தலித் மாணவர்களின் மேற்படிப்பை உறுதி செய்வதில் அண்மைக்காலமாக சில நல்லதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டாக்டர் சுகதேவ் தோரட் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, தலித் மாணவர்களுக்கான பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ராஜிவ் காந்தி ஆய்வு உதவித் தொகை முக்கியமானது. ஓராண்டு முனைவர் பட்ட ஆய்வு, இளநிலை ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் 2000 தலித் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தொகையைப் பெறுவதில் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

முதலில் இந்த உதவித் தொகையை பல்கலைக்கழகத்தின் எந்தப்பிரிவு அலுவலகம் வழங்க வேண்டும் என்ற குழப்பம் நீடித்தது. ஏற்கனவே ஆய்வு உதவித் தொகையை வழங்கும் அலுவலகம் வழங்காமல், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு அலுவலகத்திடம் ஒப்படைத்தனர். பல்கலைக்கழக அளவில் இவர்கள் காட்டும் மெத்தனத்தால் யு.ஜி.சி–யிடமிருந்து தொகை பெறப்பட்டு, எட்டு மாதங்கள் கழித்தே மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பங்கள் பெறப்பட்ட ராஜிவ்காந்தி ஆய்வு உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்பட்ட பலருக்கு, இன்னும் தொகை கையில் வந்து சேராத நிலையே உள்ளது.

இந்த உதவித் தொகை மாதம் 8000 ரூபாய் மற்றும் 9000 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டாலும், வழங்குவது என்னவோ ஆண்டுக்கு ஒருமுறைதான். முதல் ஆண்டுத் தொகையை இரண்டாம் ஆண்டு தான் பெற முடியும். பல்கலைக்கழகம் ஏற்படுத்தும் தாமதத்தினால் முதல் ஆண்டு தொகையை வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை அந்த மாணவரின் ஆய்வு அலமாரியிலேயே இருக்க வேண்டியதுதான்!

தற்பொழுது பல்கலைக்கழக மானியக்குழு எஸ்.சி./எஸ்.டி. மாணவர்களுக்கு முனைவர் பட்டத்திற்கு பிந்øதய ஆய்வு உதவித் தொகையை (Post doctoral Fellowship) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், விண்ணப்பிக்கும் மாணவர் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை வைத்துள்ளது. ஆனால் அதே யு.ஜி.சி..குழு பொதுப் பிரிவினருக்கு டாக்டர் டி.எஸ்.
கோத்தாரி பெல்லோஷிப் என்ற ஒரு பி.டி.எப். உதவித் தொகையை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் முனைவர் பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

குறைந்தபட்சம் முனைவர் பட்ட ஆய்வேட்டை சமர்ப்பித்திருந்தாலே போதும். மேலும் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை. தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மட்டும் முனைவர் பட்டம் முடித்திருக்க வேண்டும், ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியிட்டிருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளோடு, உதவித் தொகையும் கோத்தாரி உதவித் தொகையைவிட குறைவாகவே உள்ளது.

கோத்தாரி உதவித் தொகை அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு என்று ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எஸ்.சி. எஸ்.டி. பி.டி.எப். உதவித் தொகை அறிவியல், தொழிற்நுட்பம், மருத்துவம், சமூக அறிவியல் என அனைத்து துறைகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவித் தொகையை நிர்ணயித்ததில் ஏன் இந்த வேறுபாடு?

தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அரசின் ‘தானமாக’வும் பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் உதவித் தொகை அரசின் கடமையாகவும் கருதப்படுவதே இதற்குக் காரணமாகும். தகுதி அடிப்படையை நிர்ணயித்ததில் பொதுப் பிரிவினரை விட தலித் மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வந்ததைதான் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால் பொதுப் பிரிவினரை விட தலித் மாணவர்கள் அதிக தகுதியை கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது! இது தலித் மாணவர்களின் அடிப்படை உரிமையான கல்வி உரிமையை மறுக்கிறது. இதைக் கண்டித்தும், மாற்றக் கோரியும், பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு ‘தலித் ஆய்வு மாணவர் பேரவை’ கோரிக்கை மனு அளித்துள்ளது.

மாணவர் இல்லத்தில் இலவச சேர்க்கை

சென்னை தண்டையார்பேட்டை (மணிகூண்டு அருகில்) எண்.19, ரத்தின சபாபதி தெருவில் உள்ள ஆதிதிராவிட சமூக சேவகர் சங்க மாணவர்கள் இல்லத்தில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்க ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் 1.6.08 இலிருந்து இலவசமாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கான சேர்க்கை படிவம் 10.05.2008 அன்று முதல் வழங்கப்படுகிறது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட அசல் சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றும், மேலும் இறுதியாக பயின்ற கல்வி சான்றுடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆதிதிராவிடர் சமூக சேவகர் சங்கம், 19, ரத்தினசபாபதி சாலை, தண்டையார்பேட்டை, சென்னை - 600 021, பேசி : 044- 25955946
Pin It