நாம் தமிழர் இயக்கத்தின் தொடக்கப் பொதுக்கூட்டம் மதுரையில் 18.07.09 அன்று நடந்த பிறகு, அம் மாநாட்டில் அருள் தந்தை ஜெகத் கஸ்பர் பேசிய பேச்சின் சாரம், ’தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்திய ஏகாதிபத்தியத்திடம் சரணடையச் செய்வதாக உள்ளது’ என்று ஆகஸ்ட் மாத தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் எழுதியிருந்தேன். ‘இயக்குனர் சீமான் இந்தச் சிக்கலில் தனது அரசியல் போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றும் அக்கட்டுரையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அக்கட்டுரை பரவலான வரவேற்பைப் பெற்றாலும், இயக்குனர் சீமானின் ஆதரவாளர்கள் பலர் நம்மைத் தொடர்புகொண்டு ‘அக் கட்டுரையால் தங்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும், அக் கட்டுரை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ எனவும் கூறி வருந்தினர். இன்னும் சிலர், ‘ஒரு இயக்கம் தொடங்கப்படும் போதே இப்படி அவசரப்பட்டு விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?’ என ஆதங்கப்பட்டனர்.

இயக்குனர் சீமான் தமது இயக்க ஆலோசனைக் கூட்டங்களில் ’தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர்தான் என்னை வேண்டுமென்றே குறை கூறி வருகின்றனர்’ என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டி வருகிறார்.

அந்தக் கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கம், இயக்குனர் சீமானைக் குறை கூறுவதோ, நாம் தமிழர் இயக்கத்தின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதோ அன்று என்றும் அருள் தந்தை ஜெகத் கஸ்பரின் இந்திய அரசு சார்ந்த அரசியல் சதியை இயக்குனர் சீமான் உணர்ந்தாரா இல்லையா என்ற கேள்வி எழுப்புவதே என்றும் நம்மிடம் பேசிய உணர்வாளர்களுக்கு விளக்கம் அளித்தோம்.

பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது என்பது போல, ஜெகத் கஸ்பரின் இந்திய சதிகார அரசியல் முகம் இப்போது அம்பலப்பட்டு விட்டது. ஜெகத் கஸ்பர் குமுதம் இணையதளத்திற்குக் கடந்த மாதம் அளித்துள்ள நேர்காணலில் உதிர்த்த முத்துகளில் சில:

· விடுதலைப் புலிகளும் தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்களும் தவறே செய்யாதவர்கள் என்று நான் நினைக்கவில்லை.

· கடைசிக் கட்டப் பேரிழப்புகளைத் தடுக்கும் விதமான போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன் வந்தது. ஆனால், விடுதலைப் புலிகள்தான் அதை நிராகரித்தனர். அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உள்ள வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிகாட்டுதலே ஆகும்.

· இவர்களுக்குப் புவி அரசியல் பற்றிய அறிவு இல்லை; ஆளுமை இல்லை; ஆண்மை இல்லை. ஆனால், எனக்கு இவை அனைத்தும் உள்ளன.

· சீமான் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆக வேண்டும் என்பதற்கான களமாக நாம் தமிழர் இயக்கத்தை, ஈழ அரசியலைப் பயன்படுத்துகிறார். இதற்குப் பதிலாக அவர் திமுக அல்லது அதிமுக வில் சேரலாம்.

· நாம் தமிழர் என்ற இயக்கம் துவக்கப்பட்டதில் என் பங்களிப்பு அதிகம்.

· நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரே நான் வைத்ததுதான்.

· தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கங்களின் தலைவர்கள் இந்தப் பிழைப்பு பிழைப்பதை விட விபசாரம் செய்யலாம்.

- இன்னும் நிறைய பேசியுள்ளார்.

ஆனால், இவற்றில் எதற்கும் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே சில இயக்கங்களின், தலைவர்களின் மீதான அரசியல் மற்றும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகள். இவற்றிற்கு அவரவரே பதில்  கூறுவது பொருத்தம்.

மேலும், கஸ்பருக்கான பதில்களும் வரத் தொடங்கியுள்ளன. சிபிஐ கட்சியின் தமிழக துணைப் பொதுச் செயலர் தோழர் சி.மகேந்திரன் குமுதம் இணையத்தில் இது தொடர்பான பதிலடிகளைக் கொடுத்துள்ளார். 

கஸ்பர் பேசியவற்றிலேயே மிக முக்கியமான சேதியாக நான் கருதுவது இதைத் தான்:

· உலகப் புவி அரசியல் சூழலைப் புலிகள் கருத்தில் கொள்ளவில்லை. 

· பிராந்திய புவி அரசியலையும் அவர்கள் அவதானிக்கவில்லை.

· இந்தியா ஈழத்திற்கு எதிராகப் போவதன் காரணம் மேற்கண்ட இரு காரணிகளோடும் தொடர்புடையது.

இதே கருத்தைத்தான் கஸ்பர் போர் முடிந்த காலத்திலிருந்து தொடர்ந்து கூறி வருகிறார். மதுரை நாம் தமிழர் இயக்கத் துவக்க விழாவிலும் இதே கருத்துகளைத்தான் கூறினார். ஆனால், குமுதம் இணையத்தில் புதிதாக ஒரு சேதியைச் சேர்த்துள்ளார்.

· சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது, இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழித்ததன் வழி, அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா இழந்துவிட்டது என்பதே அச் சேதி.

இந்தக் கருத்தின் பயங்கர முகத்தை விளக்கமாகப் பார்ப்போம்.

தெற்காசியாவின் பேட்டை தாதாவாக இந்தியா நீடிக்க விரும்புகிறது என்பது பாதி உண்மை மட்டுமே. இந்தியா என்றால் இந்தியா அல்ல. மாறாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் உள்ளிட்ட காலனியச் சுகங்கண்ட நாடுகளின் எடுபிடியாக இந்தியா இருக்கிறது.

இந்நாடுகள் தெற்காசியாவில் ஆட்டம் போடவும் சுரண்டிக் கொழுக்கவும் வசதியான அடிமை தேவை. அந்த அடிமையே இந்தியா. இந்தியா என்பது ஒரு தேசமே அல்ல என்பதாலும், இந்தியா என்பதே பல தேசிய இனங்களின் சிறைக் கூடம் என்பதாலும், காலனி ஆதிக்க நாடுகளின் வேலைத் திட்டத்திற்கு இந்தியா மிக வசதியாக ஒத்துழைக்கிறது.

ஆகவே, ஈழப் போரில் சிங்களனுக்கு இந்தியா உதவியது என்றால், அது இந்தியா மட்டும் அல்ல; அமெரிக்கா தலைமையிலான சுரண்டல் நாடுகளும்தான் உதவின என்றே புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாடுகளுக்கு இருக்கும் எதிர் சக்தி, சீனா. இந்தியாவைக் கொண்டு சீனாவை எதிர்ப்பதும், தொடர்ந்து தொல்லைக் குள்ளாக்குவதும் அமெரிக்கத் தலைமை நாடுகளின் புவி அரசியல் கோட்பாடு.

இதே காரணங்களின் மறுபக்கம் சீனாவுக்கும் இருக்கிறது. அதாவது அமெரிக்கத் தலைமை நாடுகளை தெற்காசியாவில் ஒடுக்க, இந்தியாவைத் தொல்லைக்குள்ளாக்க வேண்டியது சீனாவுக்கு அவசியம். ஆனால், இந்தியாவின் ஈழ எதிர்ப்பு நிலைக்கு இவை மட்டுமா காரணங்கள்?

இந்தியாவிற்கு இயல்பாகவே உள்ள ’தமிழின விரோத’ கொள்கைதான் அதி முக்கியமான அடிப்படையான காரணம். இக்கொள்கை இல்லை யென்றால்....

· புலிகள் நீட்டிய நட்புக் கையைப் பற்றிக் கொண்டு இந்தியா சிங்களனுக்கு எதிரான நிலையை எடுத்து, அதன் வழி சீனாவை இந்தியப் பெருங்கடலுக்குள் ஆப்பு அடித்தது போல் நிறுத்தியிருக்க முடியும்.

· இந்தியா இந்த நிலைபாட்டை எடுத்திருந்தால், அமெரிக்கத் தலைமை நாடுகள் எந்தச் சங்கடமும் இன்றி இந்தியாவை ஆதரித்திருக்கும். ஏனெனில் அவற்றின் எதிரி சீனாவே தவிர, புலிகள் அல்ல; தமிழீழ மக்கள் அல்ல!

ஆனால், இந்தியா தனது புவி அரசியல் நலனையும் இன விரோதக் கொள்கையையும் தந்திரமாக ஒருங்கிணைத்தது!

1. சீனாவையும் எதிர்ப்பது

2. அமெரிக்கத் தலைமைக்கும் கட்டுப்படுவது

3. தமிழீழத்தையும் அழிப்பது

ஆகிய மூன்று நலன்களையும் ‘சிங்கள ஆதரவு’ என்ற ஒரே காய் நகர்த்தலில் அடைந்தது இந்தியா! 

நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியா தமிழீழத்தை அழிக்கத் துடிப்பதன் காரணம்...புவி அரசியல் மட்டும் அல்ல. அதன் தமிழின விரோத கொள்கைதான் அம்முடிவிற்கான அடிப்படை!

இப்போது கஸ்பர் மொழியும் ’அரசியலை’ப் பார்போம்.

· சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது, இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத் தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழித்ததன் வழி, அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா இழந்துவிட்டது, என்கிறார் கஸ்பர்.

இந்தக் கூற்றை கஸ்பர் வெளிப்படையாகச் சொன்னதற்காக அவருக்கு நன்றிகள் உரித்தாகுக! இந்தியாவின் கொலைவெறி பிடித்த அறிவு ஜீவிக் கூட்டத்தில் தானும் ஒருவர் தான் என்பதை மறைமுகமாக ஒப்புகொண்டிருக்கிறார் கஸ்பர். 

இந்தியப் பெருங்கடலில் சீனா கால், மூக்கு, கை, உடம்பு என அனைத்தையும் நுழைத்துவிட்டது. அண்மையில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள், ‘சிங்களக் கப்பற் படையுடன் சீன ராணுவத்தினரையும் பார்த்ததாக’ ஊடகங்களில் தெரிவித்தனர்.

புலிகளின் கடற்படை செயல்பாட்டில் இருந்தவரை சீன ராμஷீம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக செய்தி உண்டா...? இல்லை!

சீன ராμஷீத்தின் எந்தச் செயல்பாட்டையும் புலிகள் இந்தியப் பெருங்கடல் பரப்பில் கட்டுப்படுத்தியே வைத்திருந்தனர். இன்று நிலைமை மாறி விட்டது. புலிகளை ஒடுக்கியதன் வழி, இந்தியா தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டுவிட்டது.

இதுமட்டுமில்லாமல், அருணாசலப் பிரதேசத்தைக் கிட்டத்தட்ட சீனா புதிய வேகத்துடன் வளைக்கத் தொடங்கியுள்ளது. ’எங்கள் சீனத்தின் அங்கமான அருணாசலப் பிரதேசத்திற்குள் இந்தியத் தலைவர்கள் விருப்பம் போல வந்து போகிறார்கள். இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது’ - என்றது சீனா அண்மையில். இந்த எச்சரிக்கை யாருக்குத் தெரியுமா? இந்தியப் பிரதமர் திருவாளர் மன்மோகன்சிங் அருணாசலப் பிரதேசம் சென்றபோது விடப்பட்ட எச்சரிக்கை இது!

சீன ராஜதந்திரி ஒருவர் சமீபத்தில் எழுதிய கட்டுரையில், ’இந்தியாவில் காக்ஷ்மீர், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களையும் எளிதில் தனித் தனி நாடுகளாக்கிவிட முடியும். சீனா இதைச் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஆக, இந்தியாவின் தலை, வால், உடம்பு கை, கால் அனைத்தும் கழன்று போகும் அபாயத்திலிருக்கிறது. கழற்றிவிடும் வேலையில் சீனா ஏற்கெனவே இறங்கிவிட்டது. தமிழீழத்தை ஒழிப்பதற்காக சிங்களனுக்கு உதவிய இந்தியா, அதே சிங்களனுடன் சேர்ந்துகொண்டு தன்னை உடைக்கத் தொடங்கியுள்ள சீனாவை எதிர்கொள்ள இயலாமல் தள்ளாடுகிறது.

இதுதான் இன்றைய இந்தியாவின் புவி அரசியல் நிலை!

ஆகவே, இந்தியக் கொலைகார அறிவு ஜீவிகள் இந்த நிலையைச்  சமாளிக்க அல்லது ஓரளவுக்காவது குறைத்துக் கொள்ள, கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் கஸ்பர் கையில் தவழ்கிறது. இந்தியாவின் கட்டுப் பாட்டிலான தமிழீழம்! என்பதுதான் அந்த ஆயுதம்.

· இந்தியப் பெருங்கடலில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும்.

· ஒரே நேரத்தில் சீனாவையும் சிங்களனையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட படை தமிழீழத்தில் இருக்க வேண்டும்.

· அதே நேரத்தில் தமிழீழ தேசிய இனத்திற்கு முழுமையான தன்னாட்சி உரிமையும் கிடைத்து விடக் கூடாது 

இந்த மூன்று அடிப்படைத் தேவைகளை முன் வைத்து இந்தியா இப்போது காய் நகர்த்துகிறது. ’தமிழீழம் எவருக்கும் அடிமைப்பட்டுக் கிடக்காது’ என்ற தலைவர் பிரபாகரனின் கொள்கைகளும் இலட்சிய வெறியுமே இந்தியத் தந்திரத் தலைமைக்கு  பல்லாண்டுகளாக எரிச்சலூட்டி வந்தன.

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் மேலே கண்டவற்றிற்கான கூறுகள் இருந்ததையும், இக் காரணங்களால்தான் தலைவர் பிரபாகரன் அவ்வொப்பந்தத்தை நிராகரித்தார் என்பதையும் நாம் நினைவுபடுத்திப் பார்த்தால்...இந்தியத் தந்திரம் எளிதில் விளங்கும்.

இப்போது, புலிகள் படை செயல்பாட்டில் இல்லாத நிலையில், மேற்கண்ட மூன்று அம்சத் தேவைகளை நிறைவேற்றுவது இந்தியாவுக்கு ஓரளவு எளிது. இதைச் சாதிப்பதற்காக அவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ள பரப்புரையே, கஸ்பர் போன்றோர் தொடர்ந்து பேசிவரும், ’புலிகள் இயக்கம் இனி ஆயுதப் போராட்டம் நடத்தக் கூடாது’ ‘இந்தியாவை எதிர்க்கக் கூடாது’ என்பதாகும். இதன் பொருள், விடுதலைப் புலிகள் இந்தியாவிடம் சரணடைந்து தமிழீழ மக்களின் தன்னாட்சியைக் கைவிட்டு, இந்தியாவின் எடுபிடிகளாக - அடியாட்களாக மாற வேண்டும் என்பதே ஆகும்.

விடுதலைப் புலிகளும் புலம் பெயர் தமிழர்களும் ’தமிழீழத் தாயகம் தமிழ் மக்களின் தாகம்’ என்ற முழக்கத்தைத் தூக்கிக் குப்பையில் வீசத் தயாராக வேண்டும். இந்தியாவின் கூலிப்  படையாகச் செயல்பட்ட பல ஆயுத ஒட்டுக் குழுக்கள் இருந்த காலத்தை நினைவு கூர்ந்து பாருங்கள்.

புலிகள் இயக்கம் இந்தியாவின் இப்போதைய இந்த ‘எதிர்பார்ப்பை’ நிறைவேற்றா விட்டால்... மீண்டும் அதே போன்ற ஒட்டுக் குழுக்களை இந்தியாவே உருவாக்கி தமிழீழத்தில் உலவ விடும் அபாயம் நெருங்கி விட்டது. இதைத்தான் கஸ்பர் ‘புவி அரசியல்’ என்ற தங்க முலாம் பூசிய வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்.

· சீனாவுக்கும் இந்தியாவுக்குமான போர் அல்லது போர்ச் சூழல் இன்னும் 20 ஆண்டுகளில் உருவாகும். அப்போது, இந்தியப் பெருங்கடலில் தனக்கு ஆதரவான சக்தியாக இருக்கத்தக்க விடுதலைப் புலிகளையும் ஈழ மக்களையும் இந்தியா பகைத்துக் கொண்டது. புலிகளை அழித்ததன் வழி, அந்த பாதுகாப்புச் சக்தியை இந்தியா இழந்துவிட்டது. கஸ்பரின் இந்த வார்த்தைகள் உரைப்பவை யாவை?

· சீனாவும் இந்தியாவும் போரில் ஈடுபடும்போது சிங்களன் சீனாவை ஆதரிப்பான்.

· சீனப் படைகள் தமிழீழ நிலப்  பரப்பிலும் கடற்பரப்பிலும் தளம் அமைக்கும். அங்கிருந்து இந்தியா மீதான தாக்குதல்களை மேற் கொள்ளும்.

· இந்தியப் படைகள் சிங்களப் பகுதிக்குள் நுழைவதை சிங்களர் அனுமதிக்கமாட்டார்கள். அச்சூழலில், தமிழீழப் பரப்பிற்குள் இந்தியப்படைகள் நுழைந்தே சீனத் தளங்களை அழிக்க இயலும்.

· ஆகவே போர் நடக்கும் களங்களில் ஒன்றாக, தமிழீழம் மாறப் போவது உறுதி.

· சீனாவை எதிர்த்தும் இந்தியாவை ஆதரித்தும் போரில் ஈடுபட வேண்டிய சூழல் தமிழீழ மக்களுக்கு ஏற்படும். 

· அப்படியான சூழலில் விடுதலைப் புலிகள் சீனாவை எதிர்த்துப் போரிடும் நல்ல வாய்ப்பை இந்தியா கெடுத்துவிட்டது. இவைதானே, பொருள்...?

தமிழீழமும் அதன் மக்களும் இந்தியாவுக்காகப் போரிட்டு அழிய வேண்டும்! இதுதான் கஸ்பரின் விருப்பம்! அந்த விருப்பத்தில் இப்போது மண் விழுந்துவிட்டது! இதுவே கஸ்பர் தமிழீழ மக்களையும் தமிழீழ அரசியலையும் அணுகும் விதம். ஆக மொத்ததில், தமிழீழ மக்கள் ஒன்று இந்தியாவால் கொல்லப்பட வேண்டும் அல்லது இந்தியாவுக்காக கொல்லப்பட வேண்டும்!

என்னே இவரின் புவி அரசியல் அறிவு! ஆளுமை! ஆண்மை! இப்போது கேட்கிறேன்...

ஜனவரி மாதம் போர் நிறுத்ததிற்கு ‘ஏற்பாடு’ செய்வதாக இந்தியா முற்சித்ததாக சொல்லும் கஸ்பர் அவர்களே...

அந்த ஏற்பாட்டில் ஆயுத ஒப்படைப்பு மட்டும் இருந்ததா...?

அல்லது

· இந்தியாவின் பாதுகாப்புப் படை யாக புலிகள் இருக்க வேண்டும்

· தலைவர் பிரபாகரன் இந்தியாவின் மாத ஊதியத்திற்கு ஏவல்படைத் தலைவனாகப் பணிபுரிய வேண்டும்

· தமிழீழத் தேசம் என்ற இலட்சியத்தைப் புலிகள் இந்தியப் பெருங்கடலில் ராமர் பாலத்திற்கு அடியில் புதைத்து விட வேண்டும்

· ஒரு புறம் சீனர்களோடும் மறுபுறம் சிங்களரோடும் சண்டையிட்டு, ஒருபோதும் போர் முடியாத, மரண மண்ணாக தமிழீழம் மாற வேண்டும் ஆகிய ’நிபந்தனைகளும்’ இருந்தனவா...?

குமுதம் நேர்காணலில் உங்கள் தொலைபேசியைக் காட்டி... ‘இதோ இந்தத் தொலைபேசியில்தான் நடேசன் அண்ணை என்னோடு பேசினார். அவரிடம் நான் இந்தியாவின் ஏற்பாடு பற்றிச் சொன்னேன்’ என்று கூறினீர்கள்.

நடேசன் ஐயாவை உங்கள் இந்தியா காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டது. நீங்கள் என்னவெல்லாம் பேசினீர்கள்...? நடேசன் ஐயா என்னவெல்லாம் கூறினார்...? இந்தியாவின் அந்த ரகசியமான ‘போர் நிறுத்த ஏற்பாட்டில்’ உண்மையில் என்னென்ன அம்சங்கள் இருந்தன...? மே மாதம் 16 ஆம் நாள் ‘நாங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம்’ என்று அறிவித்த புலிகள் இயக்கம்... நீங்கள் ‘ஏற்பாடு’ செய்தபோது மட்டும் ஏன் முரண்பட்டது...?

கேள்விகள் நிறைய உள்ளன.

சாட்சி சொல்ல நடேசன் ஐயா இல்லை. சாட்சியாக நீங்கள் காட்டும் உங்கள் தொலைபேசிக்கோ உயிரில்லை...!

ஆகவே, கஸ்பர் அவர்களே நீங்கள் மட்டுமே சாட்சியாக உள்ள அறைக்குள் நடந்த ’மர்மங்களை’ இனியும் வெளியே பேசாதீர்கள்’.

கஸ்பரின் அரசியல் இதுதான் என்பதை அவரது மதுரைப் பேச்சிலிருந்தே கணித்துதான் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் ஆகஸ்டு மாதம் ’ஈழம்: ஒற்றுமை முழக்கமும் கொள்கைக் குழப்பமும்’ என்ற கட்டுரை எழுதப்பட்டிருந்தது என்பதை அக்கட்டுரையை மீண்டும் ஒரு முறை படிப்பவர்களால் எளிதில் உணர முடியும்.

இயக்குனர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்போது கஸ்பர் மீதான விமர்சனத்தைத் தம்மீதான குற்றச் சாட்டு என்ற அளவில் அணுகினர். இதன்  விளைவுதான், நாம் தமிழர் இயக்கம் குறித்தும் இயக்குனர் சீமான் குறித்தும் கஸ்பர் வீசும் குற்றச்சாட்டுகளாக வளர்ந்து நிற்கின்றன.

‘தலைவர் பிரபாகரன் சொல்லித் தான் நாம் தமிழர் இயக்கம் தொடங்கினேன்’ என்று இயக்குனர் சீமான் கூறி வரும் இவ்வேளையில் கஸ்பர் ‘எனது ஆலோசனையின் படிதான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது; அந்த அமைப்பிற்குப் பெயர் வைத்ததே நான் தான்’ என்றெல்லாம் கூறுகிறார். இவற்றிற்குப் பதில் சொல்வதும் சொல்லாமல் விடுப்பதும் இயக்குனர் சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினரின் விருப்பம்.

நம்முடைய எதிர்பார்ப்புகள் என்னவெனில், தமிழ்த் தேசிய அரசியலில் களம்புகுந்துள்ள இயக்குனர் சீமான், அவருடன் இருப்பவர்களின் அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றிய திறனாய்வை மேற்கொண்டு, அதன்படிச் செயல்பட வேண்டும் என்பதே.

தமிழர் கண்ணோட்டம் உள்ளிட்ட தமிழத் தேசிய இதழ்கள் எழுதும் திறனாய்வுக் கட்டுரைகளைத் தம்மீதான தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றைப் புற நிலையில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திருந்தால், மதுரை மாநாட்டில் ஜெகத் கஸ்பரைத் தவிர்த்திருக்கலாம். அல்லது, அதற்குப் பிறகாவது அவருடைய பேச்சில் தம் இயக்கத்திற்கு உடன்பாடில்லை என இயக்குனர் சீமான் அறிவித்திருக்கலாம்.

மேலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குறித்த அவரது எதிர்மறைப் பார்வையை இனியாவது மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இனத்துரோகிகளுக்கு நாமே அங்கீகாரம் கொடுத்துவிட்டு, அவர்களால் ஏற்படும் இன்னல்களைச் சமாளிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்படுவோம்!  

Pin It