இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த வீழ்ச்சி தொடர்ந்துகொண்டு இருக்கிறது. கடந்த 9.7.2013 அன்று அமெரிக்க டாலர் நாணயத்துக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62 ரூபாய் 22 காசு என படு வீழ்ச்சி அடைந்தது. இது சற்றே சரியாகி ஏறத்தாழ 60 ரூபாயையொட்டியே நிலைத்திருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மட்டுமின்றி ஜப்பானின் யென், ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ, பிரிட்டனின் பௌண்ட் ஆகிய அனைத்து நாணயங்களுக்கும் நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ந்து வருகிறது. ஆசியாவிலியே மிக மதிப்பிழந்த நாணயமாக இந்திய ரூபாய் தாழ்ந்துவிட்டது.

இந்திய சுதந்தரத்தின் போது 1947 ல் அமெரிக்க நாணயமான டாலரும் இந்திய ரூபாயும் சம மதிப்பு வாய்ந்தவையாக இருந்தன. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என்று இருந்தது. அது தான் இன்று 60 மடங்கு தேய்ந்து வீழ்ந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஏறத்தாழ 33 விழுக்காடு சரிந்துள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு வணிகம் டாலர் நாணய மதிப்பிலேயே நடப்பதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடுக்கடுக்கான தொடர் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

உலகமயமாக்கல் – தாராளமயமாக்கல் 1991 ல் தீவிரப்பட்டதற்குப் பிறகு இந்தியப் பொருளியல் பெரிதும் இறக்குமதி சார்ந்ததாக மாறியது. ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய இரண்டுமே டாலர் மதிப்பிலேயே நிகழ்கின்றன. எனவே, இறக்குமதிப் பொருள்களை அதிக ரூபாய்கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கடந்த 2010 ல் வெளி நாட்டிலிருந்து ஒரு பொருளை ஒரு டாலர் கொடுத்து வாங்குவதாக இருந்தால் அதற்கு இந்திய நாணயத்தில் 48 ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதே பொருளை அதே போன்று ஒரு டாலருக்கு வாங்குவதாக இருந்தால் இன்று 60 ரூபாய் கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டும்.
 
இந்தியா பெரிதும் இறக்குமதி சார்ந்து இருப்பதால், இங்கு நடக்கும் உற்பத்தி வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் அடிப்படை பொருள்கள், இயந்திரங்கள், எரிபொருள்கள் ஆகியவற்றை சார்ந்திருப்பதால் இனி அவற்றின் உற்பத்திச் செலவு கூடி விலையேற்றம் ஏற்படும்.

உற்பத்தித் துறை சார்ந்த வளர்ச்சி இதனால் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கெனவே உற்பத்தித் துறை பெரும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது . இப்போது ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இந்தச் சரிவை அதிகப்படுத்தும். உற்பத்தித் துறை மந்தமாவதால் அத்துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ரூபாய் முதலீடு குறையும். அதுமட்டுமின்றி ஏற்கெனவே முதலீடு செய்துள்ள வெளிநாட்டு பெருமுதலாளிகள் தங்கள் மூலதனத்தைத் திரும்பப் பெற்றுவிடுவார்கள். இது நாணயச் சந்தையில் இந்திய ரூபாய் நாணய கேட்பை (டிமாண்ட்) வீழ்த்தும். அது மேலும் ரூபாய் நாணய மதிப்பை வீழ்த்தும். இந்த வீழ்ச்சியினால் முதலீட்டாளர்களின் லாப வீதம் உண்மை அளவில் மேலும் குறையும். இதனால் அவர்கள் ரூயாய் கணக்கில் முதலீடு செய்வதிலிருந்து இன்னும் பின் வாங்குவார்கள். அது மேலும் ரூபாய் மதிப்பை குறைக்கும்.

இவ்வாறு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி அடுத்தடுத்த பொருளியல் சரிவை ஏற்படுத்தி அது மேலும் ரூபாயின் மதிப்பை தாழ்த்தும். ஒரு நச்சுச் சுழலில் இந்தியப் பொருளியல் சிக்கியுள்ளது. இது அனைத்துப் பொருள்களின் விலையேற்றத்தை ஏற்படுத்துவதுடன் வேளாண்மை, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஆகியவற்றின் வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கும்.

ரூபாயின் மதிப்புச் சரிவு ஏன் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள பொதுவாக நாணயத்தின் பங்கு பணிபற்றியும் இந்தியாவின் வெளிநாட்டு வணிகம் நடக்கும் முறை குறித்து மேலோட்டமாகவாவது புரிந்துகொள்வது அவசியம்.

“பணம்” அல்லது “நாணயம்” என்பது மனிதகுல வரலாறில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்தான் தோன்றியது. குறிப்பாக மேற்குலக ஆதிக்கத்தில் உலகம் சிக்கிக் கொண்ட பிறகுதான் இது பெரும் சிக்களுக்கும் வழி வகுத்தது.

மனித குல வரலாற்றில் மிக நீண்ட காலத்துக்கு பண்டமாற்று முறை தான் புழக்கத்தில் இருந்தது. உள்நாட்டு வணிகத்தில் மட்டுமின்றி கடல் கடந்த வணிகத்திலும் பண்டமாற்று முறையே பல காலம் கோலோச்சியது.

சந்தையில் பண்டச் சுழற்சியை எளிதாக்க பணம் அல்லது நாணயம் ஒரு ஊடகமாக உருவானது. இவ்வாறு ஊடகமாகச் செயல்பட முக்கியமாக இரண்டு தன்மைகள் தேவைப்பட்டன. ஒன்று அது ஒரு அரசின் ஏற்பை அதாவது அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, அதுவே ஒரு வரம்புக்கு உட்பட்டு தற்காலிகமாக ஒரு பண்டமாகச் செயல்படும் தகுதிபெற்றிருக்க வேண்டும்.

தொடக்க காலத்தில் உலோக நாணயங்கள் இவ்வாறு செயல்பட்டன. இந் நாணயத்தில் பொதிந்துள்ள உலோகத்தின் மதிப்பும் இதற்கு ஈடாக சந்தையில் மாற்றிக்கொள்ளப்படும் உற்பத்திப் பொருளின் மதிப்பும் ஏறத்தாழ சம்மாக இருந்தன. ஒரு நாணயம் ஒரு குறிப்பிட்ட அரசின் ஆட்சிப் பரப்புக்குள்ளேயே செல்லத்தக்கதாக புழக்கத்தில் இருந்தன. ஏனெனில், ஒரு உலோகத்துண்டு சந்தையில் புழங்குவதற்கான நாணயம் என்ற மதிப்பு பெறுவதற்கு அரசின் முத்திரை தேவைப்பட்டது.

கடல் கடந்த வணிகத்தில்-அரசு கடந்த வணிகத்தில் ஒரு அரசின் முத்திரைப்பதித்த நாணயம் இன்னொரு நாட்டில் செல்லத்தக்கதாக இல்லை. அந் நிலையில் பொது நாணயமாக தங்கம் உருவானது. பிற்காலத்தில் காகிதப்பணம் வந்தபோது கூட அது தங்கத்தின் மதிப்பிலேயே அளக்கப்பட்டது. எனவே ஒரு நாட்டில் இருக்கும் தங்கக் கையிருப்பை அடிப்படையாக வைத்தே நாணயம் அச்சடிக்கப்பட்டது.

ஆனால், வல்லரசுகளின் ஆதிக்கமும் பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கமும் வளர்ந்த பிறகு இந்த நிலை மாறத்தொடங்கியது. இதன் காரணமாக முதல் உலகப் போருக்குப் (1913-17) பிறகு தங்கத்துடன் பிரிட்டனின் நாணயமான பௌண்ட்டும் அமெரிக்க நாணயமான டாலரும் நாடுகளுக்கிடையே நடக்கும் வணிகத்துக்கு பொது நாணயமாக மாறியது. இரண்டாவது உலகப் போருக்கு பிறகு பௌண்ட் வெளியேற்றப்பட்டு தங்கமும் அமெரிக்க டாலரும் உலக நாணயமாக உயர்த்தப்பட்டன.

வியட்நாம் போருக்குப் பிறகு 1971 ல் “இனி தனது வணிகத்தில் அமெரிக்க அரசு தங்க மதிப்பை கணக்கில் கொள்ளாது. அமெரிக்காவோடு வணிகம் செய்யும் நாடுகள் டாலர் மதிப்பை மட்டுமே பொது மதிப்பாக கொள்ள வேண்டும்” என்று அமெரிக்க அரசு அறிவித்தது. அமெரிக்க முதலாளிகளின் மூலதனம், தொழில் நுட்பம் வெளி வணிகம் அரசியல் மேலாதிக்கம் ஆகியவற்றில் உலகின் பெரும்பாலான நாடுகள் சிக்கியிருந்ததால் 1971 க்குப் பிறகு உலகப் பொது நாணயமாக அமெரிக்க டாலரே பெரிதும் ஆதிக்கம் பெற்றது.

உற்பத்தி மூலதனத்தை விட நிதி மூலதனமே மேலாதிக்கம் பெற்றதற்குப் பிறகு, குறிப்பாக 1991-ல் உலகமயப் பொருளியல் கோலோச்சத் தொடங்கிய பிறகு நாணய மதிப்பே சந்தையில் தீர்மானிக்கப்படும் தனித்த பண்ட மதிப்பாக மாறியது. பங்குச் சந்தையைப் போலவே நாணய மாற்றுச் சந்தையும் தீவிரம் பெற்றது.

உலகமயத்தோடு இந்தியப் பொருளியலும் இணைக்கப்பட்டுள்ளதால் இந்திய ரூபாயும் டாலர் மதிப்போடு பிணைக்கப்பட்டது.

முன்னர் குறிப்பிட்டது போல இந்தியப் பொருளியல் பெரிதும் இறக்குமதி சார்ந்த பொருளியல் ஆகும். இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் . இதனால் இந்தியா எப்போதுமே கடன்பட்ட நாடாகவே இருக்கும். ஆயினும் இது ஒரு கட்டுக்குள் இருந்த வரையில் பெரும் சிக்கலாக வடிவெடுக்கவில்லை. ஆனால், இப்போது மீளமுடியாத பிரச்சினையாக அது வளர்ந்துவிட்டது.

இந்தியாவின் வெளி வணிகப் பற்றாக்குறை அதாவது இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெருமளவுக்கு விரிவடைந்துவிட்டது. 2012-13 ல் இந்தியாவின் வெளி வர்த்தகப் பற்றாக்குறை 19, 650 கோடி டாலர் ஆகும். இது தவிர உலக வணிகத்தில் ஈடுபடுவதற்காக குறுகியக் காலக் கடன்களை இந்தியா வாங்குகிறது. வெளி நாடுகளுக்கு குறுகியக் கால செலாவனி அளித்து நாணய வணிகமும் செய்கிறது. இது நாணய ஏற்றுமதி இறக்குமதி போன்றது. இதிலும் பற்றாக்குறை உள்ளது. 2012-13 ல் இந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 8780 கோடி டாலர் ஆகும்.
 
வெளி வர்த்தக சம நிலையை பாதுகாக்க இந்திய அரசு இந்திய சேம வங்கியின் வழியாக அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை வாங்கி கையிருப்பாக வைத்திருக்கும். இதற்க்கு அயல் சலாவனி கையிருப்பு என்று பெயர்.

எந்த நாட்டு நாணயத்துக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் ஒரு அளவு கடந்து பாதிப்படையும் நிலை ஏற்படுமானால் அந்த நாட்டு நாணயத்தை வாங்கியோ விற்றோ இந்திய ரூபாயின் மதிப்புச் சம நிலையை அது பாதுகாக்கும். இந்த வாய்ப்பும் தற்போது பெரும் சிக்கலில் உள்ளது.

இது ஒரு அபாய அளவைத் தொட்டுவிட்டது என இந்திய சேம (ரிசர்வ்) வங்கியின் 27.06.2013 நாளிட்ட அறிக்கை எச்சரிக்கை செய்கிறது. வரும் 2014 மார்ச் வாக்கில் இந்தியா வாங்கியுள்ள வெளி நாட்டுக் கடனில் 17, 200 கோடி டாலர் தொகையை திரும்ப செலுத்தியே ஆக வேண்டும். நடப்புக் கணக்கு பற்றாக்குறையை ஈடு செய்ய இந்திய அரசுக்கு மேலும் 9000 கோடி தேவை. இதன் மொத்தத் தொகை 28, 200 கோடி டாலர் ஆகும்.

இதனை கையிருப்பில் உள்ள வெளி நாட்டு நாணயத்தை டாலராக மாற்றி கொடுத்து எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இந்திய அரசிடம் இருக்கிற மொத்த வெளிச் செலாவணிக் கையிறுப்பே 28, 600 கோடி டாலர்தான்.  அதாவது இந்தியா திவாலாகும் நிலையில் உள்ளது. இந்த ஓட்டாண்டி நிலைக்கு கொண்டுவந்ததுதான் பொருளியல் வல்லுனர் மன்மோகன் சிங் செய்திருக்கிற சாதனை.

இதற்கு முன்பு நடப்புக் கணக்கு பற்றாக்குறை வந்தபோதெல்லாம் வெளிநாடுகளிலிருந்து டாலர் கணக்கில் வந்த குறுகியகால அயல் முதலீடுகளைக் கொண்டு சமாளித்தார்கள். ஆனால், ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ந்துவருவதால் குறுகியக் கால முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதற்கு மாறாக ஏற்கனெவே இந்தியாவிற்குள் இருந்த குறுகிய கால முதலீடுகள் வெளியே பறந்து செல்கிறன. இவ்வாறு கடந்த ஆண்டில் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் குறுகியகால மூலதனம் வெளியேறிவிட்டது. அதனால் தான் பங்குச் சந்தை நிலை குலைந்து வருகிறது.

இதற்கு முன்னர் 2010 ல் ரூபாயின் மதிப்பு வீழ்ந்தபோது மன்மோகன் சிங் இந்திய வங்கிகளின் வட்டிவிகிதத்தை 1 % உயர்த்துவதாக அறிவித்தார். வெளிநாட்டிலிருந்து நிதி மூலதனத்தை, வட்டி மூலதனத்தை ஈர்ப்பதற்கான தற்காலிக வழியாக அது அவருக்கு வாய்த்தது. அந்த நேரத்தில் 2008 தொடங்கி மிகப்பெரும் சரிவிலிருந்த அமெரிக்கப் பொருளியலை மீட்பதற்காக அமெரிக்க அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த்து. அமெரிக்க வங்கிகள் 100 க்கு ஆண்டுக்கு கால் விழுக்காடு (0.25%) வட்டிக்கு பெருமுதலாளிகளுக்கு கடன் வழங்கும் என்பது அவற்றுள் ஒரு நடவடிக்கையாகும். அமெரிக்க வங்கியில் ஆண்டுக்கு கால் விழுக்காடு வட்டிக்கு கடன் பெற்று இந்தியாவில் ஆண்டுக்கு 11 விழுக்காடு வட்டி கிடைக்கும் மூலதனச் சந்தையில் உலக நிதி மூலதன முதலாளிகள் படையெடுத்து வந்தனர். இதன் மூலம் இந்தியாவின் டாலர் கையிருப்பு உயர்ந்தது.

இந்தியப் பெரு முதலாளிகள் பலரும் அமெரிக்காவில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி இந்த மூலதனத்தை இந்தியச் சந்தையில் கூடுதல் வட்டிக்கு விட்டனர். எந்த உற்பத்தியிலும் நேரடியாக ஈடுபடாத இந்த வட்டி மூலதனம் பல தீய விளைவுகளைத் தூண்டியது. இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்தியப் பெரு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் கையகப்படுத்துவதற்கு பங்குச் சந்தையில் இந்த வட்டி மூலதனம் பயன்பட்டது.

ஆயினும், ஓரளவுக்கு மேல் இந்த வட்டி மூலதனம் பங்குச் சந்தையில் இலாபகரமாக செயல்பட முடியவில்லை. எனவே, தங்கம், பெட்ரோலியம், மனை வணிகம் போன்றவற்றில் இந்த வட்டி மூலதனம் பாய்ந்து இவற்றின் விலையை அச்சமூட்டும் அளவுக்கு தாறுமாறாக உயர்த்தின. ஆனால், அமெரிக்க வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் இந்தியாவில் உள்ள குறுகிய கால மூலதனம் அமெரிக்க டாலரை நோக்கி திருப்பப்படுகிறது. எனவே, இந்திய அரசு தங்களது வட்டி விகிதங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு வங்கிகளை நிர்பந்திக்கப்படுகின்றது. இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்திய வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தை குறைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். இதனை ஏற்று சில அரசுத்துறை வங்கிகள் தங்கள் வட்டி விகித்த்தை கால் விழுக்காடு குறைத்துள்ளன. ஆனால் இந் நடவடிக்கை ரூபாய் மதிப்புச் சரிவை மிகச் சிறிது அளவே தடுத்து நிறுத்த வல்லது.

ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் இச் சிக்கலை சமாளிப்பதற்க்கு வழியும் இல்லை. ஏனெனில், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியைத்தான் இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால் இந் நாடுகளிலோ ஆழமான பொருளியல் மந்தம் நீடிப்பதால் ஐரோப்பிய சந்தைக்கு இந்திய உற்பத்திப் பொருள்கள் அல்லது இந்திய மூலதனம் செல்வதற்கு வாய்ப்புகள் அரிது. இதனால் வெளி வர்த்தகப் பற்றாக்குறை நீடிக்கும் நிலை தொடரும்.

தாராளமயப் பொருளியல் கொள்கையும், அமெரிக்க டாலரோடு கட்டுண்ட வெளி வணிகமும் தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும். இதிலிருந்து மீண்டாலே தவிர இந்த நச்சுச் சுழலிலிருந்து மீள்வதற்கு வாய்பில்லை.

இதிலிருந்து மீள்வதற்கு பெட்ரோல் டீசல் விலையை உயத்துவது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டுவது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் திட்டச் செலவையும் மானியத்தையும் வெட்டுவது என்ற வழியையே மன் மோகன் சிங் அரசு கடைபிடிக்கிறது.

காங்கிரசுக்கு மட்டுமின்றி பா.ச.க நாளைய பிரதமராக முன்னிறுத்தும் மோடிக்கும் மூன்றாவது அணி என்று பேசிக்கொள்ளும் கட்சிகளுக்கும் உள்ள கொள்கை வழி இது தான்.

ஏனெனில், அனைத்திந்திய சந்தை , இந்தியப் பெருமுதலாளிகள் சார்ந்த வளர்ச்சி, உலகமயப் பொருளியல் ஆகியவை பிரிக்கமுடியாதபடி ஒன்றோடு ஒன்று பிணைந்து விட்டவயாகும்.

மாநிலங்களை வஞ்சிக்காமல் மக்களைத் தாக்காமல் இந்தப் பாதையில் நடைபோடவே முடியாது. இந்தியப் பெருமுதலாளிகள் பன்னாட்டுப் பெரு முதலாளிகள் தேர்தல் கட்சிகள் ஆகியவை ஒன்று கலந்துவிட்ட இன்றைய சூழலில் இந்தியத் தேசியத்தோடு இணைந்துவிட்ட சிக்கலாகும் இது.
 
இறக்குமதியைச் சாராத உள் நாட்டுச் சந்தையை முதன்மையாக சார்ந்துள்ள வளர்ச்சிப் பாதைதான் இதற்கு மாற்று ஆகும். அனைத்திந்திய சந்தை மற்றும் உலகமய முதலாளிகளாகிவிட்ட இந்திய பெருமுதலாளிகளின் வளர்ச்சியோடு இணைந்துவிட்ட இந்தியப் தேசியம் ஆகியவற்றில் இந்த மாற்றுப் பாதைக்கு வழியே கிடையாது.

இறக்குமதி சாராத தற்சார்பான சந்தை என்பது தேசிய இனச் சந்தையாகும். அதுதான் பணப் பொருளியலுக்கு மாற்றான பொருளியலாகவும் அமையும்.

நாடுகளுக்கிடையில் நடக்கிற வணிகம் குறைவாகவும், அந்த வணிகத்திற்கு பன்னாட்டு பண ஊடகமாக பழையபடி தங்கம் மீட்டெடுக்கப்படுவதும் தான் மாற்று வழியாகும்.

மக்களைப் பொருத்தவரையில் உள்ளூர் சந்தையை பெரிதும் சார்ந்திருக்கும் பண்ட மாற்று வணிகமும் பணத்தின் பயன்பாடு பெருமளவு குறைவதும் தான் பாதுகாப்பானது.

Pin It