கற்பனைகள், நம்பிக்கைகளின் அடிப்படையில் அல்லாமல் ஆய்வுகள், அதன் முடிவுகள், நிரூபணம் ஆகியவற்றின் மூலம் தெளிவாகத் தெரியும் உண்மைகள் வழியாக உணரப்படுவது, அறிவியல்.

பூமி எப்போது தோன்றியது? அதில் உயிர்கள் எவ்வாறு தோன்றின? சூரியன் பூமியைச் சுற்றுகிறதா? பூமி சூரியனைச் சுற்றுகிறதா? கிரகணம் ஏற்படுவது எதனால்? வானம் நீலநிறமாகத் தெரிவது ஏன்? வானவில் ஏற்படக் காரணம் என்ன? ஒளி, ஒலி ஆகியவற்றின் வேகம் எவ்வளவு? மனிதன் எப்போது தோன்றினான்? நோயின்றி வாழ மருந்துகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன? தொழில் புரட்சி ஏற்படக் காரணமான நீராவி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? ஆப்பிள், மரத்திலிருந்து கீழே ஏன் விழுகிறது? கல்லும், இறகும் ஒரே நேரத்தில் கீழே விழுவத எப்படி? மனிதனின் குணங்கள் பாரம்பரியமாக சந்ததியினருக்கு கடத்தப்படுவது எவ்வாறு?...

இத்தகைய கேள்விகள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் எழுவது உண்டு. அதற்கெல்லாம் பதில்கள் உண்டு. ஆனால், யாராவது ஒருவர் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட காரணங்கள், உண்மைகள் தான் உலகம் இப்போது இருக்கும் நிலைக்கு அடிப்படையாகும்.  கி.மு. 500 -600 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தத்துவஞானிகள் முதல் 21ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானிகள் வரை எத்தனை எத்தனையோ பேர் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். மனிதகுல வளர்ச்சிக்கு துணை புரிந்திருக்கிறார்கள்.

அத்தகைய அறிவியல் முன்னேற்றத்தின் வரலாற்றை எழுதுவது எனில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் உருவாகும். ஆனால், 144 பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய புத்தகத்தில் விஞ்ஞானிகள் பற்றிய குறிப்புகளாக 35 அத்தியாயத்தில் சுருக்கமாக, ஆனால் தெளிவாக கலைக்களஞ்சியத்தின் ஒரு தொகுதி போல வடித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் பேராசிரியர் கே.ராஜூ.

ஒவ்வொரு அறிவியல் மேதைகளும் தங்களது கண்டுபிடிப்புகளுக்காக எத்தனை சிரமங்களை சோதனைகளை சுமந்திருக்கிறார்கள் என்பதனை அறியும் போது நமக்கு அவர்கள் மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் அபிமானமும் பன்மடங்கு அதிகரிக்கிறது.

பண்டைக்கால இந்திய விஞ்ஞானம் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை அறியும் போது நெஞ்சை நிமிர்த்துகிற எண்ணம் தோன்றுகிறது.

இந்தியாவை ஆண்ட மன்னர்கள் இலக்கியம், இசை போன்றவற்றுக்குக் கொடுத்த ஆதரவை அறிவியலுக்குக் கொடுக்கவில்லை. ... மக்களிடையே இருந்த மெத்தனப் போக்கின் காரணமாக, புதிய அறிவியல் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை... அவர்களிடையே பரவியிருந்த மூட நம்பிக்கைகள், வர்ணாஸ்ரம முறை போன்றவை அறிவியல் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன...

என்று இன்னும் பலவும் கூறுகிறார்.

ஓவியர் என்று மட்டுமே நாம் அறிந்திருக்கும் லியனார்டோ டாவின்ஸி, பல கண்டுபிடிப்புகளின் பிதாமகனாகத் திகழ்ந்தார் என்பதை அறியும் போது பிரமிப்பாக இருக்கிறது.

கலிலியோவின் டெலஸ்கோப் எப்படி பிரபஞ்சத்தின் மாபெரும் வெளிகளைத் திறந்து விட்டதோ, அதே போல் லீவென் ஹூக்கின் மைக்ராஸ்கோப் நுண்பொருள்களின் விந்தை உலகின் உள்ளே மனிதர்கள் சென்று பார்க்கும் வாயிலைத் திறந்து விட்டது என்று கூறுவதை இந்த நூலைப் படித்தால் உணரலாம்.

"20 ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் மின்சார மோட்டார்கள் ஒவ்வொரு கருவியிலும் பொருத்தப்பட்ட காலமாக இருந்தது. அடுத்த 50 ஆண்டுகளில் கணினியின் பயன்பாடு அதிகரித்தது; இனி வரும் 50 ஆண்டுகள் எம்2எம் கம்பியில்லா தகவல் தொடர்பு யுகமாக இருக்கப் போகிறது" என்று அறிவியல் முன்னேற்றத்தின் திசை வழி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல்.

கம்பியில்லாமல் 25 மீட்டர் தூரத்திற்கு ரேடியோ அலைகளை ஒலிபரப்ப முடியும் என்று 1895 ஆம் ஆண்டில் ஜெகதீஷ் சந்திர போஸ் நிரூபித்தார். 1897ல் தான் மார்க்கோனி, கம்பியில்லா தந்திக்கு உரிமை பெறுவதில் முந்திக் கொண்டார்.

சர்.சி.விராமன், எஸ்.சந்திரசேகர் ஆகியோரின் ராமன் விளைவு, சந்திரசேகர் வரம்பு ஆகிய கண்டுபிடிப்புகளின் சிறப்பு, பெண் விஞ்ஞானிகள் பற்றிய தகவல்கள் எல்லாம் தந்து நம்மை வியப்படையச் செய்திருக்கிறார் நூலாசிரியர்.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் கண்டுபிடிப்பு பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கிறார்.

இந்த நூல் பற்றி அறிவியல் இயக்கத் தலைவர் சி.இராமலிங்கம் பாராட்டியிருப்பது போல் வெற்றிகரமாக அமைந்துள்ளது. நூலாசிரியரின் விருப்பம் போல், 'பள்ளி இறுதி வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளைப் படித்தால் அவர்கள் வகுப்பறைகளில் தெரிந்துகொண்ட அறிவியல் மேலும் செழுமைப்படும்.

இந்த நூலை அழகாகவும் நேர்த்தியாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ள மதுரை திருமாறன் வெளியீட்டகம் மிகச் சிறந்த பணியைச் செவ்வனே செய்திருக்கிறது.

பக்கம் 144, விலை ரூ.99.

பத்துபிரதிகளுக்கு 40 சதவீதம் தள்ளுபடி

வெளியீடு:

மதுரை திருமாறன் வெளியீட்டகம்,

பழைய எண் 35, புதிய எண் 21,

 அறை எண்-3, சாதுல்லா தெரு,

தி.நகர், சென்னை- 600017.

தொடர்பு எண்: 92831 21210