உடலில் குறிப்பிட்ட இடங்களில் ஊசியைக் குத்தி 20 நிமிடங்கள் சிகிச்சை தருவது அக்குபங்ச்சர் சிகிச்சை முறை. மூகம் கை, பாதம் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட நாடிகளில் ஊசிகளை செருகி வைப்பது இந்த சிகிச்சையின் அடிப்படை.

உண்மையில் இந்த சிகிச்சை வேலை செய்கிறதா இல்லையா என்ற சர்ச்சை அலோபதி மருத்துவர்களிடம் இருந்து வருகிறது. இது விஞ்ஞானப் பூர்வமானது இல்லை என்பது அவர்களது கருத்து. இதை சோதிக்க வேண்டி கோதென்பர்க் பல்கலைக்கழகம் பெண்களுக்கு வெகு சாதாரணமாக வரும் பிரச்சனையை எப்படி அக்குபங்சர் தீர்க்கிறது என்று ஆராய்ந்தனர்.

பாலிசிஸ்ட்டிக் ஓவரி என்ற ஒரு நோய்த்தொகுப்பு பெண்களிடம் சாதாரணமாகக் காணப்படுவது. அண்டசயத்தில் மாதத்திற்கு ஒரு முட்டையானது தோன்றுவதற்கு பதிலாக ஒரே சமயம் பல முட்டைகள் போட்டி போட்டிக்கொண்டு பக்குவமாக முயலும்போது உடலில் ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்க ஆரம்பிக்கின்றன. பெண்களின் உடலில் டெஸ்ட்டோஸ்டீரோன் என்ற ஆண் ஹார்மோன் அதிகமாக இரத்தத்தில் இறங்குகிறது. இதன் காரணமாக பெண்களுக்கு குழந்தைபாக்கியம் குறைவதுடன், உடம்பு பருமனாகுதல், சக்கரை நோய், இதயம் தொடர்பான நோய்கள் உருவாகின்றன. இந்த நோயாளிகளிடம் பொதுவாக பரிவு நரம்பு மண்டலம் அதிகமாக தூண்டப்பட்டிருக்கும். இதை வழக்கமான அலோபதி முறையில் சரிசெய்ய முடியாது. பாலிசிஸ்ட்டிக் ஓவரி நோயுடைய பெண்களை மூன்று பகுதியினராகப் பிரித்துக்கொண்டு அதில் ஒரு பகுதியினருக்கு நான்கு மாதங்கள் தொடர்ந்து அக்குபங்சர் சிகிச்சை கொடுத்தார்கள்.

இன்னொரு பகுதியினருக்கு வெறும் உடற்பயிற்சி மட்டும் செய்யச் சொல்லி அவர்களது இதயத் துடிப்பை மட்டும் கவனித்துக் கொண்டுவந்தார்கள். மூன்றாவது பகுதியினருக்கு உடற்பயிற்சி, உணவு முறை ஆகியவற்றின் பயனைப் பற்றி விளக்கினார்கள். அக்குபங்சர் சிகிச்சை தந்த பெண்களிடம் மாதவிலக்கு சீரானது மட்டுமின்றி உடல் எடை குறைந்து நோய்க்கு முந்தைய நிலையைத் திரும்ப அடைந்தனர். அக்குபங்ச்சர் சிகிச்சை நல்ல பலன்களைத் தருகிறது என்று அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

Pin It