1989 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையக் காரணமாக இருந்த ரூ. 64 கோடி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், கடந்த மக்களவைத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியும் பேச விரும்பாத அளவுக்கு மிகவும் சிறிய, ரொம்பவும் பழைய ஊழலாக மாறிப்போய், இந்தியக் குடிமக்களும் மறந்துவிட்ட நிலையில், எங்க அப்பன் குதிரில் இல்லை என்ற கதையாக, தானே இந்தப் பிரச்சனையை எடுத்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு.

மற்றவர்கள் எல்லாரும் போஃபர்ஸ் ஊழலை மறந்துவிட்டாலும் அகில இந்திய கட்சியால் மட்டும் மறக்க முடியவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது.

ஒட்டாவியோ குவாத்ரோச்சி, அர்ஜென்டினா நாட்டில் கைது செய்யப்பட்டபோது, அவரை விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியில் தோற்றுப்போய், அர்ஜென்டினாவில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில், குவாத்ரோச்சி தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் இந்திய அரசு சமர்ப்பிக்கவில்லை. என்று அம்பலப்படுத்தியபோதே, இந்த வழக்கின் கதி என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துபோன ஒன்று.

இந்த வழக்கு வெறும் ‘கயிற்றரவு’ என்று புத்திக்கு எட்டிவிட்ட நிலையிலும்கூட, அதில் இன்னமும் உயிர் இருப்பதைப்போலவும், அந்த உயிரசைவில் அது நல்லபாம்பு அல்ல, வெறும் தண்ணிப்பாம்பு என்று உலகை நம்பச் செய்யவும் ஆட்சியாளர்கள் நடத்தும் இந்தப் போலி நாடகம், அவர்கள் செய்த ஊழலைவிடவும் வெட்கக்கேடாக இருக்கிறது.

குவாத்ரோச்சி மீதான வழக்கைத் திரும்பப் பெறுவற்காக மத்திய அரசு குறிப்பிடும் காரணங்கள் வலுவற்றவை. அவரை இன்னொரு நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை என்ற காரணத்துக்காக ஒரு வழக்கைத் திரும்பப் பெறுவது என்ற முன்னுதாரணம் ஏற்படுமானால், தொடர் வெடிகுண்டு வழக்கில் மறைந்துவாழும் தாவூத் இப்ராகிம் மீதான வழக்கையும் திரும்பப் பெறுவார்களா?

அல்லது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் சொல்வதைப் போல, இந்த வழக்கில் தேவையில்லாமல் மக்கள் பணம் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது என்பது சரியான வாதம் என்றால், மத்திய அரசு நிறைய வழக்குகளை நடத்தாமல் இருந்தாலே கருவூலப் பணம் கோடி கோடியாய் மிச்சமாகுமே!

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகார்களை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதைக் காட்டிலும், நிரூபிக்கக் கூடாது என்பதற்காகவே செயல்பட்டதற்கான ஆதாரம்தான் அதிகம்.

குற்றம் சாட்டப்பட்ட குவாத்ரோச்சி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியின் உறவினர். ஆகவே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இந்திய அரசில் செல்வாக்குடன் வலம் வந்தவர்.

ஆயுத பேரத்தில் கணிசமான தொகை இவர் மூலம் கைமாறியது என்பது இவர்மீதான குற்றச்சாட்டு. குவாத்ரோச்சிக்கும் அவரது மனைவி மரியாவுக்கும் லண்டனில் உள்ள பிஎஸ்ஐஏஜி வங்கியில் தனித்தனியாக இரண்டு சேமிப்புக் கணக்குகள் இருப்பதும், அவற்றில் முறையே 3 மில்லியன் யூரோ, 1மில்லியன் யூரோ டாலர்கள் இருப்பில் உள்ளதை இண்டர்போல் அமைப்பு வெளியிட்டது. இந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

ஆனால், 2006 இல், காரணம் ஏதுமின்றி முடக்கத்தை நீக்கியது இந்திய அரசு, தேடப்படும் நபர் என்பதான ரெட்கார்னர் நோட்டீஸையும் கூட இன்டர்போல் விலக்கிக் கொள்ளும்படிச் செய்ததும் மத்திய புலனாய்வுத் துறைதான்.

இந்திய அரசே இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு, தற்போது இதையே இயலாக் காரணங்களாகக் காட்டி, வழக்கைத் திரும்பப்பெற மனு செய்கிறது. போஃபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிருடன் இருப்பவர் குவாத்ரோச்சி மட்டுமே, அவரைக் காப்பாற்ற, வழக்கைக் கொன்று புதைக்கிறார்கள்.

இந்திய அரசுதான் வழக்கைத் தொடுத்தது, அதே இந்திய அரசு இப்போது வழக்கை திரும்பப் பெறுகிறது. 

Pin It