காலஞ்சென்ற மூத்த இதழாளர் சின்னக்குத்தூசி அவர்களின் 78வது பிறந்த நாளையொட்டி அவர் பெயரில் நிறுவப்பட்டுள்ள விருதுகள் வழங்கும் விழா 15.06.2012 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற இருந்தது. கடைசி நேரத்தில் அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இது சட்டப் புறம்பான செயலாகும்.

முன்கூட்டியே முறைப்படி பணம்கட்டி ரசீதும் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சி நாளன்று அனுமதி மறுத்து நூலக ஆணைக்குழு அதிகாரிகள் கடிதம் கொடுத்துள்ளார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அன்றே உயர்நீதி மன்றத்தை அணுகி, திட்டமிட்டபடி கூட்டம் நடத்த நீதிமன்ற ஆணை பெற்றுள்ளார்கள். நீதிமன்ற ஆணை கிடைத்த பிறகும் நூலக ஆணைக்குழு அனுமதி தர மறுத்து வேறோரு கூட்டம் அரசு சார்பில் நடத்துவது போல் ஒரு போலி ஏற்பாடு செய்துள்ளார்கள். உயர்நீதிமன்ற ஆணை நகலை கொடுக்கச் சென்ற போது அரங்கம் மற்றும் நூலக ஆணைக்குழு அலுவலகத்தைப் பூட்டிவிட்டு அதிகாரிகள் வெளியேறி விட்டார்கள்.

சின்னக்குத்தூசி விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்தவர்கள் நூலக வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் கூட்டத்தை நடத்தி விருதுகளை வழங்கியுள்ளார்கள். அக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, நக்கீரன் ஆசிரியர் கோபால், பேராசிரியர் சரஸ்வதி, திருச்சி செல்வேந்திரன் ஆகியேர் பேசியுள்ளனர்.

மூத்த இதழாளர் சின்னக்குத்தூசி மிகவும் பிரபலமான அரசியல் கட்டுரையாளர் ஆவார். பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த இளம் இதழாளர்களுக்கு விவரங்கள் சொல்லிக் கொடுத்து அவர்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். அவர் தி.மு.க. சார்பாளர். எனவே அ.இ.அ.தி.மு.க. பற்றியும் அதன் தலைவர் செயலலிதா பற்றியும் அரசியல் விமர்சனங்கள் பல செய்தவர். இதன் காரணமாக அ.இ.அ.தி.மு.க. அரசு, எழுத்தாளர் சின்னக்குத்தூசி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இவ்விழாவை தடுத்து நிறுத்தி சீர்குலைத்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தை அவமதித்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது இது முதல் தடவையன்று. ஏற்கெனவே பல நிகழ்வுகளில் இவ்வாறு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்துள்ளது.

எடுத்துக்காட்டாக, கூடங்குளத்தில் இன்று வரை 144 தடை ஆணையை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நீட்டித்து வருகிறது. மனிதப்பேரழிவை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுவுலைகளை மூடக் கோரி சனநாயக வழியில் பரப்புரை நடத்தியதற்காகத் தோழர்கள் முகிலன், வன்னியரசு, சதிசு ஆகியோர் மீது பொய் வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது அ.தி.மு.க. ஆட்சி. அவ்வழக்கில் அவர்களுக்குப் பிணை கிடைத்த போது சிறைக்குள் இருந்த அவர்கள் மீது அடுத்தடுத்து புதிய வழக்குகளைப் போட்டு பிணையில் வரமுடியாத நிலையை உருவாக்கியது.

சென்னிமலையில் வேளாண்மைக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்காததைக் கண்டித்து அமைச்சர் ஒருவருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தியதற்காக தோழர் கி.வே.பொன்னையன் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குகளை மீண்டும் மீண்டும் போட்டு பிணையில் வரமுடியாதபடி சிறையில் அடைத்து வைத்தனர். கூடங்குளம் அணுவுலையை அமைதிவழியில் எதிர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது பல நூறு வழக்குகள் பதிவு செய்யபட்டன.

சனநாயக முறைப்படி வெளிப்படுத்தப்படும் கருத்துகளையும், சனநாயகப் போராட்டங்களையும் சகித்துக் கொள்ளாத செயலலிதா ஆட்சி, தொடந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மாற்றுக் கருத்துகளை அனுமதிப்பதும் மக்களுக்காகப் போராடுவதை அனுமதிப்பதும் சனநாயகத்தின் உயிர்க்கூறுகளாகும்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் எதேச்சாதிகாரத்தையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிகிறது. சமுகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சனநாயக வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

Pin It