அரசின் முகத்தில் பூசுகிறது தமிழகக் காவல்துறை. மிக அசிங்கமாக மாறிக்கொண்டிருக்கும் முகத்தைப் பார்க்கையில் அவமானமாகத் தெரியவில்லை அரசுக்கு. எதிர்த்துப்போராட எவனுக்கு இருக்கிறது தைரியம் என காக்கி உடை தரித்து, ரத்தம் வழியும் நாக்குகள் விரித்து லத்திக்கம்புகள் ஓங்கிப் பேசும் அரசு நிம்மதியாக இனி உறங்கப்போகலாம் என கொக்கரித்துக்கொள்ளும். வேடிக்கை பார்க்கும் மக்கள் என்ன செய்வார்கள்? அரசை பாராட்டுவார்களா இல்லை வீட்டுக்கு...?ஒரு வாரத்திற்குள் நடந்திட்ட இரு சம்பவங்களும் அதிமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துக்காட்டியிருக்கிறது. மக்கள் தேர்ந்தெடுத்த அரசு யார் தலைமையில் நடக்கிறதென இயல்பாய் ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. காவல்துறை அராஜக ஆட்சி நடத்துவதற்கா மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்?

செப்.11-பரமக்குடி இம்மானுவேல் சேகரனின் 54வது நினைவு நாள். 1924 அக்டோபர் 9 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், செல்லூர் கிராமத்தில் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்த இம்மானுவேல் சேகரன் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், வழக்கறிஞரான தன் தந்தையோடு பங்கேற்று, 3 மாதம் சிறைத்தண்டனை பெற்றார். ஒரு இராணுவ வீரனாக பணியாற்றச் சென்றவர், 1950ல் சாதியக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதே முதல் கடமை எனத்திரும்பிவிட்டார். ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை துவங்கி,1953ல் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு நடத்தியவர். முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் இரட்டைடம்ளர் முறைக்கு எதிராக நேரடிப்போராட்டம் நடத்தியது தமிழகத்தில் புதிய எழுச்சியின் துவக்கமாகும்.

ஆதிக்க சக்திகளின் மண்ணில் ஒடுக்கப்பட்டோர் உரிமை என குரல் எழுகையில் தாங்கிக்கொள்வார்களா? கொலை முயற்சிகள் நடந்தன. தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகளின் கலவரத்தையொட்டி அமைதிக்காக பணிக்கர் என்ற ஆட்சித்தலைவரின் தலைமையில் பேச்சுவார்த்தை 10.-09.-1957 அன்று நடக்கிறது. சுமூகமாக நிறைவு பெறாததால் புதிய பிரச்னைகள் துவங்குகின்றன. மறுநாளே ஒரு கொலைகார கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார் இம்மானுவேல்.

33 வயதே நிரம்பிய ஒரு போராளியின் படுகொலை மரணம் தாழ்த்தப்பட்ட மக்களை கொந்தளிக்க வைக்கிறது. நியாயம் கேட்டு அன்று போராடியபோது அம்மக்கள் மீது ஆதிக்கசக்திகள் நடத்திய தாக்குதலையும் சேர்த்து அது சாதிக்கலவரம் என்றே அன்று கூறப்பட்டது. போராளியின் நினைவுகளை ஏந்தி கடந்த 54 ஆண்டுகளாக அவரின் நினைவு தினத்தை அனுஷ்டித்துவருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய இம்மானுவேல் சேகரனை சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் கள நாயகர்களில் ஒருவராக அங்கீகரிக்க வேண்டிய அரசு இன்றுவரை புறக்கணித்தே வருகிறது. இம்மானுவேல் பணியாற்றிய காங்கிரஸ் கட்சியும், பெரியாரின் வழி வந்ததாக தன்னை கூறிக்கொள்வோர்களின் கட்சியும் தான் தமிழகத்தை இன்றுவரை ஆண்டுவந்துள்ளனர். ஆனால், ஒரு அரசு விழா கூட இன்றுவரை எடுக்கப்படவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் இம்மக்கள் குருபூஜை நடத்திவருகின்றனர். ஆனால் குருபூஜையில் மட்டுமல்ல நினைவஞ்சலி செலுத்தக்கூட எந்தவொரு அமைச்சரும் செல்வதில்லை. அனைத்து சாதிகளுக்கும் செல்லும் அமைச்சர்கள் தலித் போராளிகளின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் செல்லாததை சாதி ஒடுக்குமுறை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல? 2010ல் இவருக்கு நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. நினைவு தபால்தலை வெளியீடு என்றால் அரசு விழாவாக நடத்தப்பட்டு, முதல் தபால் உறையும் வெளியிடப்படும் என்று நாமறிவோம். ஆனால். இம்மானுவேலுக்கு..? விழா ஏதும் நடத்தப்படவில்லை.

மறைந்த முரசொலி மாறன் தபால் தலை 2004ல் வெளியிடுகையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி. ஆனால், அண்ணா அறிவாலயத்தில் மக்களைவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள சோனியாவை சிறப்பு விருந்தினராக அழைத்து விழா நடத்தி தபால் தலை வெளியிட்ட கலைஞர் தான் 2010ல் இம்மானுவேல் தபால் தலை வெளியிடுகையில் தமிழகத்தில் முதல் அமைச்சர். ஏன் விழா நடத்தவில்லை? சாதிய அரசியல் திராவிடக் கட்சிகளின் மையக்கொள்கையாக இருப்பதால்தான் இன்றும் தொடர்கின்றன தீண்டாமைக்கொடுமைகள். அரசின் நவீன தீண்டாமை அனைத்து துறைகள் மூலம் மட்டுமல்ல, காவல்துறை மூலமும் கோலோச்சுகிறது என்பதன் அடையாளமே தற்போது நடந்துள்ள துப்பாக்கிச்சூடு. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளியை சாதிய அடையாளத்துடன் இணைத்து ஒதுக்கிய அரசின் ஒடுக்குமுறையே 2011 செப்டம்பர்,11 துப்பாக்கிச்சூடு.

அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என காவல்துறைக்கு தெரியும். ஆனாலும், பதற்றமில்லாத பாதுகாப்பு தரவோ, ஆதிக்க சக்திகளின் கலவர முயற்சியை தடுக்கவோ மனமில்லாத காவல்துறை தலித் மக்களைத்தான் மீண்டும் கலவரக்காரர்கள் என்று, அரசுமுத்திரை குத்துகிறது. 11 வது வகுப்பில் பயிலும் தலித் பள்ளிச் சிறுவன் படுகொலை செய்யப்படுகிறான். மறுநாள் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள். என்ன செய்திருக்க வேண்டும் அரசும், காவல் துறையும்? குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமல்ல, பரமக்குடிக்கு வரும் தலித் மக்களுக்கும், தலித் தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அச்சம் நீங்க அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட தலித் மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரக்கூடாது என தடை விதிக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் காவல்துறையில் இதுதானோ? தூத்துக்குடியில் கிளம்பும் ஜான்பாண்டியனை கைது செய்து தடுக்கிறது காவல்துறை. தங்கள் போராளியின் நினைவு நாளிலேயே ஒரு மாணவனை பறிகொடுத்து நிற்கும் தலித் மக்களிடையே, நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதில் கொந்தளிப்பை உருவாக்கும் காவல்துறையின் இச்செயலை சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எனக்கூறலாமா அல்லது சாதிய நடவடிக்கை எனக்கூறலாமா? நினைவு அஞ்சலிக்கு வரும் மக்களிடம் வன்மத்துடன் நடந்துகொள்கிறது காவல்துறை. ஆறுதல் கூறக்கூட தடை விதிப்பது அநியாயம் எனக்கூறி சாலை மறியல் நடத்திய மக்களை காக்கை குருவி போல சுட்டுக்கொன்று சட்டம் ஒழுங்கை சரி செய்து விட்டதாக தற்பெருமை காத்துக்கொள்கிறது காவல்துறை.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனம் வைத்திருக்கிறார்கள், ஏன் பயன் படுத்தவில்லை எனக்கேட்டால் கலவரக்காரர்கள் எரித்துவிட்டதாக ஏகத்துக்கும் பொய் பேசிய காவல்துறை.. முதலில் கண்ணீர்ப்புகை குண்டு வீசி, வானத்தை நோக்கி சுட்டு அதன் பின்னரும் காவல் துறையினருக்கும், பொதுமக்கள் உயிருக்கும் அச்சம் என்ற நேரத்தில் தானே துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச்சூடு நடத்திய நோக்கமென்ன? 30 முதல் 50 பேர் வரை மட்டுமே மறியல் செய்ததாகத்தான் அனைத்துப் பத்திரிகைகளும் கூறுகின்றன. குண்டுக்கட்டாக தூக்கிக்கூட அனைவரையும் அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால், சிறு கூட்டத்தைக்கூட அமைதியாக கலைக்கத் தெரியாதா காவல்துறைக்கு? தெரியும், இருப்பினும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதென்றால் விசாரணையும், கடும் நடவடிக்கைகளும் தேவை என்றுதானே அர்த்தம். பசும்பொன் தேவர் குறித்து தவறாக எழுதியதால் தலித் மாணவன் கொலை செய்யப்பட்டான் எனக்காரண, காரியங்களை விளக்கமாகக்கூறிய தமிழக முதல்வர் கலவரத்தை தடுக்கவே துப்பாக்கிச்சூடு என்று ஒரு வரியில் சட்டமன்றத்தில் கூறுகிறார். அப்படியெனில், முழங்காலுக்கு கீழே சுட்டு அவர்களை கலைத்திருக்கவேண்டும். அவ்வளவு தானே, மாறாக நெற்றிப்பொட்டிலும், மாரிலும் குறி பார்த்து சுடப்பட்டதன் நோக்கம் என்ன? இம்மானுவேல் சேகரன் நினைவு நாளிலேயே அம்மக்கள் மீது துப்பாக்கிச்சூடு எனில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாட்டில் தானே குறைபாடு இருப்பதாக அர்த்தம்.

இரயில் விபத்தில் இறந்துபோனவர்களுக்கு 5 லட்சம் நிவாரண நிதி தருகையில், காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டால் இறந்துபோனவர் குடும்பத்துக்கு வெறும் ஒரு லட்சம் என்பது ஏமாற்றுவேலையே. தன் பரம்பரையிலேயே முதன் முதலாக ஒருவனை பாலிடெக்னிக் வரை அனுப்பிய தந்தை, இன்று அவனை இழந்ததோடு மட்டுமல்ல தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் அவரே மீண்டும் உழைக்கவேண்டிய கொடூர நிலைக்கு ஆளாகியுள்ளாரே, அவருக்கு இந்த ஒரு லட்சம் வாழ்வைத் தருமா? பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு வாகனங்கள் தீயெரிக்கப்பட்டதை காரணம் காட்டிப்பேசுவோர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் மதுரை மாவட்டம் சிந்தாமணியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு என்ன காரணம் சொல்வார்கள்?ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் துப்பாக்கிச்சூடு என்பதை நிலைமையை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட சட்டம்-ஒழுங்கு முடிவாகத் தெரியவில்லை. ஒரு விதமான நடவடிக்கைக்கு ஒரே உத்தரவு தானே காரணமாக இருக்கமுடியும் என ஐயம் எழுகிறது. ஐயத்தை போக்கவேண்டிய அரசு அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்தால் வருத்தமே மேலோங்குகிறது.

அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நம்பிக்கையை ஏற்படுத்துவது மட்டுமல்ல அமைதி தொடரவும் அடித்தளமிடுவார்களே, அது ஏன் பரமக்குடியில் நடக்கவில்லை? பாதிக்கப்பட்ட தலித் மக்கள் 2000 பேர் மீது 30க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு என சுமார் 8 ஊரைச் சேர்ந்துள்ள மக்கள் மீது வழக்கு தொடர்ந்தது ஏன்? நடு இரவிலும் வீடுகளில் தேடுதல் மேற்கொள்வது ஏன்? இதற்கு பெயர் தான் வேட்டையோ? 15 நாட்கள் வரை ஆன பின்னும் 144 தடை உத்தரவு ஏன்? கேள்விகள் அநேகம் உள்ளன. பதில் யாரும் கூறப்போவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவுதினத்தில் நடந்ததைப்போன்று வேறெந்த நினைவு தினத்திலும் நடவாது. வேறு எந்தப் பிரிவு மக்களுக்கும் இப்படியொரு கொடுமை நிகழ்த்தப்படாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கும் நிதி உள்பட எந்த உரிமையும் அவர்களைப் போய் சேர்வதில்லை, அடக்குமுறையைத் தவிர.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலவரத்தை தொடுத்த காவல்துறையின் கண்ணியமற்ற காரியங்களை விமர்சித்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய முதல்வர் ஏழு மனித உயிர்களைப் பறித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத செயல்தான் காவல்துறையின் அநாகரிக செயல்களுக்கு, சட்ட விரோத செயல்களுக்கு துவக்கமாக அமைந்தது என்பதைத் தான் தமிழகம் அடுத்த சில நாட்களில் கண்டது. முதலில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நீதி விசாரணை என அறிவிக்கும் முதல்வரின் முடிவும், மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்புக்குரலால் தான் நீதிபதியின் விசாரணை என மாறுகிறது. எனவே, நீதி விசாரணை என்ற அறிவிப்பும் காவல்துறைக்கு காமெடியாகவே தோணுகிறதென காவல் துறையின் கமிஷனரே கூறிருக்கிறார். உங்க அதிர்ஷ்டம், அவர் கையில துப்பாக்கி இல்ல, இருந்திருந்தா உங்களையெல்லாம் சுட்டுக்கொன்னுருப்பார், அப்புறம் என்ன, அரசு ஒரு நீதி விசாரணை அறிவிக்கும், நாங்க பார்க்காத நீதி விசாரணையா? இப்படி திருவாய் மலர்ந்து ஜனநாயகம் முகர்ந்திருப்பவர் வேறு யாருமல்ல. சேலம் மாநகர கமிசனர் தான்.

செப்டம்பர்,17 அன்று சந்தோஷ்குமார் என்ற ஆய்வாளரின் அநாகரிக செயல்களால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர்கள் குறித்து, தொழிற்சங்கத் தலைவர்களிடம் கூறிய வார்த்தைகள் தான் அது. சுட்டுக்கொல்வோம், நீதி விசாரணை சமாளிப்போம், யாராலும் எதுவும் செய்ய முடியாது என ஒரு கமிசனர் இப்படி வெளிப்படையாக சொல்வது ஜனநாயகத்தில் யாருக்கு பெருமை? மிக மோசமான அறிகுறி இது. தேசம் நாளை என்னவாகும்? கவலைப்படுவாரா முதல்வர்?. நீதி விசாரணை குறித்து காவல்துறை எள்ளி நகையாடுகிறது என்றால் அதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் தான். ஏற்கனவே பல நீதிவிசாரணை அறிக்கைகளெல்லாம் பரண் மீது தூசி அடைந்து கிடப்பதால்தான் நீதிவிசாரணை என்றாலே கேவலமாக பார்க்கப்படுகிறது. மேலும், ஒய்வு பெற்ற நீதிபதி விசாரணை என்பதால் காவல்துறை அதிகாரிகளும் அஞ்சுவதில்லை, அரசும் மதிப்பதில்லை. விசாரணை முடிவுகளும் அரசுக்கு சாதகமாகவே வருகிறது என்பதுதான் வேதனை.

ஒரு சாக்கடையில் தண்ணீர் தேங்கி நின்று அதில் ஒரு புழு உருவானாலே அது மைனாரிட்டி திமுக அரசின் தோல்வி என தன் பெயரில் அன்றாடம் ஒரு அறிக்கை விட்டு, பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் என மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நட்த்துவதையே ஐந்து ஆண்டு காலத்துக்கும் நடத்திய முதல்வர்.

ஜெயலலிதாவால் இளைஞர்கள் ஒரு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த நடத்தக்கோரிய ஆர்ப்பாட்டத்தை ஏன் சகித்துக்கொள்ள முடியவில்லை? ஐந்து ஆண்டு காலத்துக்கு மட்டுமே ஆட்சியில் இருக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்கள் மறந்து விடுகின்றனர். மக்கள் தான் ஞாபகப்படுத்துகின்றனர் தோல்வியைப் பரிசாக அளித்து.

சேலம் பல்நோக்கு மருத்துவமனையில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. எனவே, பணிகளை முடித்த பின் செயல்படுத்துவோம் என்று கூறி மூடுவதாக அறிவித்துள்ளனர் புதிய ஆட்சியாளர்கள். சமச்சீர் கல்வியில் அதிமுக அரசின் வெறுப்பு அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்த தமிழக மக்களுக்கு இயல்பாகவே ஒரு பய உணர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்றால்,அதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி அதை இரத்து செய்வது, மூடுவது என வெறுப்பு அரசியல் செய்யும் அதிமுக அரசு மூடியவற்றை, இரத்து செய்தவற்றை மீண்டும் செயல்படுத்துமா அல்லது அப்படியே கண்டும் காணாமல் புறக்கணித்து விடுமா என்பதே அப்பயம். இரண்டு மாதங்களாக குழந்தைகள் புத்தகங்கள் இல்லாமல் பள்ளி செல்லும் நிலையைப் பார்த்த மக்கள், தமிழக அரசின் குணத்தை எண்ணி அச்சப்படாமல் இருக்க இயலாது. அந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசின் கடமை.

திமுக- காங்கிரஸ் கூட்டுச் சதியால் செயல்பாட்டுக்கு வராமல்போன மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தமிழக அரசு முயற்சித்திருந்தால் மக்கள் பாராட்டியிருப்பார்கள். ஆனால், அதற்காக போராடிய வாலிபர்களை நடுவீதியில் இழுத்து, அடித்து, லத்தியால் மண்டையை உடைத்து, அநாகரிக வார்த்தைகளால் பேசிய காவல்துறைக்கு தமிழக அரசு வக்காலத்து வாங்கினால் அதிமுக அரசு ஏன் மருத்துவமனையை மூடியது என்ற சந்தேகமே மக்களிடம் வலுப்பெறும். இப்போது அது தான் நடந்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்னமே நடைபயணத்துக்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் கடிதம் கொடுத்துள்ள சூழலில், முதல் நாள் இரவு வந்து சொல்கிறார்கள், அனுமதி கிடையாதென. இயக்கம் நடத்தக்கூடாது என்ற நோக்கம் தானே காரணம்? நடைபயணம் என முடிவுசெய்து ஊரெல்லாம் மக்களிடம் அறிவித்தபின்பு முதல் நாள் நள்ளிரவில் போராட்டம் இரத்து என அறிவிக்க நிர்ப்பந்தித்தால் அது ஜனநாயக நடைமுறையா? எந்த வகை சட்டம் இது? என்ன வகை ஒழுக்கம் இது?

காலை 10மணி. போராட்டத்துக்கு வரும் தோழர்களிடம் பேசிக்கலைகிறோம், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுக்க உதவி செய்யுங்கள் என ஜனநாயக நடைமுறைப்படி கூறியுள்ளனர் போராட்டக்காரர்கள். நான் ஒரு போலிசு, காக்கி சட்டைக்காரன் சொன்னதுக்கப்புறம், நீயென்னடா பேச வேண்டியிருக்கு, நீயென்ன பெரிய புடுங்கியா...(காவல் துறை அதிகாரிகள் கூறிய வார்த்தைகளை கண்ணியம் கருதி தவிர்க்கிறோம். மிக ஆவலாக உள்ளவர்கள் ரயில் கழிப்பறை மற்றும் சினிமா தியேட்டர் கழிப்பறையில் உள்ள வார்த்தைகளை டேய், பிடுங்கி, மயிரு என இடை இடையே போட்டு படித்துக்கொள்ளவும்) ஒரு காக்கி உடைக்காரர் சொன்ன உடன் கேட்டு நடக்கனுமாம், இல்லேன்னா அடிச்சு மண்டய உடைப்பாரம். என்ன சட்டம் இது? உங்க லக், அவர் கையில பிஸ்டல் இல்ல, இருந்திருந்தா சுட்டுக்கொன்னுருப்பார் என கமிஷனரும் கலாய்ப்பாராம் என்றால் இந்த தைரியம் யார் தந்தது?முன்னாள் தமிழக முதல்வர் வந்தால் கூட இதைத்தான் செய்வோம் என இவர்கள் கூறுகிறார்கள் என்றால் நாளை இந்நிலை அதிமுகவுக்கு கூட வருமே அப்போது இதை சட்டம் என ஏற்றுக்கொள்வார்களா? சட்டம், ஒழுங்கு இல்லாத மனித உரிமையை மதிக்காதவர்கள்தான் காவல்துறையினர் என சேலம் கமிஷனரே வாக்குமூலம் தந்திருக்கிறார். இது அதிமுகவுக்கு ஒரு எச்சரிக்கை.

21 வாலிபர்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர் முத்துக்கண்ணன் தலைமையில் கைதுசெய்த ஆய்வாளர் காவல்நிலையத்தில் செய்த செயல்களைப் பார்க்கையில் அவர் மீது தனி விசாரணை நடத்த வேண்டும் என்றே தோணுகிறது. நான் சகிகலாவுக்கு சொந்தக்காரன் எனக்கூறி, நான் யாரை வேண்டுமானலும் அடிப்பேன் எனக்கூறியுள்ளார். சந்தேகமில்லாமல், இது ஒரு அவதூறு வார்த்தைதான். ஏனெனில், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர் என்றால் ஆட்சிக்கு அவமானத்தை தரும் செயல்களை செய்யமாட்டார்கள். ஆனால், இவர், காவல்நிலையத்தில் வைத்து, மாநிலத்தலைவர். முத்துக்கண்ணனின் முகம் மீது தன் பூட்ஸ் காலால் மிதித்து வீரம் காட்டியுள்ளார். கழிப்பறைக்கவிஞர் போல கெட்ட வார்த்தைகளால் தன்புகழ் பாடும் காவியத்தை பல மணிநேரம் பாடியுள்ளார். பத்துப் பேர் கூட நிற்கமுடியாத அறையில் 20 பேரை ஒருவர் மீது ஒருவர் என காலை முதல் மாலை வரை உட்காரவைத்திருக்கிறார். மண்டை உடைந்து இரத்தம் சிந்துகிறது ஒருவருக்கு, காது கிழிந்து, முதுகில் இரத்தம் வழிந்து என பலருக்கு கடுமையான காயம் பட்ட சூழலில் யாருக்கும் முதலுதவி சிகிச்சை கூடத் தராமல் ஒரு சிறு அறையின் கதவுகளையெல்லாம் மூடிவிட்டு அடைத்து வைத்திருக்கிறார் என்றால் இவர் மனித உரிமை தெரியாதவர் என்று மட்டும் தோணவில்லை.

குற்றவாளிகளைப் போல் செல்போன்களை பிடுங்கியவர், நான் பொல்லாதவன் பொறுக்கி என்பது போல் நடந்திருக்கிறார். சிவப்பாக, உயரமாக இருப்பதால் அடிக்கடி சினிமாவில் போலிஸ் கதாநாயகனாக நடிப்பது போல் கனவு காண்பார் போலிருக்கிறது. இவ்வளவும் நடந்த பிறகும் தமிழக காவல்துறையோ, தமிழக அரசோ எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. எதிர்ப்பியக்கத்துக்கு கூட மைக்செட் வைக்க அனுமதி இல்லை என்கிறார்கள். செப்.22 அன்று 4000 இளைஞர்கள் பங்கெடுப்புடன் சி.பி.எம். சட்டமன்ற கட்சித்தலைவர். அ. சவுந்தரராசன், DYFஈ மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலப்பொருளாளர் பாலா ஆகியோர் கலந்து கொண்ட கண்டன இயக்கம் நடந்துள்ளது. ஆனாலும், தவறிழைத்தவர்கள் மீது எந்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதே நேரத்தில், சேலத்தில் கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு செப்.21 அன்று சம்மன் வழங்கப்பட்டுள்ளது. சேலம் தடியடியை கண்டித்து மாநிலமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள் மீது நான்கைந்து நாட்கள் கழித்து பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. அதாவது, போராட்டக்காரர்களை அடக்கி, ஒடுக்கப்போகிறார்களாம். ஐ.ஏ.எஸ். வரை படித்தவர்களுக்கு வரலாறு தெரியாமல் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. பள்ளியில் போய் படிக்க வாய்ப்பில்லை அவர்களுக்கு. எனவே, கற்றுக்கொடுப்பார்கள் மக்கள் புதிய வரலாற்றை....

Pin It