Mullai thivuதென்னிலங்கை ஒரு போர்க்களம்! - பிணத்
தீனி கேட்கிறது சிங்களம்!
கண்ணிழந்ததோ பாரதம்? - இனி
கருணை வேண்டுவது யாரிடம்?..

தமிழன் வாழுகிற இந்தியா - ஒரு
சலனமற்ற வெறும் நந்தியா?
தமிழ்ப் பகைவரொடு பந்தியா? - இது
தர்ம தேசத்து நீதியா?

குண்டு மழைபொழிந்து தீர்க்கிறான் - தமிழ்க்
குழந்தைகளின் உயிரை மாய்க்கிறான்..
கண்டுகொண்டும் இவர் இருப்பதேன்? - அந்தக்
காடையனை விட்டு வைப்பதேன்?

ஊடகங்களிடம் முறைக்கிறான் - தன(து)
உயிர்க் கொலைகள்தமை மறைக்கிறான்..
கேடறிந்தும் இவர் பொறுப்பதேன்? - அந்தக்
கிறுக்கனை நொறுக்க மறுப்பதேன்?

சாதி மதவெறியின் தாண்டவம் - இதைச்
சகிக்குமா உலக மானுடம்?
போதி மரத்தடியின் புத்தனும் - இதைப்
பொறுத்திருப்பனோ, ஒருகணம்?

அகதிதான் ஈழத் தமிழனோ? - அதை
அனுமதிக்கிறவன் மனிதனோ?
தகுதியொன்று பறிபோகுமோ? - அதைத்
தட்டிக் கேட்பதொரு பாவமோ?

எதிரி நாடுகளில் யாசகம் - இனி
இலங்கை வாங்குவது ஆயுதம்
புதியதான சதி நாடகம் - இதைப்
புரிந்து கொண்டதா, பாரதம்?

வங்க தேசம் நினைவிருக்குமா? - அது
வடிவெடுத்த கதை மறக்குமா?
எங்களுக்கும் அது இல்லையா? - அட!
என்ன நியாயமிது? சொல்லய்யா!..

ஈழம் தமிழர் நிலம் அல்லவா? - அதை
இழந்திடல் அவலம் அல்லவா?
தோளில் சுமந்த குலம் அல்லவா? - எங்கள்
தொப்பூழ்க் கொடி உறவு அல்லவா?

அமைதி என்பதொரு மாய்கையோ - பெரும்
அழிவின் மீதுதான் வேட்கையோ?
எமது தமிழர் இனம் அழிவதோ? - இனி
எங்கு சென்று நாம் அழுவதோ?...

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It