தமிழ்நாட்டில் 3600அரசுத் தொடக்கப் பள்ளிகளில் வரும் சூன் மாதம் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகளில் கணக்கு, சூழ்நிலையியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் இது வரை தமிழ்மொழியில் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல் முதல் கட்டமாக வரும் கல்வி ஆண்டில், 3600 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மேற்கண்ட பாடங்கள் ஆங்கில மொழியில் நடத்தப்படும்.

ஏற்கெனவே ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் நடத்தப்படுகின்றது.

அரசு உயர்நிலைப்பள்ளி,அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகள் ஏற்கெனவே செயல்படுகின்றன.

குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பு வரையாவது அரசுப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இருக்காதா என்ற பரிதவிப்பு பறிபோனது.அதன் பிறகு ஐந்தாம் வகுப்பு வரையாவது தமிழ் பயிற்று மொழியாகத் தொடராதா என்ற ஏக்கமும் பொய்த்துப் போனது!

தமிழ்நாட்டில் தன்நிதியில் நடைபெறும் தனியார் பள்ளிகளில் மழலையர் நிலை,தொடக்க நிலை,உயர்நிலை,மேல்நிலை என அனைத்து நிலைகளிலும் ஆங்கில வகுப்புகள்தான் நடக்கின்றன.அரசுப்பள்ளிகளில்தான் தமிழ்வழி வகுப்புகள் இருக்கின்றன.அவற்றையும் ஆங்கில வழியாக மாற்றினால் தமிழ்மொழிக்கு வாழ்வேது?

பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க மறுக்கிறார்கள்; அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழியில் நடக்கும் தனியார் பள்ளிகளுக்குப் போய்விடுகிறார்கள்.மாணவர் எண்ணிக்கை இல்லாததால் பள்ளிக்கூடங்களை மூடும் நிலை ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க, அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகளைத் தொடங்குகிறோம் என்று அரசு கூறுகிறது.

ஆங்கில வழிப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் என்பது உண்மையே! இந்த அவலத்தைப் போக்க அரசு என்ன செய்திருக்கவேண்டும்? தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்து விதிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும்.கேரளத்தில் மலையாளத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரும் விதியை இயற்றியிருக்கிறார்கள்.

சமச்சீர்க்கல்வித் திட்டம் குறித்த முனைவர் முத்துக்குமரன் குழு பரிந்துரைகளை 60 விழுக்காடு செயல்படுத்தியிருந்தால் கூட, தமிழக அரசுப் பள்ளிகள் குறிப்பாகத் தமிழ்வழிப் பள்ளிகள் பெற்றோரின் கவனத்தை ஈர்த்திருக்கும்.சமச்சீர்க் கல்வியைத் தயங்கித் தயங்கி செயல்படுத்திய தி.மு.க.அரசு,தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் பயிற்றுமொழி தமிழாக இருக்க வேண்டும் என்று முத்துக்குமரன் குழு பரிந்துரைத்ததை செயல்படுத்தவில்லை.மாணவர்-ஆசிரியர் விகிதம்,உள் கட்டமைப்பு வசதிகள்,ஆங்கில மொழிப்பாடத்திற்கு ஆங்கில இலக்கியம் படித்தவரை மட்டுமே ஆசிரியராக அமர்த்த வேண்டும் என்பன போன்ற சிறந்த பரிந்துரைகளைத் தி.மு.க. ஆட்சி புறந்தள்ளியது.

தி.மு.க.ஆட்சி சிறிதளவு செயல்படுத்திய சமச்சீர்க் கல்வியைக் கூட ஒட்டுமொத்தமாகத் தூக்கி வீசியது அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. உச்ச நீதிமன்றம் வரை போய் வழக்கு நடத்தி சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கூவத்தில் வீசப் போராடித் தோற்றார் செயலலிதா.

அரசுத் தொடக்கப் பள்ளிகளில் கழிவறை வசதி கிடையாது; கழிவறை கட்டப்பட்டிருந்தால் தண்ணீர் கிடையாதுவிளையாட்டு ஆசிரியர் கிடையாது;பாட்டு ஆசிரியர் கிடையாது. இவையெல்லாம் தனியார் நடத்தும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இருக்கின்றன.

முப்பது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதம் தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பெருங்கூட்டத்தை ஒரு வகுப்பில் உட்கார வைத்துக் கொண்டு ஒரே ஆசிரியரை சமாளிக்கும்படி விட்டுவிடுகிறது தமிழக அரசு. இவையெல்லாம்தான் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளை நாடுவதற்கான காரணங்கள். வெறும் ஆங்கில மோகம் மட்டுமன்று.மொழிப்பாடமாக ஆங்கிலத்தை சிறப்பாகக் கற்பிக்கும் ஏற்பாடும் இருந்தால் பெற்றோர்கள் தமிழக அரசின் தமிழ் வழிப்பள்ளிகளில் தங்களின் பிள்ளகளைச் சேர்ப்பார்கள்.கேரளாவில் விதி உண்டாக்கியிருப்பதுபோல் மேல்நிலைப்பள்ளி வரையில் தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேர்வில் அதற்காகத் தனி மதிப்பெண் கொடுப்பது போன்ற ஊக்குவிப்புகளைச் செய்தால் பெற்றோர்கள் தமிழக அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை விரும்பிச் சேர்ப்பார்கள்.

இவற்றையெல்லாம் செய்யாமல் அரசுப் பொது மருத்துவமனைகள் எல்லா நிலையிலும் ஏனோ தானோ என்று நடத்தப்பட்டு சீரழிந்து கிடப்பதுபோல் தொடக்கப்பள்ளிகளையும் சீரழிய விட்டுள்ளது தமிழக அரசு. ஏழையாய் இருந்தாலும் கடன் வாங்கி, உடைமைகளை விற்று உயிர்காக்கத் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். அதே போன்ற துன்பச் சூழலில், கையறு நிலையில் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி வசூல் கூடங்களாக உள்ள தனியார் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்.

மேற்கண்ட வசதிகளை அரசுப் பள்ளிகளில் செய்வதென்றால் அதற்கு நிதி வசதி இல்லை; பெற்றோர்களிடமும் கட்டணம் வசூலிக்க முடியாது; என்ன செய்ய முடியும் என்று தமிழக அரசு கேட்கலாம்.

நடுவண் அரசிடம் போராடிக் கூடுதல் நிதி பெற வேண்டும். அதற்கான அறப்போராட்டத்தை ஆளுங்கட்சி முன்னெடுத்து மக்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும். வாக்கு வாங்குவதற்கான கையூட்டு போல் கொடுக்கப்படும் பல இலவசங்களைத் தவிர்த்து அத்தொகையை இலவசக் கல்வி மேம்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்.

1998 ஆம் ஆண்டு தமிழ்ச் சான்றோர் பேரவை முனைவர் தமிழண்ணல் தலைமையில் நடத்திய 102சான்றோர் உண்ணாப்போராட்டத்தின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தி.மு.க. ஆட்சி ஓர் ஆணைபிறப்பித்தது. அதன் படி ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாய மொழிப்பாடமாகவும் கட்டாயப் பயிற்று மொழியாகவும் இருக்கும். இவ்வாணையை எதிர்த்து மெட்ரிக் பள்ளி முதலாளிகள் நடத்திய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அந்த ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தது. 1999 இல் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு மேல் முறையீடு செய்தது. அவ்வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமல் உச்ச நீதிமன்றத்தின் அலமாரியில் தூங்கிக் கொண்டுள்ளது.

அவ்வழக்கை விசாரணைக்குக் கொண்டு வர தி.மு.க. அரசும் முயலவில்லை, அ.இ.அதி.மு.க. அரசும் முயலவில்லை.ஐந்தாம் வகுப்பு வரைத் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கிய அந்த ஆணையை அப்போது தமிழ்நாட்டில் எதிர்த்த ஒரே அரசியல் தலைவர் செயலலிதா மட்டுமே!தமிழ்மொழி மீது செயலலிதாவிற்கு இருந்த பழைய காழ்ப்புணர்ச்சியெல்லாம் இப்போது மாறியிருந்தால் நல்லது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வழக்கு நடத்த இப்போது உரிமை கோரியுள்ளார் அவர். அதே போல் தமிழ் வழிக்கல்விக்கும் அவர் முன் முயற்சி எடுக்க வேண்டும்.

3600 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகளைப் புகுத்துவதைக் கைவிட்டு, அப்பள்ளிகளை நாம் மேலே சுட்டிக் காட்டிய தரத்திற்கு மேம்படுத்தித் தமிழ் வழிப் பள்ளிகளாகவே தமிழக அரசு நடத்த வேண்டும்.

மக்களும் தமிழ் வழிக் கல்வியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கான மக்கள் எழுச்சி உருவாக வேண்டும். ஆங்கிலத்தைத் தரமான முறையில் மொழிப்பாடமாகக் கற்பிக்க, தமிழ் மொழி-தமிழின ஆர்வ அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் அரசை வலியுறுத்துகின்றன என்ற செய்தி மக்களுக்குத் தெரிய வேண்டும்.

தனது தாய்மொழியை இழந்துவிட்ட எந்த இன மக்களும் தலை நிமிர முடியாது, இரண்டாம் தரக் குடிகளாகவே இருப்பார்கள் என்ற உண்மையைத் தமிழ் மக்கள் உணர வேண்டும்,

 இன்றும் சமூக மேலாதிக்கம் செய்யும் வகுப்பார்க்கு உற்ற கருவியாக ஆங்கில ஆதிக்கமே உள்ளது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இன்றுள்ள புதிய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீது வெளி இனத்தார் ஆதிக்கம் செய்வதற்கும், ஆங்கில ஆதிக்கம் துணைபுரியும் என்பதையும் உணர வேண்டும்.

இருக்கின்ற தமிழ் வழிக் கல்வியைத் தக்க வைக்கப் போராடுவோம்! எல்லாக் கல்வியும் தமிழ் வழியில் கோருவோம்! தமிழ் நாட்டின் முழு முதல் ஆட்சி மொழியாகத் தமிழ் மட்டுமே செயல்படப் போராடுவோம்.

Pin It