'வரகரசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்' என்று அவ்வைப் பிராட்டி குறிப்பிடுகிற வழுதுணங்காய் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கத்தரிக்காயே. இது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மண்ணில் சுவைக்கப்படுகின்ற உணவுப் பொருள்களில் ஒன்று. இந்த பாரம்பரியம் மிக்க கத்தரிக்காய்க்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது மரபீனி மாற்றம்  என்ற பெயரில் கத்தரிக்காயின் மரபியல் கூறுகளில் மாற்றம் செய்து, அதை வணிகச்சிறையில் பூட்ட முனைந்துள்ளன பன்னாட்டு வணிக நிறுவனங்கள்.

சென்ற நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த உயிரியல் கோட்பாட்டை வழங்கியவர்கள் டார்வினும் கிரிகர் மெண்டலும். அதேபோல இந்த நூற்றாண்டை ஆட்சி செய்யும் உயிரியல் கோட்பாட்டை வழங்கியவர்கள் கிரிக், வாட்சன் ஆகிய இருவராவர். இவர்கள் கண்டறிந்த மரபணுவினுடைய  வடிவமான திருகுச்சுருள் வடிவம் மிகப் புகழ்பெற்றது. இதற்காக இவர்களுக்கு நோபல் பரிசும் கிடைத்தது. இவர்களது முதன்மையான மற்றொரு தேற்றம் உயிரின் மறைவிடம் 'டி.என்.ஏ'க்கள் என்றும் அவற்றைக் கட்டமைப்பதன் மூலம் உயிரினங்களைத் தோற்றுவிக்க முடியும் என்பதுமாகும். இதன் அடிப்படையில் இன்று பல பில்லியன் டாலர்கள் புழங்கும் துறையாக உயிரிநுட்பவியல் துறை வளர்ந்துள்ளது. மாந்த இனத்தின் மரபீனிகளைத் தொகுக்கின்ற ஆய்வுத்துறையான 'மாந்தர் ஈனிமேனித் திட்டத்திற்கு' 1980களிலேயே 3000 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டன.

இன்று கணினித்துறையைவிட எதிர்காலம் மிகுந்த துறையாக, இந்த உயிரிநுட்பவியல் துறை மாறி வருகிறது. இதில் பன்னாட்டுக் கும்பனிகள் பல கோடி டாலர்களை தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக வேளாண் துறையிலும், மருத்துவத் துறையிலும் இவர்களது ஆதிக்கம் பெருகி வருகிறது. மீண்டும் முளைக்க இயலாத முடிவிப்பு விதைகளையும், விதைத்த விதை நன்கு வளர குறிப்பிட்ட வளர்ச்சி ஊக்கியை தெளித்தால்தான் வளர முடியும் என்ற அளவில் உள்ளுக்குள் குறிப்பிட்ட நஞ்சைப் பொதிந்து வைக்கும் மடிவிப்பு விதைகளையும் இன்று சந்தையில் புழக்கத்திற்கு விடுவதில் அவர்கள் மும்முரமாக உள்ளனர்.

இந்த அடிப்படையில் வந்த மான்சாண்டோவின் பாசில்லஸ் துரிஞ்சியன்சஸ் பருத்தி விதைகளும், சின்ஜெண்டாவின் பொன்னரிசி விதைகளும் உலக அளவில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. பல்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட மரபீனி மாற்ற உணவுப் பொருட்களுக்கு தடை உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதிப்பதில் முனைப்பாக உள்ளன. ஆனால் அமெரிக்கா மரபீனி மாற்றப் பயிர்களை அதிகம் விளைவித்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு அடையாளம் தெரிவதற்காக "மரபீனி மாற்ற உணவு" என்ற முத்திரை பதித்து விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு பல்வேறு அமைப்பினர் இதை எதிர்த்துக் போராடி வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் இப்படி எந்தக் கட்டுப்பாடும் இன்றி மரபீனி மாற்ற மலட்டு விதைகளை விற்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசுப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்களும் துணைபோவதுதான் வேதனை மிகுந்த வேடிக்கை. பருத்திக்கு அடுத்தபடியாக, இப்போது மரபீனி மாற்றக் கத்தரியை புகுத்த முனைந்துள்ளனர்.

இந்தியா போன்ற உயிரியல் பன்மயம் மிக்க நாடுகளில் வேளாண்மை மட்டுமல்லாது உணவுப் பழக்கங்களும் பன்மயம் மிக்கவை. இதை அழிப்பதில் முதன்மைப் பங்கு வகித்தது பசுமைப் புரட்சி. எண்ணற்ற நெல் வகைகளும் பிற புஞ்சைத் தவசங்களும் நமது மண்ணில் நிறைந்து காணப்பட்டது. 60 நாட்களில் விளையும் 'அறுபதாம் குறுவை', 'அவசரக் கார்' முதல் வெள்ளத்திலும் வளரும் 'மடுமுழுங்கி' வரை ஆயிரக்கணக்கான வகைகள். அதுவும் பகுதிக்கேற்ற வகையில், இராமநாதபுரத்தில் பயன்படுத்திய நெல் தஞ்சாவூரில் பயன்படுத்தப்படவில்லை. இந்த வேளாண் பருவநிலைத் தன்மை அன்று பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் பசுமைப் புரட்சி காரணமாக இன்று ஐந்தாறு வகை நெல்வகைகளை மட்டுமே தமிழகம் முழுவதும் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாக்கி இருக்கிறது.

வறட்சியைத் தாங்காத இந்த 'வீரிய' விதைகளால் பயிர் காய்கிறது. பெரு மழை பெய்தால் வெள்ளத்தைத் தாங்க முடியாத குட்டைப் பயிர்கள் (ஐ.ஆர். வகை நெற்கள் குட்டையானவை) அழிகின்றன. கூடவே வேதி உப்புகளும், பூச்சிகொல்லி நஞ்சுகளும் மண்ணையும் நீரையும் உப்பாக்கியும் நஞ்சாக்கியும் அழித்தன. இன்று இதற்கு தீர்வு காணப் போகிறோம் என்ற பெயரில் அவற்றின் தோல்விக்கான அடிப்படையான காரணங்களைக் கண்டறியாமல், பசுமைப் புரட்சியைவிடவும் ஆபத்தான வழிமுறைகள் தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. இது காயத்தின் அடிப்படையைக் கண்டறிந்து களையாமல், மேற்பூச்சாக புனுகு போடுவதுபோல் இருக்கிறது.

உயிரிநுட்பவியல்

உயிரியல் தொழில்நுட்பம் அல்லது உயிரிநுட்பவியல் என்ற அறிவியல்துறை இன்று மிகப் பெரிதாக வளர்ந்துள்ளது. பாலைத் தயிராக புளிக்க வைக்கும் எளிய நுட்பம் இதன் தொடக்கநிலையாகும். பாலை தயிராக மாற்றுபவை நொதிமம் எனப்படும் நுண்ணுயிர்கள். இவ்வாறு நுண்ணுயிரிகளைக் கொண்டு நடத்துவிக்கப்படும் தொழில்நுட்பத்திற்கு உயிரிநுட்பவியல் என்று பெயர். இதன் ஒரு பிரிவாக உருவானதே மரபீனிப் பொறியியல் எனப்படும். அதாவது உயிரிகளின் அடிப்படை மரபுக் கூறுகளான மரபீனிகளை மாற்றியமைத்து செயற்படுத்தும் தொழில்நுட்பம் என்பதே இதன் பொருள். இதன் மூலம் 'புதிய' உயிரினங்களை உருவாக்கிவிட்டதாக அறிவியல்வாணர்கள் (!) கூறுகின்றனர்.

ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படை அலகாக செல் அமைந்துள்ளது. இந்த செல்களின் உள்ளே உட்கரு என்ற அமைப்பு உள்ளது. இந்த உட்கருவில் குருமேனிகள் விரல் போன்ற பகுதிகள் காணப்படுகின்றன. இவைதாம் ஓர் உயிரினத்தின் உறுப்புக் கூறு அமைப்புகளை ஈன்று புறந்தருபவை. எடுத்துக்காட்டாக, "ஆலமரத்தின் விதையில் இருந்து ஆலமரமே வரும். வேப்பமரம் வருவது கிடையாது". இதற்குக் காரணம் அவற்றில் அமைந்துள்ள மரபீனிகளின் ஒன்றுபட்ட அடுக்கு அமைப்பாகும். இந்த மரபீனிகள் மரபுக் கூறுகளை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்கின்றன. ஒருவரின் மூக்கு நீளமாக இருப்பதற்கு ஒரு மரபீனித் தொகுப்பு காரணமாக இருக்கும், ஒருவரின் தோல் கருப்பாக இருப்பதற்கு மற்றொரு மரபீனித் தொகுப்பு காரணமான இருக்கும். இப்படியாக பற்பல மரபீனித் தொகுப்புகள் இணைந்து ஓர் உயிரினத்தை உருவாக்குகின்றன. இயற்கையின் இந்த அடிப்படையான சூத்திரத்தை இன்றறைய அறிவியல் உலகம் பிரித்தரியத் தொடங்கிவிட்டது. அத்துடன் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திறனைப் பெற்றுவிட்டது.

யார் ஈன்றது?

ஆங்கிலத்தின் உள்ள Gene என்ற சொல் தமிழின் ஈன் என்ற சொல்லுக்கு இணையானது. இந்த ஆங்கிலச்சொல்லின் மூலம் தமிழில் இருந்து சென்றதாக சொல்லாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 'ஈன்று புறந்தருதல்' 'ஈன்றாள் பசி காண்பாள் ஆயின்' என்று பரவலாக பண்டைத் தமிழ் இலக்கியங்களில் ஈனுதல் என்ற சொல் காணப்படுகின்றது. ஈ என்பது கிரேக்க/லத்தீன் மொழிகளுக்குச் செல்லும்போது ஜீ என்று மாறுவது இயல்பு. இந்த அடிப்படையில் ஈன், இனம்  என்ற சொற்கள் உருவாயின. மரபுக்கூறுகளை (ஈனுவதால்) தருவதால் இதை மரபீனி என்று அழைக்கலாம்.

மரபீனிகளை மிக எளிதாக மாற்றியமைப்பது இயலாத செயல். இயற்கையில் ஓர் உயிரினத்தின் மரபீனிகள், மற்றொரு வகை உயிரினத்தின் செல்களுக்குள் செல்ல முடியாது. ஏனெனில் புதிய செல்லுக்குள் நுழையும் டி.என்.ஏ.வை, அச்செல்களில் அமைந்துள்ள நொதிமங்கள் அழித்துவிடும். இதனால்தான் இன்றும் "அப்பனுக்குப் பிள்ளைகள் தப்பாமல்" பிறக்கின்றன. ஆனால் இந்தச் சட்டம் குச்சிலங்கள் (bacteria), நச்சுயிரிகள் (virusus) போன்ற உயிரினங்களில் சற்றுத் தளர்ந்து காணப்படுகிறது. அதாவது, நுண்ணுயிரிகளின் செல்களுக்குள் இருக்கும் நொதிமங்கள் அவ்வளவு 'கடுமையானவை' அல்ல. அவை பிற டி.என்.ஏக்களை உள்ளே வர இசைவு கொடுக்கின்றன. ஏனெனில் நுண்ணுயிரிகள், படிமலர்ச்சி (Evolution) நிலையில் முதல் படிக்கட்டில் இருப்பவை. இவ்வாறு குச்சிலங்கள், நச்சுயிரிகள், இவற்றின் டி.என்.ஏ.வைத் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகள் வேறு பெரிய உயிரினங்களின் உடலுக்குள் நுழைய முடியும். இதனால் வேறொரு மரபினப் பண்பு புதிய உயிரினங்களில் செல்ல ஏதுவாகிறது.

இந்தத் தன்மையைக் கண்டறிந்த அறிவியலாளர்கள், மரபீனிகளை கிடைமட்டத்தில் பரிமாற்றம் செய்யத் தொடங்கினர். கிடைமட்டம் என்பது, வேறு எவ்வித சூழலியல், இயற்கைக் கூறுகளைக் கணக்கில் எடுக்காமல் எந்திர வகையில் வெட்டி ஒட்டும் முறையாகும். இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத உயிரினங்களின் பண்புகள் இணைக்கப்பட்டுகின்றன. இயற்கையாக நடக்கும் படிமலர்ச்சி முறையால் ஏற்படும் மாற்றம் நெடுங்குத்து மட்டத்தில் நடப்பதாகும்.

முன்பெல்லாம் கலப்பின முறையில் ஒரே குடும்ப இன உயிரினங்களை மட்டுமே இணைசேர்க்க முடிந்தது. அதாவது மரமரத்துடன் மாமரங்களை ஒட்டுவது, பாலா மரத்தில் (பலா மரம் வேறு) சப்போட்டா போத்துகளை ஒட்டுக்கட்டுவது என்ற அளவில் மட்டுமே இயன்றது. இதன்மூலம் கலப்பினங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற குச்சிலத்தின் மரபீனியை பருத்திச் செடிக்கும், கத்தரிச் செடிக்கும் மாற்றுவது கைகூடிவிட்டது. மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இப்படிப்பட்ட நுட்பங்களை வைத்தே தமது விதைச் சந்தையை விரிவாக்குகின்றன.

பருத்தியில் பா-து (Bt) விதைகளை அறிமுகம் செய்த மாண்சாண்டா வகையறாக்கள் இந்தியாவில் பெரும் தோல்வியைச் சந்தித்தனர். அதன் பின்னர் இப்போது கத்தரியில் தங்களது கைங்கரியத்தைக் காட்டியுள்ளனர். கத்தரிச் செடியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் புழுவைக் கொல்லும் புரதத்தைக் கொடுக்கக் கூடியது புதிய பா-து கத்தரி. அதாவது  பா-து குச்சிலத்தின் உள்ள புரதம் அந்த தண்டுத்துளைப்பானுக்கு ஒவ்வாத நஞ்சாக மாறுகிறது. ஆனால் அதே மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நஞ்சாக இருக்குமா?, என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி நீண்ட ஆய்வு நடக்கவே இல்லை என்பது வேதனையான வேடிக்கை.

மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பன்னாட்டுக் கும்பணிகள் (கும் = குழு, பணி = செய்தல் - ஆங்கிலம் போன்ற தமிழ்ச் சொல்) அறிவுச் சொத்துரிமை (Intellectual Property) என்ற பெயரில் கைப்பற்றி வைத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் இவர்கள் வைத்ததுதான் விலை. எடுத்துக்காட்டாக 2006-07ஆம் ஆண்டளவில் ஒரு கிலோ சாதாரண பருத்தி விதையின் விலை ரூ.70 என்று இருந்தது. ஆனால் 450 கிராம் பா.து விதை ரூ.1050-க்கு விற்றது. அதுவும் அவை இரண்டாம் தலைமுறை விதைகள். எனவே பன்மடங்கு உயர்த்தப்பட்ட விலை உழவர்களின் தலையில் விடிகிறது.

இது ஒருபுறம் இருக்க, இதுவரை உணவுப் பயிர்களில் எந்த வகையிலும் மரபீனி மாற்றப் பயிர்களை அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது மரபீனி மாற்றக் கத்தரிப் பயிரை உலகிலேயே முதன்முறையாக இந்தியா அனுமதித்துள்ளது. இதை சூழலியளார்கள் மட்டுமல்லாது உழவர்கள், அறிவியல் அறிஞர்களும் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். 'இது அறிவியலே அல்ல' என்கிறார் சில்லஸ் எரிக் செராணி என்ற அறிஞர். மரபீனி மாற்றப் பயிர்களில் 99.9 விழுக்காடு நச்சுத்தன்மையுள்ள கொல்லிகள் உள்ளன. இவற்றைக் கும்பணிகள் வெளிப்படையாகச் சொல்வதில்லை, மூடி மறைத்து ரகசியமாகவே செய்கின்றன. இதன் தகுதிப்பாட்டை ஆய்வு செய்யாமல் அரசுகள் அனுமதி வழங்குகின்றன.

மரபீனி மாற்ற கத்தரிப் பயிருக்கு ஒப்புதலுக்காக வழங்கிய அறிக்கை 105 பக்கங்கள் கொண்டது. இதை மூன்று அமைப்புகள் தயாரித்து அளித்துள்ளன. இதில் முதல் அமைப்பு மகைகோ கும்பணி (Maharashtra Hybrid Seeds Company Ltd. (Mahyco), Mumbai) அடுத்தவை தார்வாட் வேளாண் பல்கலைக்கழகம், நமது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பருத்திக்குப் பயன்படுத்திய அதே முறையைத்தான் இதிலும் பின்பற்றியுள்ளனர். அதாவது மரபீனி மாற்றச் செயல்பாட்டில் மூன்று முகாமையான கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை குறிப்பிகள் (Markers) , சுமப்பிகள் (Carriers),  ஊக்கிகள் (Promoters) போன்றவையாகும். இவை உயிரினங்களில் நோயை உருவாக்கும் நச்சுயிரிகள், நுண்ணுயிரிகளில் இருந்தே பெறப்படுகின்றன. குறிப்பாக 35 எஸ் காலிபிளவர் மொசைக் நச்சுயிரி (35 Sca MV) என்ற நச்சுயிரி, ஏறத்தாழ எச்.ஐ.வியையும் (மஞ்சள் காமாலை) ஹெப்பாடைடஸ்-பி-ஐயும் போன்றது ஊக்கியாகப் பயன்பட்டுள்ளது. அரதப் பழசான பயனற்ற இந்த நுட்பத்தை மகைகோ தனது தாய் நிறுவனமான மான்சாண்டோவிடம் இருந்து வாங்கியுள்ளது என்கிறார் செராலினி.

குறிப்பாக தண்டு மற்றும் காய்த்துளைப்பானாக உள்ள ஒரு புழுவைக் கொல்வதற்குத்தான் இத்தனை ஏற்பாடு. பூச்சி இனத்தைச் சேர்ந்த Leucinodes orbonalis என்ற உயிரினம் கத்தரியை பெருமளவு தாக்குகிறது. இதற்கு இயற்கைமுறையில் நிறைய கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன. குறிப்பாக முட்டையிடும்போதே அவற்றை அழிக்கக் கூடிய முட்டை ஒட்டுண்ணிகள் உள்ளன. புழுப் பருவத்தின் அவற்றைத் தாக்கக் கூடிய புழு ஒட்டுண்ணிகள் உள்ளன. அத்துடன் இயற்கைப் பூச்சிவிரட்டிகளும் உள்ளன. இவற்றை எல்லாம் கவனிக்காது, மரபீனி மாற்ற விதைகளுக்கு முன்னுரிமை தருவது நமது வேளாண்மையை பன்னாட்டுக் கும்பணிகளுக்கு அடகு வைப்பதாகும். விதைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் கும்பணிகள் தமது வணிக விருப்பங்களுக்கு ஏற்ப சந்தையில் விளையாட முடியும். ஏனெனில் இந்த விதைகளை மறுபடி விதைக்க முடியாத அளவிற்கு மலட்டு தன்மையுள்ளதாக முடிவிப்பு மரபீனிகளைக் (terminater) கொண்டு அவர்கள் ஆக்கியுள்ளனர்.

மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விதைக்கும்போது அதிலிருந்து வரும் மகரந்தத்தூள் சாதாரண கத்தரிச் செடியில் இணையும்போது அதுவும் மலடாகும் வாய்ப்புகள் உள்ளன. மலட்டுத்தன்மையுள்ள காய்களைத் தொடர்ந்து உண்பதால் மலட்டுத் தன்மை வருமா என்பது பற்றிய ஆய்வுகள் இல்லை. அரசு இப்படிப்பட்ட பரிசோதனைகளுக்கு வெறும் 90 நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் ஒரு கும்பணியே தனக்கான ஆராய்ச்சியை தானே செய்து, அதற்கான ஒப்புதலை அதுவே பெற்றுக் கொள்வது என்பது அறிவியலுக்கும் நீதிக்கும் முரணானது என்கின்றனர். மேலும் ஆய்வில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர்கள் யாரும் இந்த ஆய்வறிக்கையில் கையப்பம் இடவில்லை என்றும், இதில் மிக மோசமான கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் செராலினி கூறுகிறார்.

அதுமட்டுமல்லாது இந்தக் கத்தரியானது எதிர்உயிர்மிகளை (antibiotics) எதிர்கொள்ளும் எதிர்ப்பாற்றல் திறன் பெற்றுள்ளதாக இருக்கும். அதாவது நோய்க்குக் கொடுக்கும் எதிர்உயிர்மிகள் செயல்பட முடியாதவாறு செய்துவிடும். இந்தக் காயை உண்ணும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் எதிர்உயிர்மிகளை எதிர்க்கும் ஆற்றல் வந்துவிட்டால், பிறகு சாதாரண எதிர்உயிர்மி மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது போகலாம். நமக்கு எந்த நோயையும் குணப்படுத்த முடியாது போகலாம். எலிகளுக்கு இதைக் கொடுத்துப் பார்த்ததில் அவற்றுக்கு வயிற்றுப் போக்கு, எடைக்குறைவு போன்ற துன்பங்கள் ஏற்பட்டதாக தெளிவாகிறது.

அதுமட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் 2000க்கும் மேற்பட்ட கத்தரி வகைகள் உள்ளன. இந்தப் உயிர் பன்மயத்திற்கு (Biodiversity) ஆபத்து ஏற்பட்டுவிடும். அதாவது மலட்டுக் கத்தரிக்காயின் மகரந்தம் இணைந்து மரபீனிய மாசுபாடு ஏற்பட்டால், இந்த வளமான மரபீனிய வளம் பாதிக்கும். இதனால் இப்போது ஏற்பட்டுவரும் பருவநிலை மாறுபாடுகளுக்கு ஏற்ற பயிரினங்கள் அழிந்துபோக வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் அமெரிக்காவில் பன்றிகளுக்குக் கொடுக்கும் மக்காச்சோளத்தில் தடுப்புமருந்து கொடுப்பதற்கான மரபீனியை இணைத்துவிட்டனர். இதன் விளைவாக ஐந்து லட்சம் டன் சோயா மொச்சை மாசுபட்டது.

மரபீனி மாற்றப் பயிர்களால் ஏற்படும் மற்றொரு ஆபத்து அதனால் உருவாகும் மீமிகைக் களைகள் (super weeds). இவை எந்த பூச்சிகளுக்கும் கட்டுப்படாமல் வளரலாம். இதனால் பிற பயிரினங்களைச் சாகுபடி செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும். ஏற்கனவே ஆந்திரா போன்ற மாநிலங்களில் பா-து பருத்திச் சாகுபடியாளர்கள் கடுமையான பொருளியல் நெருக்கடியால் தற்கொலைக்கு ஆளாயினர். இப்போது கத்தரிச் சாகுபடியாளர்களைக் குறிவைத்து காய்களை நகர்த்துகின்றனர். பா-து பருத்தியின் தோல்வி பற்றிய எவ்வித வெள்ளை அறிக்கையும் கொடுக்காமல் கத்தரிக்குத் தாவியுள்ள ஒப்பேற்புக் குழுவின் நடவடிக்கைகளை என்னவென்று சொல்வது?

சுற்றுச்சூழல் அமைச்சர் மரபீனிப் பொறியியல் ஒப்பேற்புக் குழுமத்தின் ஏற்புக்குப் பின்பு அறிவியலாளர்கள், தன்னார்வ அமைப்புகள், உழவர் அமைப்புகள் போன்ற அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து பின்னர் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் மீதும் மண்ணின் மீதும் அக்கறை கொண்டோர் அனைவரும் இந்த அறிவியல் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர் தமிழில் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் தொடர்பாக எழுதி வருபவர். உயிரி தொழில்நுட்பவியல், மணற்கோட்டைகள் (மொழிபெயர்ப்பு) உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
Pin It