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சொந்த வரி வருவாய் வளர்ச்சியின் மந்த நிலை பெரும் சவாலாக உள்ளது.”

“நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலையில் குறிப்பாக உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையினால் வணிக வரி வசூல் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் ஆகும். 2014 - 2015ஆம் ஆண்டு சர்வதேச கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் ஏற்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை மாற் றத்தால் வணிக வரி வசூல் எதிர்பார்த்த அளவைவிட 1000 கோடி ரூபாய் அளவிற்குக் குறைந்துள்ளது.”

”இப்பொருட்களின் தற்போதைய விலை அடிப்படையில் 2015- _ 2016 ஆம் ஆண்டில் 2,141 கோடி ரூபாய் அளவுக்கு வணிக வரி வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

“இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்த போதிலும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை சில மாநிலங்கள் உயர்த்தியுள்ளது போல் நமது மாநிலத்தில் வரியை இந்த அரசு உயர்த்தவில்லை.”

”மற்ற இனங்களிலும் வசூலில் போதிய வளர்ச்சி இல்லை. எனவே, 2014 _ -2015ஆம் ஆண்டில் ஏற்கெ னவே இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் குறைவாகவே மாநி லத்தின் சொந்த வரி வருவாயில் மொத்த வளர்ச்சி இருக்கும்”.

பன்னாட்டுச் சந்தையில் பெட் ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைந்து போனதைத் துயரத்துடன் குறிப்பிடுகிறார் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம். விலைவாசி உயர்ந்தால்தான் தமிழக அரசின் வருமானம் உயரும் என்றால் அது மக்கள் நலம் சார்ந்த பொருளா தாரமா? காலனியப் பொருளா தாரமா? இதுதான் நமது வினா!

பெட்ரோல், டீசல் விலை குறைந்ததில் மக்களுக்கு மகிழ்ச்சி; மாநில அரசின் வருமானத்திற்கு வீழ்ச்சி என்றால் இதைத்தான் காலனியப் பொருளாதாரம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கூறு கிறது.

தமிழகத்தில் கிடைக்கும் பெட் ரோலியம், எரிவளி, நிலக்கரி இவற் றின் விலை, இவற்றின் வழி உற்பத் தியாகும் பெட்ரோல், டீசல், மின் சாரம் உள்ளிட்ட பொருட்களின் விலை, இதனால் கிடைக்கும் இலாபம் அனைத்தையும் இந்திய அரசு அள்ளிக் கொண்டு போகி றது. மக்கள் வாங்கும் அவசியப் பண்டங்களின் விலையில் விற்பனை வரி வசூலிப்பதுதான் தமிழக அரசின் முதன்மையான வரு மானம்! இந்திய அரசுக்கு ஏகாதி பத்திய பொருளாதாரம்! தமிழக அரசுக்குக் காலனியப் பொருளா தாரம்! அதனால்தான், பெட்ரோல் _- டீசல் விலை குறைந்ததால், மாநில வரி வருமானம் குறைந்து விட்டது என்று குமைகிறார் முதலமைச்சர்.

இந்திய அரசு தமிழ்நாட்டில், உற்பத்தி வரி, வருமான வரி, நிறுவன வருமான வரி, சுங்க வரி, நடுவண் விற்பனை வரி, சேவை வரி போன்ற வற்றின் வழியாக வசூலித்துக் கொண்டு செல்லும் மொத்தத் தொகை 80 ஆயிரம் கோடி ரூபாய். இதிலிருந்து தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தரும் பங்குத் தொகை எவ்வளவு? இதோ முதலமைச்சர் சொல்கிறார்.

“2015-2016ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் 16, 376.79 கோடி யாக இருக்கும் என மதிப்பிட் டுள்ளது”.

நடுவண் அரசின் நேரடித் திட்டங்கள் மூலம் - மேலும் தமிழக மக்களுக்கு மானியமாகக் கிடைக்கும் தொகை 21,150 கோடி ரூபாய்! தமிழகத்தில் வசூலித்த வரியின் பங்காகத் தருவது 16,376.79 கோடி ரூபாய். இந்திய அரசு தனது நேர டித் திட்டங்களுக்காகத் தமிழகத் திற்குத் தருவது 21,150 கோடி ரூபாய்! பகிர்வுத் தொகையைவிடத் தனது பரிவுத் தொகையை கூடுதலாக இந்திய அரசு வைத்துள்ளது.

இந்த நிதி உறவுக்குப் பெயர் தான் - ஏகாதிபத்திய - காலனிய நிதி உறவு என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கூறுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் 80 ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துக் கொண்டு - 37,526 கோடி ரூபாயை மட்டுமே தமிழ்நாட்டிற்குத் தரு கிறது. 42,474 கோடி ரூபாயை இந்திய அரசு எடுத்துக் கொள் கிறது.

நடுவண் அரசு மாநிலங்களில் வசூலிக்கும் வரித் தொகையிலிருந்து மாநிலங்களுக்குத் திருப்பித் தரும் பகிர்வுத் தொகை, கடைசியாகக் காங்கிரசு ஆட்சியில் 32 விழுக் காடாக இருந்தது. நரேந்திர மோடி தலைமை அமைச்சர் ஆனபிறகு, கூட்டுறவுக் கூட்டாட்சி முறை Co-operative Federalism என்ற குலா வல் முழக்கம் ஒன்றை உருவாக்கி னார். அதற்காக மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 32 விழுக்காட்டி லிருந்து 42 விழுக்காடாக்கினேன் என்றார். பகிர்வுத் தொகை பத்து விழுக்காடு உயர்ந்துள்ள போது, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய தொகை கூடுதல் ஆக வேண்டும் அல்லவா! ஆனால் அதுதான் இல்லை.

இதோ முதல்வர் பன்னீர்ச் செல்வம் அவர்கள் சோகம் கவ்வி டச் சொல்வதைப் பாருங்கள் :

“மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படும் நிதியின் பங்கு 32 சதவீதத் திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ள போதிலும், மாநிலங் களுக்கு ஏற்கெனவே மத்திய அரசால் திட்டங்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் பெருமளவு குறைக்கப் பட்டுள்ள தால், இந்த நிதிப்பகிர்வு மாற்றத் தால் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஆதாரங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்த ளிக்கும் போது, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கு மிகவும் குறைக்கப்பட்டுள்ளதால், நமது மாநிலம் பெரும் பாதிப்பிற்குள்ளா கியுள்ளது. தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு மற்றும் மானிய உதவிகளில் மொத்த அளவு 2014 _ -2015இல் பெறப்பட்ட 39,057 கோடி ரூபாயைவிட 2015- _ 2016ஆம் ஆண்டு குறைவாக, 37,526 கோடி ரூபாயாக இருக்கும்”.

அதாவது, 1,531 கோடி ரூபாய் குறையும். “இம்மாற்றங்களின் விளை வாக வரும் 5 ஆண்டுகளில் தமிழ் நாடு 35,485 கோடி ரூபாய் அள விற்கு மொத்த நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும்” என்கிறார் முதல்வர் பன்னீர்ச்செல்வம்.

அரிசி, மண்ணெண்ணெய் உட்பட பல்வேறு இன்றியமையாப் பண்டங்களின் மானியத்தையும் ஒதுக்கீட்டு அளவையும் குறைத்து விட்டது இந்திய அரசு. நடுவண் அரசு குறைத்துக் கொண்ட மானி யத் தொகையைத் தமிழ்நாடு அரசு தனது நிதியிலிருந்து ஈடுகட்டி பழைய விலைக்கே - அல்லது விலை யில்லாமல் -மக்களுக்கு வழங்க வேண்டிய நிலை உள்ளது.

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 32 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தியுள்ள போது, தமிழ்நாட்டிற்கான பங்குத் தொகை குறைவதேன்? நாற் பத்திரண்டு விழுக்காட்டுத் தொகைப் பகிர்வு என்பது ஒட்டு மொத்தத் தொகையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கும் தொகையே தவிர, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அங்கிருந்து வசூ லித்தத் தொகையில் 42 விழுக்காடு தருவதன்று. வளர்ச்சியடையாத மாநிலங்களில் கூடுதலாக நிதி ஒதுக் கிட, வளர்ச்சியடைந்த மாநிலத் திற்கு ஒதுக்கிய 42 விழுக்காட்டுத் தொகையிலிருந்து எடுத்துக் கொள் வார்கள்.

வளர்ச்சியடைந்த மாநிலம் தமிழகம் என்று பெயர் சூட்டி- தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 42 விழுக்காட்டுத் தொகையைக் குறைத்துக் கொண்டார்கள். மானி யங்களையும் கணிசமாகக் குறைத் தார்கள். எனவே, பா.ச.க. ஆட்சி 42 விழுக்காடு என்று படம்காட்டி-- ஏற்கெனவே கிடைத்த தொகை யையும் பிடுங்கிக் கொண்டது.

வளர்ச்சியடையாத மாநிலங் களுக்கு உதவுவது தவறா என்று சிலர் கேட்கக்கூடும்! அவ்வாறு உதவுவது தவறன்று. இந்திய அரசு எடுத்துக் கொள்ளும் 58 விழுக் காட்டிலிருந்து நிதியை எடுத்து, வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்குவது தானே ஞாயம்! தமிழ்நாடு போன்று வஞ்சிக்கப்பட்ட, - வருவாய்க் குறை வான மாநிலங்களின் தலையில் கை வைப்பதேன்?

மருத்துவம், வேளாண்மை, கல்வி, சாலை வசதிகள் உள்ளிட்ட மக்களின் இன்றியமையா நேரடிப் பயன்பாட்டிற்குப் பெருந்தொகை ஒதுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம்தான் உள்ளது. அவ்வா றான நேரடிப் பெரும் பொறுப்பு நடுவண் அரசுக்கு இல்லை. அது எதற்கு முனை முறியாமல் 58 விழுக் காட்டுத் தொகையை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்? ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 58 விழுக்காடு எடுத்துக் கொண்டால் மொத்தம் எத்தனை இலட்சம் கோடி நடுவண் அரசுக்குப் போகி றது என்பதை ஊகித்துக் கொள்ள லாம். அதில் ஒரு பகுதியை எடுத்து வளர்ச்சியடையாத மாநிலங்களுக் குக் கொடுப்பதுதான் அறம்!

மோடி அரசு மோடி வித்தை அரசு என்பதை 32 ஐ 42 ஆக உயர்த் திக் காட்டி முன்னர் கொடுத்த தொகையைவிடக் குறைவாகக் கொடுக்கும் சூதாட்டத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

“புரட்சித்தலைவி” அரசு, தமிழக உரிமைக்குப் போராடாமல், உரிமைக்குரலை ஓங்கி முழங்காமல் ஒப்பாரி வைப்பது ஏன்? இதுதான் புரட்சியா? இதுதான் துணிச்சலா? இதுதான் நிரந்தர முதலமைச்சரின் ஆற்றலா? பொறுப்புணர்ச்சியா?

மேலே கூறப்பட்ட வருவாய் இழப்புகளை ஈடுகட்ட அ.இ. அ.தி.மு.க. அரசு எங்கே தஞ்சம் புகுந் துள்ளது? ஒன்று மதுக்கடை; இன் னொன்று கடன் வாங்கித் தள்ளு வது!

தமிழக அரசு நடத்தும் மது வணிகத்தின் (டாஸ்மாக்) மூலம் 2014-2015ஆம் ஆண்டு 26,188 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2015-_-2016 இல் 29,672 கோடி ரூபாய் கிடைக்கும் என்று நிதிநிலை அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என்று முழக்கம் எழுதி வைத்துக் கொண்டு நடத்தும் மக்கள் விரோத வணிகத்தில், தமிழக அரசு வருவா யைப் பெருக்கி, இந்திய அரசு ஏற் படுத்தியுள்ள வருவாய்க் குறைப்பை ஈடுகட்டப் போகிறது!

நடுவண் அரசு தமிழ்நாட்டில் வசூலிக்கும் மொத்த வரி வருவாயில் 50 விழுக்காட்டுத் தொகையைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பித் தர வேண்டும் என்று ஒரு கோரிக்கை யைத் தமிழ்நாடு அரசு இந்த நிதி நிலை அறிக்கையில் எழுப்பியிருக்க வேண்டும். அதைவிடுத்து, ஒப்பாரி வைப்பதும் கூடுதல் மது விற்பனை மூலம் கூடுதல் நிதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும், மக்கள் விரோத அணுகுமுறையாகும்.

அடுத்து, கூடுதலாகக் கடன் வாங்கப் போவதாக நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இப்போதுள்ள கடன் 1,81,000 கோடி ரூபாய். இனி வாங்கப் போகும் கடன் 30,000 கோடி ரூபாய். ஆக மொத்தம் 2015-_-2016 - நிதியாண்டில் தமிழக அரசின் மொத்தக் கடன் 2,11,000 கோடி ரூபாயாக உயரும்!

2011-இல்தி.மு.க.விடமிருந்து அ.இ.அ.தி.மு.க.ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, தமிழகக் கடன் 1,15,000 கோடியாக இருந்தது. ஐந்தாண்டு களில் 96 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடனை சுமத்தி யுள்ளது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி!

தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. சண் முகம், கடனுக்கான வட்டித் தொகையாக ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி வருகிறோம் என்கிறார். வட்டி செலுத்துவது மட்டுமே 17 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் தமிழகப் பொருளாதாரம் எவ்வளவு பெரிய புதை சேற்றில் சிக்கியுள்ளது என்பது புலப்படும். இவ்வளவு பெரிய தொகையை இந்த நிதிநிலை அறிக்கை வேறு எந்த வளர்ச்சித் திட்டத்திற்கும் மக்கள் நலத்திற்கும் ஒதுக்கவில்லை.

ஆனால், திரு. சண்முகம் துணிச்சலாகப் பொய் சொல்கிறார். “கடன் மூலம் செய்யப்படும் முதலீட் டால் பொருளாதார வளர்ச்சியும் வரி வருவாயும் அதிகரிக்க வாய்ப் புள்ளது”என்கிறார்.

கடந்த நான்காண்டுகளில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கடனைத் திருப்பிச் செலுத்தியதா? புதிய கடன்களை வாங்கிக் குவித்ததா? புதிய கடன்களை வாங்கிக் குவித் துள்ளது. இதைத்தான் திறமையாகக் கடனைக் கையாளும் ஆளுமை என்று நிதித்துறை முதன்மைச் செயலாளர் கூறிக் கொள்கிறார்.

இதையெல்லாம் அம்பலப் படுத்துவதற்கு இங்கு உருப்படியான எதிர்க்கட்சி இல்லை. தி.மு.க.வைப் பொறுத்த வரை கலாட்டா செய்து மக்கள் கவனத்தை ஈர்க்கும் உத் தியைத்தான் தொடர்ந்து கடை பிடித்து வருகிறது.

2015- 2016க்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறையையும் வைத்துள்ள முதலமைச்சர் பன் னீர்ச்செல்வம் படிக்க எழுந்ததும், தி.மு.க. குழுவின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் எழுந்து தாம் ஓர் அறிக்கை படிக்க வேண்டும் என்று அனுமதி கோருகிறார். பேரவைத் தலைவர் திரு. தனபால் அனுமதி மறுக்கிறார். அந்த அனுமதி மறுப்பை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் குதூகல உணர்வோடு, எக்களிப் போடு தன் கட்சியினரை அழைத் துக் கொண்டு வெளிநடப்பு செய்து, செய்தியாளர்களிடம் அந்த அறிக் கையைப் படிக்கிறார்.

“கருந்தேளாகக் கொட்டும் கடன்கள், கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சட்டம் ஒழுங்கு, கரை புரண்டோடும் இலஞ்ச ஊழல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்ட நிர்வாகம்,” என்று அடுக்கி, இரும்புக்கு டாட்டா, செருப்புக்குப் பாட்டா, என்ற தி.மு.க.வின் பழைய பாணியில் அந்த அறிக்கை கூறிச் செல்கிறது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சட்ட மன்றத்தை அம்மாவின் ஆராத னைக் கூடமாக மாற்றி சனநாயகத் தைக் கேவலப்படுத்தி வரும் உண்மையை நாம் அறிவோம்; நாடறியும். பதவி கொடுத்த சனநாய கத்தின் பல்லை உடைத்து விட்டார் செயலலிதா?

ஆனால் முதலமைச்சர் நிதி நிலை அறிக்கையைப் படிக்க அனு மதிக்க வேண்டும். வாதம் செய்யக் கூடிய வாய்ப்பில் எதிர்க்கட்சி அக்குவேறு ஆணிவேராக அ.இ.அ. தி.மு.க. ஆட்சியில் திவாலாகிவிட்ட பொருளாதாரத்தை அம்பலப் படுத்த வேண்டும். அது பயனுள்ள தாக அமையும். சட்டப்பேரவையில் மட்டுமின்றி மக்கள் மன்றத்திலும் பொறுப்புணர்வோடு, செயலலிதா அரசின் திறமையற்ற நிதி நிர் வாகத்தை - அவர் ஆட்சியில் தமிழ கம் சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அவ்வாட்சியின் ஊழலை, முடங் கிப் போன நிர்வாகத்தை அம்பலப் படுத்தினால் மக்கள் விழிப்படை வார்கள்.

“மக்கள் விழிப்படைவார்கள்” என்ற கருத்தில்தான் தி.மு.க.வுக்கு ஒவ்வாமை உள்ளது. மக்கள் விழிப் படைந்தால், தங்களின் போலித் தனத்தையும் கண்டறிந்து விடுவார் களே என்ற அச்சம் தி.மு.க.வுக்கு இருக்கிறது. தி.மு.க.வுக்கும் அ.இ. அ.தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாடு வேட்டியும் சேலையும் மட்டும் தானே!

விசயகாந்து கட்சிதான் ஏற் பிசைவு பெற்ற முதன்மை எதிர்க் கட்சி. தே.மு.தி.மு.க.விற்கும், பொரு ளாதாரச் சிக்கல்கள் போன்ற தமிழகத்தின் அடிப்படைச் சிக்கல் களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லாட்டரிச் சீட்டு விழுந்து பணக்காரர் ஆனவர் போல் தலைவரானவர் விசயகாந்து!

வேறு சில குட்டித் தி.மு.க.க்கள் இருக்கின்றன. அவற்றின் பெயரும் பேச்சும் வேறாக இருக்கும். ஆனால் அவற்றின் செயல்முறை தி.மு.க. போலவே இருக்கும். கருணாநிதி யைக் கடுமையாக எதிர்த்தும் அவை பேசிக் கொள்ளும். ஆனால் அவர் தான் அக்கட்சிகளின் மானசீக வழிகாட்டி! குடும்ப அரசியல் நடத்துவதிலும் கங்காணி அரசியல் நடத்துவதிலும் கலைஞர்தான் அவற்றின் முன்னோடி!

வெறுமனே செயலலிதா எதிர்ப்பு, - வெறுமனே கருணாநிதி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் நீரோட்டமாக இருக்கும்வரை, தமிழக உரிமைச் சிக்கல்களும் தீராது; பொருளியல் சிக்கல்களும் தீராது! தமிழ் மக்களில் கணிசமானோர் விழிப்புணர்வும் பெற மாட்டார்கள். தத்துவ அரசி யல் இங்கு நடக்காது; சர்க்கஸ் அரசியல்தான் நடக்கும்! இலட்சிய அரசியல் இங்கு நடக்காது, ஏட்டிக்குப் போட்டி அரசியல்தான் நடக்கும். அடிப்படைச் சிக்கல்களில் தமிழர் ஒற்றுமையும் ஏற்படாது; தமிழக மக்களின் ஓர்மையும் உருவா காது!

தமிழக நிதித்துறையின் முதன் மைச் செயலாளர் சண்முகம் பீற்றிக் கொள்வதுபோல், கடந்த நான் காண்டுகளில் என்ன தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? என்ன வேளாண்மை வளர்ச்சி ஏற்பட்டுள் ளது? வருமானம் பெருக என்ன வழிவகை ஏற்பட்டுள்ளது? பன் னாட்டுச் சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைந்ததால் விற்பனை வரி வருவாய் குறைந்து விட்டது என்று சொல்லி சோகப் படும் அவலநிலையில் தானே தமிழகப் பொருளியலை அ.இ.அ. தி.மு.க. ஆட்சி வைத்துள்ளது.

வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் தமிழ்த் தேசியப் பேரியக் கத்திற்கு மாற்றுக் கருத்து இருக் கிறது என்றாலும், செயலலிதா அம்மையார் வெளிநாட்டு மூல தனத்தை ஈர்ப்பதில் வல்லவர் என்று சொல்லிக் கொள்கிறார் களே, அதற்காகக் கேட்கிறோம். செயலலிதா ஆட்சிக்கு வந்தபின் வெளிநாட்டுமூலதனத்தில் தொடங்கப்பட்ட தொழிற் சாலைகள் எத்தனை? விரல்விட முடியுமா?

14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் போட்டிருப்பதாக செயல லிதா கூறுகிறார். ஒரு கோடி ரூபாய் அளவுக்காவது புதிய தொழிற் சாலை திறக்கப்பட்டதா? இல்லை. மாறாக 25 ஆயிரம் பேர் வேலை செய்த நோக்கியா ஆலை மூடப் பட்டது. அத்தொழிலாளிகள் தெருவில் நிற்கிறார்கள். அடுத்து பாக்ஸ்கான் ஆலை மூடப்பட்டது.

தமிழ்நாட்டின் மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட். எட்டாயிரம் மெகாவாட்தான் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. மீதியை வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத் துத் தமிழக அரசு வாங்குகிறது. “தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவையாக உள்ள 13,775 மெகா வாட் மின் தேவையையும் தமிழகம் நிறைவு செய்துள்ளது” என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. “உற்பத்தி” செய்யப்படு கிறது என்று கூறவில்லை, “நிறைவு” செய்துள்ளது என்று சாமர்த்திய மாகக் கூறுகிறது நிதிநிலை அறிக்கை!

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓசூர் போன்ற முகாமை யான தொழில் நகரங்களில் ஏராள மான சிறிய, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டுவிட்டன.

தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் நலி வடைந்துவிட்டது. தஞ்சாவூர் குருங்குளம் அண்ணா அரசு சர்க்கரை ஆலை 2012 -_ 2013இல் 7.26 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியது. ஆனால், 2013 - -2014இல் 23. 63 கோடி ரூபாய் இழப்பு அடைந் துள்ளது. அதேபோல், பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலை 2013 -- 2014-இல் 23.59 கோடி ரூபாய் இழப்ப டைந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 31 கணக் குப்படி, தமிழக அரசு சர்க் கரைக் கழகத்தின் ஒட்டுமொத்த இழப்பு 99.70 கோடி ரூபாய். தமிழக அரசின் ஆவின் பால் ஊழல் ஊர் சிரிக்கி றது. ஆவின் பால் நிறுவனத் திற்குத் தலைமை தாங்கிய அ.இ. அ.தி.மு.க. பிரமுகர் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார்.

தொழில் துறையில் எதில் தமிழக அரசு இலாபம் ஈட்டியுள் ளது? அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்ட புதிய தொழிற் சாலைகள் எத்தனை? உதட்டைப் பிதுக்குவது ஒன்றே விடை!

மருத்துவ மனைகளை மேம் படுத்துவது, தமிழகச் சாலைகளை அகலப்படுத்துவது, குண்டும் குழியு மாகிவிட்ட சாலைகளை செப் பனிடுவது, புதிய சாலைகள் அமைப் பது, கல்வி நிலையங்களின் உள் கட்டுமானங்களை விரிவுபடுத்து வது, - வலுப்படுத்துவது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு வது,மூன்றாண்டுளாகத் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப் பட்ட வேளாண்மைத் துறையில் உழவர்களுக்கு இழப்பீடு வழங்கு வது, கடன் தள்ளுபடி செய்வது போன்ற எத்தனையோ திட்டங் களுக்குத் தேவையான நிதி ஒதுக்கு வதற்குத் தமிழகக் கருவூலத்தில் நிதியே இல்லை. யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல் ஏதோ “காட்டாப்பு காட்டி”யிருக் கிறார்கள் நிதிநிலை அறிக்கையில்!

வேளாண் உற்பத்திப் பொருட் களுக்கு இலாப விலை கிடைக்கா ததுதான் உழவர்களின் எல்லா இழப்புகளுக்கும் அடிப்படைக் காரணம்! நெல், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துகள் போன்ற வற்றிற்கு இலாப விலை கிடைக்க எந்த வழியும் காணவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு குவிண் டால் சாதரண வகை நெல்லுக்கு 50 ரூபாயும் சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும் ஊக்கத்தொகை வழங் கப்படும் என்கிறது இந்த அறிக்கை. கேரளத்தில் 200 ரூபாய்க்கு மேல் ஊக்கத் தொகை தருகிறார்கள், ஆந்திராவில் 100 ரூபாய்க்கு மேல் ஊக்கத் தொகை தருகிறார்கள். எம். எஸ். சுவாமிநாதன் குழு உற்பத்திச் செலவுக்கு மேல் அதைப்போல் ஐம்பது விழுக்காட்டுத் தொகை யைக் கூடுதலாகச் சேர்த்து விலை நிர்ணயிக்க வேண்டும் என்றது. அதைக் கடைபிடிக்கவில்லை தமிழக அரசு. வேளாண் கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு அதைப்பற்றி பேசவில்லை. கிராமக் கூட்டுறவு சங்கங்கள் பல மடிந்துவிட்டன, மற்றும் பல செத்துக் கொண்டுள் ளன. அரசின் நிதி அவற்றிற்கு உரிய வாறு இல்லை.

கர்நாடக நிதிநிலை அறிக்கை யில் காவிரி உபரி நீரையும் தடுக்கும் சதித் திட்டத்துடன் சட்ட விரோத அணைகள் கட்ட கள ஆய்வுக்கும் விரிவான திட்டம் தயாரிக்கவும் 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதல் இல்லாமலும், இந்த அணை களுக்குத் தடை கோரித் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையிலும், கர்நாடகம் மேற்படி அணைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியது சட்ட விரோதம். - நடுவண் அரசு தலை யிட்டு அவ்வறிக்கையில் உள்ள அப்பகுதியை நீக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையைக்கூட அ.இ. அ.தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை முன்வைக்கவில்லை. சட்டப்படி பார்த்துக் கொள்வோம் என்று சவடால் அடிக்கிறது.

மேற்கண்டஅவலங்கள் அனைத்தின் சுமையைத் தாங்கப் போவது, பாதிக்கப்படப் போவது தமிழக மக்கள்தாம்! இது அ.இ. அ.தி.மு.க. கட்சிக்கு வந்த நெருக்கடி என்ற அளவில் பார்த்துப் பூரித்துப் போகிறது தி.மு.க; புதுவாழ்வு கிடைக்கும் என்று சப்புக் கொட்டு கிறது. குட்டித் தி.மு.க.க்களுக்கு ஒரு கவலையுமில்லை. குழம்பிய குட் டையில் தனக்கு இரண்டு மீன் கிடைத்தால் போதும் என்பதே அவற்றின் எதிர்பார்ப்பு!

அ.இ.அ.தி.மு.க. கட்சியைப் பொறுத்தவரை, செயலலிதாவைத் தவிர மற்ற அனைத்து மட்ட நிர் வாகிகளும் அமைச்சர்களும் நிரந்தர மற்றவர்கள். எப்போது யார் தலை உருளுமோ என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் அம்மாவைத் தவிர அனைத்தப் பொறுப்பாளர்களும் இருப்பதால், அங்கு உட்கட்சி சன நாயகம், கலந்தாய்வு என்பது செயலலிதா விரும்பும் எல்லைக்குட் பட்டதாகவே இருக்கும். செயல லிதாவைப் பூஜிப்பது, செயலலிதா வுக்காக பூசை புனஷ்காரங்கள் செய்வது என்பவைதாம் அ.இ.அ.தி. மு.க. அணியினரின் அடிப்படைப் பணிகள். அப்பணிகள்தாம் அவர் களுக்கு ஆதாயம் தரும்.

பூஜிக்கப்படும் மனநிலைக்குப் பழகிப்போன செயலலிதாவும், எங்கேயாவது ஏதாவது பேசப் பட்டது என்று கேள்விப்பட்டால், அச்சத்திற்கு ஆளாகிவிடுவார். அது தன்னை எதிர்ப்பதாக இருக்குமோ, -அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமே - என்ற பதற்றத்திலேயே நிரந்தரத் தலைவரும் நிம்மதியற்ற மனநிலையில்தான் இருப்பார். எப்போதுமே சர்வாதிகாரிகள் நிம்மதியாக வாழ்வதில்லை.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லை, வேளாண் துறை வீழ்ச்சி கண்டுள்ளது, வேலை யின்மை பெருகியுள்ளது, அரசின் கடன் சுமை உச்சத்திற்குப் போய் விட்டது என்பன பற்றியெல்லாம் எள்ளளவும் கவலைப்படாமல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் அம்மாவின் விடுதலைக்காகப் பால்குடப் பக்தி ஊர்வலங்கள் நடத்திக் கொண்டுள்ளனர். பால் குடவளர்ச்சி தான் செயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு - 2023 திட்டம் போலும்! ஆரவார மாக வெளியிடப்பட்ட அ.தி.மு.க. அரசின் தொலைநோக்கு - 2023 என்பது வெறும் ஆடம்பரம் என்பதை நிதிநிலை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

தி.மு.க.வோ அடுத்த முதல்வ ராகிடும் ஆசையில் ஸ்டாலின் திரு விழாக்களை நடத்திக் கொண் டுள்ளது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒற்றைக் கதாநாயகனாக ஸ்டாலினை ஒப்பனை செய்வதில் தான் தி.மு.க.வின் இன்றைய இயக் கம் உள்ளது.

குட்டித் தி.மு.க.க்களும் அடுத்த முதல்வர் மற்றும் அமைச்சர் போன்ற கனவுகளில் கதாகலாட் சேபத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.

ஏராளமான அரசியல் கட்சி கள், ஆனால் ஏழரைக் கோடித் தமிழக மக்கள் அரசியல் அனாதை களாக உள்ளார்கள்.

பொருளாதாரத்தில் திவால் நிலை, அரசியல் நிலையில் அனா தைகள், பண்பாட்டு நிலையில் அரு வருக்கத்தக்கத் தனிநபர் துதிகள்; தனிநபர் பகைகள்! இதுதான் இன்றையத் தமிழ்நாட்டின் காட்சி! இதுதான் திராவிடக் கட்சிகளின் 48 ஆண்டு காலச் சாதனை!

அதிகாரம் கிடைத்ததால் அள விட முடியாத பணத்தைத் திரட்டிக் கொண்ட அரசியல் தலைவர்கள், பேரரசுகள் போல் கொற்றம் நடத்து கிறார்கள். இந்தத் தலைமைகளிட மிருந்து எந்த மாற்றத்தையும் எந்தப் பலனையும் தமிழகம் எதிர் பார்க்க முடியாது. தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கங்காணித் தனத்தில், ஊழல் கொள்ளையில், மக்களை அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக மாற்றிவிடும் உள வியல் உத்தியில், தமிழகப் பெருங் கட்சிகளிடையே மற்றும் குட்டித் தி.மு.க.க்களிடையே எந்த முரண் பாடும் கிடையாது. ஆணோ- பெண்ணோ - அவர்கள் அனை வரும் அரசியல் துறையில் ஒரு கருவில் உருவான பல பிள்ளைகள்! இவர்களிடம் மாற்றம் வராது. இவர்களை மாற்றினால்தான் தமிழகத்தின் நோய் நீங்கும்.

பதவி _- பணம் - _ விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத மக்கள் தமிழ்த் தேசிய உணர்வோடு மாற்று ஆற்றலாக வளரும் போதுதான், தமிழகம் புத்துணர்ச்சியும் புத்தெ ழுச்சியும் பெறும்!

அவ்வாறான மாற்றுச் சிந்தனை யின்றி, மாற்றுச் செயல்பாடின்றி, பொருளாதார அடிப்படையில் மட்டும் தமிழக நிதிநிலை அறிக்கை யைத் திறனாய்வு செய்தால் பலன் இல்லை!

Pin It

உச்சநீதி மன்றம் தீர்ப்பு

சமூக வலைத்தளங்களில் ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்தாலே, அதை கொடுங்குற்றம் எனக் கருதி சிறைத் தண்டனை விதிக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(A) பிரிவை நீக்கம் செய்து, 2015 மார்ச் 24 - அன்று, உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. நீதிபதிகள் செல மேஸ்வர் மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் இத்தீர்ப்பை வழங்கினர்.

மக்களோடு நின்று - மக்களைப் பாதுகாக்க வேண்டிய ஊடகங்கள், முதலாளிய ஒட்டுண்ணி வலைப் பின்னலில் இணைந்து மக்களுக்குத் துரோகமிழைக்கின்றன. எனவே தான், மக்களே கருத்துக் கூறும் _ திறனாய்வு செய்யும் சமூக வலைத் தளங்கள் _ கருத்துருவாக்கம் செய்யும் ஊடகமாக வளர்ந்து வருகின்றது. இது, அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவேதான், அதை ‘முறைப்படுத்துகிறோம்’என்ற பெயரில், மத்திய _- மாநில அரசுகள் முடக்கி வைக்க முயலுகின்றன.

அரசுக்கு எதிரான மக்கள் கருத்துகளை மட்டுப் படுத்த வேண்டுமென நினைக்கும் அதிகார வர்க்கம், அதற்கான கருவியாகப் பல ஒடுக்குமுறைச் சட்டங் களைக் கொண்டு வருகின்றன. அதுவும், ‘அராபிய வசந்தம்’எழுச்சிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார நாடுகளும், ஏகாதிபத்தியங்களும் சமூக ஊடகங்கள் மீதான தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத் தியப் பிறகு, நிலைமை மோசமானது.

2000ஆம் ஆண்டு வாஜ்பாயி தலைமையிலான பா.ச.க. அரசால், தகவல் தொழில்நுட்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், 2008ஆம் ஆண்டு காங்கிரசு - மன்மோகன் சிங் அரசு, அதிலொரு திருத்தம் மேற்கொண்டு 66(A) என்ற பிரிவை இணைத்தது. அப்பிரிவின்படி, “பிறர் மீது அருவருப்பான, அச்சுறுத் தக்கூடிய, தொந்தரவு தரக்கூடிய, ஆபத்து விளைவிக்கக் கூடிய, இழிவுபடுத்தக்கூடிய, மனதைக் காயப்படுத் தக்கூடிய, பகைமையைப் பரப்பக்கூடிய, வெறுப்பைப் பரப்பக்கூடிய தகவல்களை மின்னணுக் கருவிகள் மூலமாக பரப்புவது தண்டனைக் குரிய குற்றம்” என்று வரையறுக் கப்பட்டது.

இது மக்களின் கருத்துரிமைக்கு நேர் எதிரானக் கொடூரமான ஒடுக்குமுறை என அப்போதே, சமூக ஆர்வலர்கள் கூறினர்.

இந்நிலையில், இது போதா தென்று, 2011ஆம் ஆண்டு இச் சட்டத்தில் மேலும் சில கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அத்திருத்தங்களின்படி, “இனவாதத் தன்மையுடைய, பல்வேறு மொழியினங்களுக்கிடையில் பகைமை யைத் தூண்டக்கூடிய அல்லது அச்சுறுத்தக்கூடிய அல்லது தீமை பயக்கக்கூடிய அல்லது சட்ட விரோதத் தன்மையுடைய அல்லது வேறு வகையில் எதிர்க்கப்பட வேண்டிய தகவல் பரிமாற்றங்கள்”தண்டனைக்குரியக் குற்றங்கள் என வரையறுக்கப் பட்டன. மேலும், இந்தியாவின் நட்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண் மைக்கு எதிராகக் கருத்துப் பரப்புவதும் தண்டனைக் குரிய குற்றமாக இச்சட்டம் கூறியது.

இத்திருத்தங்களின்படி, முகநூல் _ சுட்டுரை (ட்விட்டர்) _- வலைப் பதிவு போன்ற சமூக வலைத்தளங் களில் கருத்துத் தெரிவிப்பவர்களின் கருத்துகளை, ஒருவர் தனது மனம் புண்படுகிறது என புகார் அளித் தாலே போதும், அதை எழுதிய வரை சிறையில் அடைக்க வழிவகை செய்யப்பட்டது.

அதாவது, "எரிச்சலூட்டுவது', "தர்மசங்கடம் ஏற்படுத்துவது', "ஆட்சேபகரமானது', "பாதிப்பை ஏற்படுத்துவது”போன்ற தெளிவில் லாத வார்த்தைகளைக் கொண்டு, இனப் படுகொலை _ ஊழல் _- அரசின் எதேச்சதிகாரம் என எந்த வொரு அரசு நடவடிக்கை குறித் தும் இணையத்தில் எழுத முடியாத நிலை, இப்பிரிவின் மூலம் நுணுக்க மாக உருவாக்கப்பட்டது.

இச்சட்டத் திருத்தத்தின் மூலம், ஆட்சியாளர்களும், அரசியல் வாதிகளும் சமூக வலைத்தளங் களில் தமக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த பலரை தொடர்ச்சியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

2011ஆம் ஆண்டு ஏப்ரலில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்ணியமான முறையில் திறனாய்வு செய்து கருத்துப் படம் வெளியிட்ட ஜாதவ்பூர் பல் கலைக் கழக வேதியியல் பேரா சிரியர் அம்பிகேஷ் மகாபாத்ரா, 66(A) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்.

2012ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று, இந்திய ஆட்சியாளர் களின் அவலங்களை கருத்துப் படமாகத் தீட்டிய ஓவியர் அசிம் திரிவேதி, அவருடைய முகநூல் படங்களுக்காகவே கைது செய்யப் பட்டு, சிறையிலடைக்கப் பட்டார்.

2012ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குறித்து முகநூலில் எழுதியதற்காக, ஷஹீன் தாதா,- ரெணு ஆகிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே மாதத்தில், இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை திறனாய்வு செய்து எழுதியதற்காக புதுச் சேரியைச் சேர்ந்த சிறுதொழில் முனைவோர் இரவி சிறீதர் என்ப வர் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின்கீழ், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக் கப்பட்டார். இதுபோன்ற பல கைது கள் நாடெங்கும் இச் சட்டத்தின் மூலமாகவே அரங்கேறின.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்தே, 2012 நவம்பர் 29 அன்று, தில்லி சட்டக் கல்லூரி மாணவி சிரேயா சிங்கல் என்பவர், கருத்துரிமைக்கு எதிரான 66(கி) பிரிவை நீக்கம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

2012ஆம் ஆண்டு திசம்பரில், 66(A) பிரிவுகளின் கீழ் காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து மக்களவையில் எதிர்க் கட்சிகள் புகார் எழுப்பியதைத் தொடர்ந்து, அப்பிரிவைப் பயன் படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன. எனினும், கைது நடவ டிக்கைகள் நிறுத்தப்படவில்லை.

இதனையடுத்து, 2013 பிப்ரவரி யில், மும்பை உயர் நீதிமன்றத்தில் 66 (A) பிரிவை நீக்க வேண்டுமென பொதுநல வழக்கொன்று தொடுக் கப்பட்டது.

அதன்பிறகு, 2013 மே மாதம், மேலதிகாரியின் அறிவுறுத்தலோடு தான் இதுபோன்ற கைது நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டு மென பொத்தாம் பொதுவில் ஒரு அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. ஆனாலும், கைதுகள் நிற்கவில்லை.

இந்நிலையில், 2014 மார்ச் மாதம், உத்திரப்பிரதேசத்தில் சமாஜ் வாதிக் கட்சித் தலைவர் ஒருவரை விமர்சனம் செய்த பதினோறாம் வகுப்பு பள்ளி மாணவர், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது உச்ச நீதிமன்ற அறிவுரையை மீறியச் செயல் என நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே, சிரேயா சிங்கல் தாக்கல் செய்த வழக்கு முழுமையாக விசாரிக் கப்பட்டு, தற்போது அதில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு விதி 19 வழங்கியுள்ள கருத்துரிமையைப் பாதுகாக்கும் வகையிலான இத் தீர்ப்பு, வரவேற்கத்தக்கதே. எனினும், அரசுக்கு எதிரான கருத்துரிமையை முடக்க நினைக்கும், இந்திய அரசுக்கு அதற்கென வேறு சில சட்டக் கருவிகளும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

இத்தீர்ப்பில்கூட, வலைத்தள கருத்துப் பதிவுகளுக்குக் கைது நடவடிக்கை என்றுள்ள பிரிவை நீக்கியுள்ள நீதிபதிகள், ஆட்சேபகர மான, சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பதிவு களை முடக்கி வைக்கும் 69கி பிரிவையும், அத்தவறான நடவடிக் கைக்கு எதிராக இழப்பீடு கோரு வதிலிருந்து விலக்கு அளிக்கும் 79-ஆவது பிரிவையும், சில நிபந்தனை களுடன் தொடர அனுமதி அளித் துள்ளனர்.

அதாவது, ஒர் அரசுக்கு எதி ரான எந்தவொரு பதிவையும் நீக்க அரசுக்கு அதிகாரம் வழங்குகின்ற பிரிவுகள் இன்னும் இச்சட்டத்தின் படி நீடிக்கின்றன. கைது நடவடிக் கைகளுக்கு மட்டுமே தடை வழங்கப் பட்டுள்ளது கவனிக்கத்தக்க தாகும்.

கடந்த, 2014 பிற்பாதியில் மட்டும் இந்திய அரசின் வேண்டு கோளுக்கு இணங்க இதுவரை 5,832 முகநூல் பதிவுகள் அரசுக்கு எதிரானவை என முடக்கப்பட்டி ருக்கின்றன. இனியும், அவை தொடரும். ஆனால், கைது நட வடிக்கைகள் தொடராது என்ப தற்கு உத்திரவாதம் இல்லை.

அரசுக்கு எதிரான நமது கருத்துகளை ‘அவதூறு’என்றும், சமூகங்களுக்கிடையே பிளவு ஏற்படுத்துவது என்றும் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் வேறு சில பிரிவுகளைக் கொண்டு காவல் துறையினர் கைது செய்ய முற்பட லாம். எனவே, கருத்துரிமைக்கு எதிரான இந்தப் பிரிவுகளை நீக்கவும் நாம் போராட வேண்டி யுள்ளது.

கருத்துரிமைக்கான போராட்டக்களத்தில், மேற்கண்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திசைகாட்டும் தீர்ப்பு என்பதில் ஐயமில்லை!

Pin It

modi 450இந்திய அரசு முன்வைத்துள்ள நிலம் கையகப் படுத்தல் சட்ட வரைவு 2014 நரேந்திர மோடி எதிர் பார்த்ததைவிட கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பா.ச.க.வின் குடும்ப அமைப்புகள் கூட இச்சட்டத்தை நியாயப்படுத்த முடியாமல் திணறுகின்றன.

இந்நிலையில் மக்களில் கணிசமான பகுதியினரை ஏற்கச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ். தலைமை பா.ச.க.வைப் பணித்தது.

இச்சூழலில்தான் “மனதில் உள்ளதைப் பேசுகிறேன்” (மன் கி பாத்) என்ற பெயரில் வானொலி மூலம் மாதந் தோறும் ஏதாவது ஒரு பொருள் பற்றி பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 22. 03. 2015 அன்று நிலம் கையகப்படுத்தல் சட்டம் குறித்து உரையாற்றி னார்.

நெஞ்சம் முழுதும் நிறைத்து வைத்திருந்த பொய் களை மோடி அப்போது மக்களிடம் வாரி இறைத்தார். நிலம் கையகப்படுத்தல் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் பொய்ப் பரப்புரை செய்வதாகக் கூறிய மோடி அதற்கு விளக்கம் அளிப்பதாக சொல்லிக் கொண்டு எந்தத் தயக்கமுமின்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் பிறப்பிக் கப்பட்ட 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைத் தாங்களும் ஆதரித்திருந்தாலும், அது செயல்படுத்தப் பட்ட கடந்த ஓராண்டில் இச்சட்டம் உழவர்களுக்கு நன்மை பயக்கவில்லை என்று பட்டறிவின் மூலம் உணர்ந்து கொண்டதால்தான் உழவர்களுக்கு நன்மை செய்யும் நோக்கிலேயே திருத்தச் சட்டம் கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் கூறினார்.

ஆனால், இந்த கெட்டிக்காரனின் புளுகு எட்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை. அந்த உரையில் அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னை அறியாமல் தனது உண்மை நோக்கத்தை சொல்லி சிக்கிக் கொண்டார்.

மராட்டியம், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் 2013-ஆம் ஆண்டு சட்டப்படி தொழிலகத் தேவைகளுக்காக நிலம் கையகப்படுத்துவது கடினமாகிவிட்டதாலும், ஒரு துண்டு நிலத்தைக் கையகப்படுத்துவதற்குக் கூட பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குறைகூறின. தொழில்துறைத் தேவைக்காக நிலம் எடுப்பதை எளிதாக்குவதற்காகத் தான் இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்று தன்னை அறியாமல் உண்மையை உளறிவிட்டார். உழவர்களின் நன்மைக்காக இச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாக முதலில் தான் கூறியப் பொய்யை தானே போட்டுடைத் தார்.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு திருத்தங்களை திறந்த மனத்தோடு விவாதித்து அவற்றுள் ஒன்பது திருத்தங்களை ஏற்றுக் கொண்ட பிறகே திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்ற மக்கள வையில் நிறைவேற்றியதாக சனநா யக வேடம் போடுகிறார் நரேந்திர மோடி.

2013-ஆம் ஆண்டு சட்டத்தில் நிலம் கையகப்படுத்தலுக்குத் தகுதி யுடையவையாக இந்திய நிறுவனச் சட்டத்தில் (கம்பெனி சட்டத்தில்) பதிவு பெற்ற தனியார் நிறுவனங் களே அனுமதிக்கப்பட்டன.

ஆனால், மோடி அரசு பிறப் பித்த அவசரச் சட்டத்தில் எந்தத் தனியார் அமைப்பும் நிலம் கையகப் படுத்த தகுதியுடையது என மாற்றப் பட்டது. இதற்கு ஏற்ப 2013-ஆம் ஆண்டு சட்டத்தில், அதாவது முதன்மைச் சட்டத்தில், எங்கெல் லாம் “தனியார் நிறுவனம்” என்று வருகிறதோ அங்கெல்லாம் “தனியார் அமைப்பு” என்று மாற்றிக் கொள்க என ஒரு திருத்தத்தை இரண்டாவது கூறாக முன் வைத்தது.

தனியார் அமைப்பு என்றால் என்ன என்பதை வரையறுப்பதற்கு முதன்மைச் சட்டத்தின் பிரிவு 3-இல் (yy) என்ற புதியப் பிரிவு சேர்க் கப்பட்டது. “அரசாங்க அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தவிர பிற எல்லாமே தனியார் அமைப்பு என்ற வரையறுப்பில் வரும்”என்று இப்புதியப் பிரிவு கூறுகிறது.

மேற்கண்ட இரண்டு பிரிவுக ளையும் நீக்குமாறு எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீக்கி, ஏற்கெனவே முதன் மைச் சட்டத்தில் உள்ளவாறு விட்டுவிட்டதைத்தான் பெரிய சனநாயக நடவடிக்கை போல் மோடி கூறுகிறார்.

அதேபோல் முதன்மைச் சட்டத்தில் பிரிவு 2 (1) (b) நிலம் கையகப்படுத்தலுக்கு தகுதியுடைய வையான தனியார் நிறுவனங்கள் என்ற வரிசையில் தனியார் மருத்துவமனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் வராது என விலக்களித்திருந்தது. மோடி அரசு முன்வைத்த வரைவில் இந்த விலக்கு நீக்கப்பட்டிருந்தது.

தனியார் மருத்துவ மனைகளுக் கும், தனியார் கல்வி நிறுவனங்களுக் கும் நிலம் கையகப்படுத்தல் உரிமை யிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மீண்டும் கொண்டு வருமாறு அ.இ. அ.தி.மு.க. உள்ளிட்ட சில எதிர்க் கட்சிகள் முன்வைத்த திருத்தத்தை அரசு ஏற்றுக் கொண்டது.

புதிதாக எந்தக் கட்டுத் திட்டமும் கொண்டு வரப்பட வில்லை. முதன்மைச் சட்டத்தில் இருந்தது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஏதோ பெரிய சனநாயக நடவடிக்கைப் போல மோடி படம் காட்டுகிறார்.

2013 முதன்மைச் சட்டத்தில் இருந்தவாறே மீண்டும் கொண்டு வந்ததைத்தான் தனது சாதனையா கக் கூறி மோடி அரசின் நிலப் பறிப்புச் சட்டத்திற்கு தனது கட்சி அளித்த ஆதரவை நியாயப் படுத்தி நீண்ட அறிக்கை விட்டார் செய லலிதா.

மோடியும், செயலலிதாவும் ஏற் கெனவே பேசி வைத்துக் கொண்டு அற்பமான ஒன்றை ஆகப் பெரிய தாகக் காட்டி சனநாயக நாடகமாடு கின்றார்கள்.

மோடியின் வானொலி உரை யின் உச்சக்கட்ட பொய் ஒன்று உண்டு. இந்தப் பொய்யைத்தான் மிகப்பெரிய துருப்புச் சீட்டுப்போல மோடி பயன்படுத்தினார். மோடி கூறியது வருமாறு;

“2013ஆம் ஆண்டு இயற்றப் பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் மிகப்பெரிய குறை எது என்று சொல்கிறேன். அரசின் இரயில்வே, தேசிய நெடுஞ் சாலைகள், சுரங்கம் போன்ற அதிக அளவில் நிலம் தேவைப்படுகிற 13 துறைகளின் செயல்பாட்டுக் கூறுகள் அந்த சட்டவரம்பின் கீழ் கொண்டுவரப் படவில்லை. அதாவது, அந்தத் துறைகளுக்காக நிலம் கையகப்படுத்துகிற போது அதற்கான இழப்பீடு 120 ஆண்டு கள் பழமையான சட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்படும் என்பதுதான் இதன் பொருள். இப்போது சொல்லுங்கள் இது பெரிய குறை இல்லையா? தவறு இல்லையா? நாங்கள் புதிய சட்ட மசோதாவில் இதைச் சரி செய் திருக்கிறோம். இந்தத் துறைகளின் நடவடிக்கைகளை சட்ட வரம்புக் குள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் விளைவாக நிலங்களுக்கு நான்கு மடங்கு இழப்பீடு வழங்கப் படும்”என்றார் மோடி.

மோடியின் நுணுக்கமான மோசடிப் பேச்சு இது.

அரசோ அல்லது தனியாரோ தொழிலகம் நிறுவுவதற்காக அல்லது கட்டமைப்புத் திட்டங் களை நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தினால் நிலத்தை இழக்கும் உரிமையாளர்களுக்கு சந்தை விலையைப்போல் கிராமப் புறங்களில் 4 மடங்கும், நகர்ப் புறங்களில் 2 மடங்கும் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று முதன்மைச் சட்டம் கூறியது.

இதில் மோடி வழங்கியது புதிதாக எதுவும் இல்லை.

ஆனால் முதன்மைச் சட்டத் தில் பிரிவு 105 (3) கீழ்வருமாறு கூறுகிறது.

“இந்தச் சட்டம் செயலுக்கு வந்த ஓராண்டுக்குள் நடுவண் அர சானது முதல் அட்டவணையின் படியான இழப்பீடும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அட்டவணை யின் படியான மறு குடியமர்த்தல் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை களும், நான்காவது அட்டவணை யில் உள்ள சட்டங்களுக்கும் பொருந்துமாறு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது இச்சட்டத்தின்படி வழங்கப்பட்ட இழப்பீடோ மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் செயல்பாடோ நீர்த்துப் போகாதவாறும் எந்த வகையிலும் குறைந்துவிடாதவாறும் செயல்படுத்த வேண்டும்”என்று கூறுகிறது.

அதாவது, 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் செயலுக்கு வந்த ஓராண்டுக்குள் இச் சட்டத்தின் நான்காவது அட்ட வணையில் கூறப்பட்டுள்ள சட்டங் களின்படி கையகப்படுத்தப்பட் டுள்ள நிலங்களுக்கும், 4 மடங்கு இழப்பீடு, வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அது மட்டுமின்றி இச்சட்டத்தில் கூறியவாறு நான்காவது அட்ட வணையில் உள்ள சட்டங்களின்படி கையகப்படுத்தப்படும் நிலங் களுக்கும் 80 விழுக்காடு உரிமை யாளர்களின் ஒப்புதல் என்ற நிபந்த னையும், சமூகத் தாக்க மதிப்பீடு என்ற நிபந்தனையும் பொருந்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

அதாவது, 31.12.2014-இன் முடிவில் நான்காவது அட்டவணை யில் உள்ள சட்டங்களையும், 2013ஆம் ஆண்டு நிலம் கையகப் படுத்துதல் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்ந நான்காவது அட்டவ ணைச் சட்டங்கள் தான் மோடி கூறும் 13 சட்டங்கள்.

அவையாவன :

1. பழைமையான நினைவகங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் சட்டம், 1958.

2. அணு ஆற்றல் சட்டம், 1962

3. தாமோதர் பள்ளத்தாக்கு வாரியச் சட்டம், 1948.

4. இந்திய டிராம்வே சட்டம், 1886.

5. சுரங்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தல் சட்டம், 1885.

6. மெட்ரோ இரயில்வே கட்டுமானச் சட்டம், 1968.

7. தேசிய நெடுஞ்சாலைச் சட்டம், 1956.

8. பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் அமைப்பு நிலம் எடுப்புச் சட்டம், 1962.

9. அசையாச் சொத்துகள் மீட்பு மற்றும் கையகப்படுத்தல் சட்டம், 1952.

10. நிலம் கையகப்படுத்தலின் போதுவெளியேற்றப்படும் மக்களை மீள் குடியமர்த்தும் சட்டம், 1948.

11. நிலக்கரி வளமுள்ள நிலப் பரப்புகளைக் கையகப்படுத்தல் சட்டம், 1957.

12. மின்சாரச் சட்டம், 2003.

13. இரயில்வேச் சட்டம், 1989.

மேற்கண்ட 13 சட்டங்களின்படி நிலம் இழப்போர் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் வழங்கிய வாய்ப்பைப் பெறாமல் இருந்தார்கள். எனவே இவ்வகை நிலம் இழப்போரையும், 2013 சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வந்து பாதுகாத்திட வேண்டும் என்பதுதான் இச்சட்டத்தின் விதி 105 (3) கூறும் கட்டளையாகும்.

இதனை 31.12.2014 -இன் முடிவில் செய்து முடிக்க வேண்டும் என்றும், இந்த விதி 105 (3) கூறுகிறது.

இதன்படியே மோடி அரசின் திருத்தச் சட்டம் மேற்சொன்ன 13 சட்டங்களையும் 1.1.2015 முதல் நிலம் கையகப்படுத்தல் சட்டவரம்புக்குள் கொண்டு வந்துள்ளது.

முதன்மைச் சட்டத்தில் கூறப் பட்டுள்ளவாறு மேற்கண்ட 13 சட்டங்களின்படி நிலம் இழப் போருக்கு 4 மடங்கு இழப்பீட்டை வழங்குவதைத் தவிர மோடியின் திருத்தச் சட்டம் புதிதாக எந்தச் சலுகையையும் வழங்கவில்லை. மோடி சொல்வது போல் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் குறையாக இதை கூற முடியாது.

மாறாக முதன்மைச் சட்டம் வழங்கிய மிக முக்கிய பாதுகாப்பை இந்த 13 சட்டங்களைப் பொருத்தும் மோடி அரசு நீக்கிவிட்டது. நில இழப்புக்கு உள்ளாகும் நில உரிமை யாளர்களில் 80 விழுக்காடு நிலத் தின் உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும், நிலம் கையகப் படுத்துதலால் ஏற்படும் பிற இழப்பு களை ஈடு செய்வதற்கான சமூக தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண் டும் என்ற முதன்மைச் சட்டத்தின் மிகப்பெரிய பாதுகாப்பு விதிகள் நீக்கப்பட்டப் பிறகே மேற்கண்ட 13 சட்டங்கள் முதன்மைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட் டுள்ளன. இது 2013ஆம் ஆண்டு முதன்மைச் சட்டத்தின் பிரிவு 105 (3)க்கு எதிரானது.

ஆனால், இதையே உழவர் களைப் பாதுகாக்க தனது அரசு மேற்கொண்ட மிகப்பெரிய புதிய நடவடிக்கை என்பது போல மோடி மோசடியாகப் பேசுகிறார்.

கால்வாய்கள் வெட்டுதல், புதிய நீர்நிலைகள் வெட்டுதல் போன்ற வேளாண்மை மேம்பாட்டுத் திட் டங்களுக்காக நிலம் கையகப்படுத்து வது குறித்து 2013-ஆம் ஆண்டு முதன்மைச் சட்டத்தில் கூறப்பட் டுள்ளதைத் தாண்டி புதிதாக எதையும் மோடி அரசின் திருத்தச் சட்டம் சேர்த்துவிடவில்லை.

உண்மை நிலை இவ்வாறு இருக்க வேளாண்மைக்கான நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக் காகவேதான் திருத்தச் சட்டம் கொண்டு வருவதாக வானொலி உரையில் மோடி கூறுவது அப் பட்டமான பொய்யாகும்.

இதுவரையிலும் இருந்த எந்தப் பிரதமரும் சொல்ல முன்வராத, ஏன், இட்லர் கூட, கோயபல்ஸ் கூட கூறத் தயங்கிய பொய்களை எந்தக் கூச்சநாச்சமுமின்றி பா.ச.க. பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில் அவிழ்த்து விட்டுள்ளார்.

மோடி அரசு கணித்ததைவிட வும், மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும் பெரு முதலாளி நிறுவனங்களுக்கு ஆதரவான தனது அரசின் நிலம் கையகப்படுத்தும் திருத்தச் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதி லேயே இவ்வரசு குறியாக இருக் கிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவை யில் இத்திருத்தச் சட்டம் நிறை வேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக பா.ச.க. தலைமை மதிப்பிட்டுள்ளது. ஆயி னும், எப்பாடு பட்டாவது இச் சட்டத்தை நிறைவேற்றிவிட வேண் டும் என்பதிலும் கவனமாக இருக் கிறது.

மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளுக்கு இருக்கிற பெரும்பான் மையைப் பயன்படுத்தி இத்திருத்தச் சட்டவரைவை பொறுப்புக் குழு வின் ஆய்வுக்கு விட்டுவிட்டால் தனது நோக்கம் நிறைவேறாதே என்று மோடி அஞ்சுகிறார்.

எனவே, அவைத் தலைவர்கள் வழியாக நாடாளுமன்ற கூட்டத் தொடரை இடை நிறுத்தம் செய்து விட்டு, அந்த இடைவேளையில் வரும் ஏப்ரல் 6ஆம் நாளுக்குள் மீண்டும் புதிய அவசரச் சட்டமாக பிறப்பிக்கலாமா என்று மோடி அரசு சிந்திக்கிறது.

இந்தச் சதித் திட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஒப்புதல் அளித்து கையெழுத்திட மறுத்து அந்த அவசரச் சட்டத்தை திருப்பி அனுப் பிவிட்டால் என்ன செய்வது என்ற சிக்கல் மோடி அரசுக்கு உள்ளது.

அவ்வாறு குடியரசுத் தலைவர் கையப்பமிட மறுத்தால் 2ஆவது முறையும் மோடி அமைச்சரவை அந்த அவசரச் சட்டத்தை கையெ ழுத்துக்கு அனுப்பினால் கையெ ழுத்து இடுவதைத் தவிர குடியரசுத் தலைவருக்கு வேறு சட்டவாய்ப்பு இல்லை. ஆயினும், அரசியல் வகை யில் பெரிய அவப்பெயராக அது மாறும் என்ற அச்சம் மோடி அரசுக்கு உண்டு.

மாநிலங்களவையில் பொறுப் புக்குக் குழுவிற்கு விடப்படாமல் தோற்கடிக்கப் படுவதையே குறைந்த தீமையாக மோடி அரசு கருதுகிறது. ஏனெனில் அவ்வாறான சூழலில் அரிதாக நிகழும் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டித் தனக்குள்ள மொத்தப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிலப்பறிப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என்று மோடி அரசு கணக்குப் போடு கிறது.

ஆயினும், இவ்வாறான கூட்டுக் கூட்டத்தை குடியரசுத் தலைவர் தாம் கூட்ட முடியும். இதற்கு குடி யரசுத் தலைவர் ஒப்புதல் தருவாரா என்ற ஐயத்திலும் மோடி அரசு உள்ளது.

இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கும், வாய்ப்பில்லை யென்றால் 31.12.2014-இல் தான் பிறப்பித்த அவசரச்சட்டம் 2015 ஏப்ரல் 6-இல் காலாவதியாகுமாறு விட்டுவிட்டு நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத் தொடர் மே மாதம் முடிந்த பிறகு மீண்டும் அவசரச் சட்டமாக பிறப்பிக்கலாம் என்ற நினைப்பிலும் மோடி அரசு உள்ள தாக ஏடுகள் கூறுகின்றன.

எப்படி இருப்பினும் நிலப்பறிப் புச் சட்டம் தொடர்பாக நரேந்திர மோடி அரசு ஓர் இக்கட்டில் இருக் கிறது. இதிலிருந்து மீள்வதற்கே மக்களைக் குழப்பும் நோக்கத்தோடு வானொலி மூலமாக வரலாறு காணாத பொய்யுரையை மோடி நிகழ்த்தினார்.

மோடியின் இந்த மோசடித் திட்டத்தை முறியடித்து நிலப் பறிப்புச் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்க மக்கள் இயக்கங்கள் ஆர்ப்பரித்து எழவேண்டும்.

Pin It

மட்டைப் பந்து (கிரிக்கெட்) விளையாட்டில், உலகக் கோப்பைக்கான அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவில் இந்தியா தோற்றுவிட்டது உங்களுக்கு வருத்தமளிக்க வில்லையா?

தமிழர்கள் அன்றாடம் எத்தனையோ சிக்கல்களில் இந்தியாவிடம் தோற்று வருகிறார்கள். அவற்றுக்கு அழுவதற்கே நேரம் போதவில்லை. இந்தியா தோற்ற தற்குத் தமிழர்கள் எப்படி அழ முடியும்? ஈழத்தமிழர் இனப்படுகொலை, கச்சத்தீவுப் பறிப்பு, மீனவத் தமிழர் படுகொலை, காவிரி - முல்லைப் பெரியாறு - பாலாறு உரிமைப் பறிப்புகள், தமிழகத்தைச் சுற்றி அணுக்கதிர் வீச்சுத் தொழிற்சாலைகள் திணிப்பு என அன்றாடம் தமிழர்களும் தமிழகமும் இந்தியாவிடம் தோற்று வரும்போது, இந்தியாவின் மட்டைப்பந்து தோல்வி என் மனத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்த முடியும்?

தாலி கட்டுவது பழந்தமிழர் பழக்கம் என்றும், பழந் தமிழரிடம் தாலி கட்டும் பழக்கம் இல்லை என்றும் தமிழறிஞர்களிடையே இருவகைக் கருத்துகள் இருக் கின்றன. இப்போது திருமணத்தில் தாலி கட்டுவது பற்றி உங்கள் கருத்தென்ன?

சங்க காலத்தில் தாலி கட்டாமல் திருமணம் நடந்த தற்கும், தாலி கட்டித் திருமணம் நடந்ததற்கும் சான்றுகள் இருக்கின்றன. சிறு பருவத்தில் ஆண் பிள்ளைகளுக்கு சிறுதாலி என்ற பெயரில் வீரத்தாலி கட்டும் பழக்கமும் இருந்திருக்கிறது.

அந்தக் காலத்தில் தாலி என்ன நோக்கத்திற்காக வந்தது என்பதை ஆராய்ந்து பார்த்து, அதே பழக் கத்தை இன்றும் வலியுறுத்துவதைவிட, இந்தக் காலத் தில் மணமகன் - மணமகளுக்குத் தாலி கட்டும் பழக்கம் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்ப்பதே, பண்பார்ந்த செயல்!

இன்று தாலி என்பது ஆணாதிக்கத்தின் - பெண்ண டிமைத்தனத்தின் சின்னம்! வளர்ச்சியடைந்த எல்லா இனங்களிலும் அவற்றின் மரபு வழிப்பட்ட பழக்க வழக்கங்களில் இன்றைக்கும் பொருந்தக்கூடிய முற் போக்குக் கூறுகளும் இருக்கும். இன்றைக்குப் பொருந் தாத பிற்போக்குக் கூறுகளும் இருக்கும். நாம் முற் போக்குக் கூறுகளை பின்பற்ற வேண்டும்; அவற்றை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். பிற்போக்குக் கூறுகளைக் கைவிட்டு விடவேண்டும்.

தமிழர்கள் தங்கள் திருமணங்களில் தாலி கட்டும் பழக்கத்தைக் கைவிட்டு விடுவதே சிறந்த சமத்துவப் பண்பாக அமையும்!

பீகாரில் மாணவர்கள் பொதுத் தேர்வெழுதும் போது, பெற்றோரும் உற்றாரும் மாணவர்கள் ‘காப்பி’அடிப்பதற்கான துண்டுத் தாள்களை சன்னல் வழியாகவும், மற்ற வழியாகவும் பெரும் எண்ணிக்கையில் சுவரில் ஏரியும் கொடுப்பதைப் படம்பிடித்து ஏடுகளில் போட்டார்கள். அதைக்கண்டு அம் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ’வெட்கப்படுகிறேன்’என்றார். ஆனால், பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், “நான் முதலமைச்சராக இருந்திருந்தால் - திருட்டுத் தனமாகப் பெற்றோர் துண்டுத்தாள்களை (பிட்டுகளை) கொடுக்க வேண்டி இருந்திருக்காது. பார்த்து எழுத புத்தகங்களையே வழங்கி இருப்போம்”என்றார். இது சரியான கருத்தா?

சரியா, தவறா என்று ஆராய்வதற்கு முன், தொடர் வண்டித் துறை உள்ளிட்ட நடுவண் அரசுத் துறை களின் வேலைவாய்ப்பிற்கானத் தேர்வுகளில் பீகார் அரசாங்கம் லாலு சொல்வது போல், காப்பியடிக்க அனுமதித்தும் முன்கூட்டியே வினாத்தாள்களை வெளி யிடச் செய்தும், பீகாரிகளை செயற்கையாக- ஏராளமான எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்து தான் தமிழகத்தில் ஏராளமாக நடுவணரசு வேலையில் சேர்ந் துள்ளார்கள் என்ற குட்டு லாலு பேச்சால் அம்பல மாகிவிட்டது என்பதைத் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தகுதியற்ற பீகாரிகள் தமிழ்நாட்டில் உள்ள வேலை களைப் பறித்துக் கொண்டு தமிழர்களை அவ்வேலை களுக்கு வராமல் தடுத்துள்ளார்கள் என்ற உண்மை யைப் புரிந்து கொண்டு அவர்களை வெளியேற்றுவது அறம் சார்ந்த போராட்டம் என்பதை உணர வேண்டும்.

லாலு சொன்னது போன்று, காப்பி அடிக்க ஊக்கு விக்கும் பழக்கத்தைத் தமிழ்நாடு பின்பற்றக் கூடாது. அதைச் செய்தால் வருங்காலத் தலைமுறையினரிடம் திறமையும் ஆற்றலும் வளராது. அறச்சிந்தனையும் தழைக்காது. பொறுக்கித்தனம்தான் வளரும்!

அணு உலையை எதிர்க்கிறவர்கள், நியூட்ரினோ ஆராய்ச்சியை எதிர்க்கிறவர்கள் எல்லாம், அறிவியல் வளர்ச்சியை எதிர்க்கிறார்கள் என்ற ஒரு கருத்து வைக்கப் படுகிறது. சூழலியலாளர்களோ, அறிவியல் ஆய்வுக்கு எல்லைகள் இருக்க வேண்டும், மனித குலத்திற்கெதிரான அறிவியல் கூடாது என்கின்றனர். இதில் எது சரி?

நம்மைப் போன்றவர்கள் சொல்வது ஒருபுறம் இருக் கட்டும். ஸ்டீஃபன் ஹாக்கிங் என்ற உலகின் தலை சிறந்த இயற்பியல் அறிவியல் வல்லுநரே இயற்கையின் இயைபைக் குலைக்கும் வகையில் மூலப்பொருள் தோற்றம் குறித்த ஆராய்ச்சிகள் கூடாது என்றும் அந்த நோக்கத்தில் ஸ்விஸ் நாட்டின் செர்ன் நகரில் சுரங்க நகரை உருவாக்கிச் செய்யும் ஆராய்ச்சிக் கூடத்தை மூட வேண்டும் என்றும் கருத்துக் கூறியுள்ளார்.

அந்த செர்ன் ஆய்வுக் கூடத்தில் விபரீதங்கள் அல்லது விபத்து ஏற்பட்டால் அதனால் புதிதாகப் பெரிய கருந்துளை உண்டாகி - அதற்குள் நிலக்கோளம் உள்வாங்கப்பட்டு இந்த பூமிப்பந்தே அழிந்துவிடும் ஆபத்து உள்ளது என்று கூறியுள்ளார்.

அறிவியல் வேண்டும்; அறிவியல் வழிபாடு கூடாது. ஆராய்ச்சி வேண்டும். அதனால் மனிதகுலம் அழிந்து விடக் கூடாது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். ஆராய்ச்சி எல்லைகளை அறிவியலாளர்கள் வகுத்துக் கொள்வதே பாதுகாப்பானது.

மிகை நுகர்வுவாதத்தின் இன்னொரு வெளிப் பாடுதான் பக்க விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத அறிவியல் ஆராய்ச்சி!

மாட்டுக்கறி சாப்பிடுவதை மராட்டிய அரசு தடை செய்துள்ளதே?

ஆடு உயிரில்லையா? கோழி உயிரில்லையா? பன்றி உயிரில்லையா? அவற்றின் கறியைச் சாப்பிடலாம், மாடு புனிதமானது - அதன் கறியைச் சாப்பிடக் கூடாது என்று மராட்டிய பா.ச.க. ஆட்சி சட்டம் செய்திருப்பது பார்ப்பனிய வர்ணாசிரமப் பாகுபாட்டின் இன்னொரு வெளிப்பாடுதான்!

மனிதர்களில் பார்ப்பனர்கள் புனிதர்கள், - பூதேவர் கள் என்றார்கள். மற்றவர்களை பார்ப்பனர்களுக்குக் கீழே வைத்தார்கள். சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்று அவர்களால் சொல்லப்பட்டவர்களைத் தீண்டினால் தீட்டு என்றார்கள். அதே அளவுகோலை விலங்குகளி டமும் பயன்படுத்தி, ஆடுகள், கோழிகள், பன்றிகள் போன்றவற்றைக் கொன்று தின்னலாம், மாட்டைக் கொன்று சாப்பிடக் கூடாது என்று சட்டமியற்றி உள்ளார்கள்.

பா.ச.க.வின் ஆன்மிகம் ஒழுக்கமற்றது, நேர்மை யற்றது, வஞ்சகமானது, பயன்படுத்தித் தூக்கியெறியும் உத்தி கொண்டது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. ஆட்டைக் கொல்லலாம்; கோழியைக் கொல்லலாம்; மாட்டைக் கொல்லக் கூடாது என்று பா.ச.க. கூறும் தகிடுதித்த “கொல்லாமை”கொள்கையின் யோக்கியதை இதுதான்!

திருவள்ளுவப் பெருந்தகை போன்றவர்கள், சமணர்கள், சைவ - வைணவப் பெரியோர்கள், வள்ள லார் போன்றவர்கள் வலியுறுத்திய உயிர் கொல்லா மைக் கோட்பாடு எறும்பிலிருந்து யானை வரை எல்லா உயிர்களையும் கொல்லக் கூடாது என்ற உயர்நெறி கொண்டதாகும். ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. போன்ற ஆரியச்சார்பு இந்துத்துவவாதிகள் விலங்குகளிடமும் வர்ணாசிரமப் பிரிவினையை உண்டாக்கி மாடுகளுக்கு மட்டும் புனிதம் கற்பிக்கும் போலிக் கொல்லாமைக் கொள்கையைக் கடைபிடிக்கின்றனர்.

ஒன்றையன்று சாப்பிட்டு உயிர் வாழும் வகையில்தான் இயற்கைப் படைப்பு இருக்கிறது. எனவே, ஆடு, மாடு, பன்றி, கோழி போன்றவற்றின் இறைச்சியைச் சாப்பிடத் தடை விதிக்கக் கூடாது என்பதே நமது நிலைபாடு! தங்கள் விருப்பத்தின் அடிப் படையில் புலால் மறுப்போரை நாம் எதிர்க்கவில்லை.

அண்மைக் காலமாகத் திராவிடர் கழகத்தினர் “திராவிடர் விழிப்புணர்ச்சிக் கூட்டம்”என்ற பெயரில் கூட்டம் போடுகின்றனர். அதற்கான விளம்பரத்தில், “ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழர்களாய் வாழ்வோம்”என்று முழக்கங்கள் பொறித்துள்ளார்கள். தமிழர் களாய் வாழ்வோம் என்று சொல்லும் திராவிடத்தாரை ஏன் எதிர்க்கிறீர்கள்?

திராவிடத்தால் எழுந்தோம் என்று சொல்பவர்கள் திராவிடராய் வாழ்வோம் என்று சொல்லியிருந்தால் அவர்கள் நம்பிக்கையின்படி அவர்கள் நேர்மையாகச் சொன்னதாக அமையும். நாம் திராவிடம் - திராவிடர் என்பவற்றை ஒருபோதும் ஏற்கவில்லை என்றாலும், அப்படிக் கூறிக் கொள்பவர்கள் தங்களின் தர்க்கத்திற்கு முரண்படாமல் “திராவிடராய் வாழ்வோம்” என்றல்லவா கூறியிருக்க வேண்டும் என்கிறோம்.

“திராவிடத்தால் எழுந்தவர்கள்” திராவிடராய் வாழாமல் - தமிழராய் வாழுங்கள் என்று கூறினால் தன்முரண்பாடு வருகிறதே. எனவே, அவர்களின் நேர்மையில் ஐயம் எழுகிறது. அவர்களுக்குத் திராவிடத்தின் மீதும் முழு நம்பிக்கை இல்லை; தமிழ்த் தேசியத்தின் மீதும் முழு நம்பிக்கை இல்லை என்பதைத் தான் “திராவிடத்தால் எழுந்தோம்; தமிழராய் வாழ்வோம்” என்ற அவர்களின் இரண்டுங்கெட்டான் முழக்கம் தெரிவிக்கிறது.

இது ஒருவகைப் பார்ப்பனியப் பண்பியல் ஆகும். பலித்தவரை பார்ப்பது, பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிவது என்பவைப் பார்ப்பனியப் பண்புகள். இதை வேண்டுமானால் திராவிடப் பார்ப்பனியம் என்று கூறலாம்.

நம்மைப் பொறுத்தவரை, சங்க காலத்திலிருந்து நாளதுவரை, இந்தியத் துணைக் கண்டத்தில் ஆரிய இனத்தையும் ஆரிய மொழியையும் ஆரியப் பார்ப்பனி யத்தையும் முன்னுக்குப் பின் முரணில்லாமல் எதிர்த்து வரும் செழுமையான மரபுத் தொடர்ச்சி தமிழ் இனத்தி லும் தமிழ் மொழியிலும் மட்டுமே உண்டு என்ற வரலாற்று உண்மையைச் சார்ந்து தமிழ்த் தேசியம் நிற்கிறது. ஆரிய எதிர்ப்பை மட்டுப்படுத்துவதுதான் திராவிடம்!

இதற்கான சான்று, பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்து தம் கழகத்தவர்க்கு நடுவண் அமைச்சர் பதவி பெற்ற கலைஞர் கருணாநிதியும் செயலலிதாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்த ஆசிரியர் வீரமணியும் ஆவர்.

Pin It