இன்று உடல் நலனுக்கு நலம் பயக்கும் எண்ணெய்யாக கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் முதலிய எண்ணெய் வகைகள் பயன்படுகின்றன. இப்போதெல்லாம் இதயநோய் அதிகரித்து வருவதால், எண்ணெய்த் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. இந்த மூன்றிலும் சிறந்தது நல்லெண்ணெய்யே. அடுத்து சஃபோலா, மூன்றாவதாக சூரியகாந்தி.

சூரியகாந்தியில் 65%ம், நல்லெண்ணெயில் 85%ம், நன்மை தரும் அமிலங்கள் உள்ளன. இன்றும் கூடக் காயகல்ப மருந்தில் முக்கியமாக நல்லெண்ணெய்தான் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் - ஈயும், கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும் உள்ளதால், உடலிலும் இரத்தக் குழாய்களிலும் கொழுப்புச் சேராது, தொப்பை விழாது. இளமைத்தோற்றத்துடன் ஆரோக்கியமும் தொடர்கிறது.

நல்லெண்ணெய் நோயை முறிக்கும் முறிவு மருந்தாகும். நல்லெண்ணெயில் சமைத்த உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் கெடாமலிருப்பதைக் குடும்பத்தலைவிகள் அறிந்திருப்பார்கள். செசாமின் என்ற பொருள் நல்லெண்ணெயில் இருப்பதால், வாதம், இதயநோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.

நல்லெண்ணெயை நன்கு சூடுபடுத்திப் பயன்படுத்தினால், நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும். மூலப்பொருட்களின் ஆற்றல் இந்த எண்ணெயில் உள்ளது. வாழ்க்கையில் வெறுப்பு, கவலை, மனச்சோர்வு முதலியவற்றைத் தடுக்கும் பைரோரெஸினால் என்ற அமிலப் பொருளும் நல்லெண்ணெயில் இருக்கிறது. உடல் நலத்தையும் தந்து, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் முதல் தர எண்ணெய் நல்லெண்ணெய்தான். நல்லெண்ணெய்க் குளியலால் தோல் மிருதுவாகிறது.

பண்டைய இந்திய மருத்துவரான சரகர் மிகச் சிறந்த எண்ணெய் எள் எண்ணெய்தான் என்று கூறியுள்ளார். இரும்புச்சத்து, கால்ஷியம், பி-வைட்டமின்களும் இதில் உள்ளன. மூலத் தொந்தரவு மாதவிலக்குத் தொந்தரவு, மூச்சுக்குழல் பிரச்சனைகள், தோல் தொல்லை முதலிய பிரச்னை உள்ளவர்கள் எள்ளுருண்டையை தவறாமல் சாப்பிட்டு வரவும். நல்லெண்ணெயையும் சமையலில் பயன்படுத்தவும் சுத்திகரிக்கப்பட்ட நல்லெண்ணெய்யே எப்போதும் சிறப்பு.

பகல் உணவில் நெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய்யுடன் சாதத்தைப் பிசைந்து சாப்பிடுவது நல்லது. தோசைப் பொடி, இட்லிப்பொடிக்கு இனி நெய்யைப் பயன்படுத்து வதை நிறுத்துங்கள். நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நமது குடலில் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் உப்புகள் நன்கு செரிக்கப்படுவது எளிதாகிறது.

எனவே, நல்லெண்ணெயிலேயே நமது உணவு வகைகள் இனி தயாராகட்டும். ஆயுளும், இளமையும் எளிதில் நீடிக்க இந்த எண்ணெயே அரு மருந்து. எள்ளுருண்டை சாப்பிடும் குழந்தைகள் இரத்த சோகை நோய்க்கு உள்ளாவதில்லை. இரத்தசோகை நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எள்ளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் சர்க்கரையுடன் சேர்த்து கலக்கி அருந்தி வருவது நல்லது.

-கே.எஸ். சுப்ரமணி