ஜன்னல் கம்பிகளில்
படிந்திருந்தது
நேற்றைய இரவின் வியர்வை

அத்துளிகள்
கடந்த சில நிகழ்வுகளை
கண்முனையில் திறந்தது

அவள் பார்த்து பின்
கை நழுவிச்
சிதறிய கண்ணாடித்துண்டுகள்
அவைகளை சென்று பார்த்தபோது
அனைத்தும் நெடிய ஒரு பிரிதலை
துகள்களாக உடைத்துக்காட்டின

இன்னொரு நாள்
ஒரு மழைத் துளியில்
பிரதிபலித்த நிலவின் முகம்
தொடர்பற்று கிழிந்த
காற்றினூடே
தரை சேர்ந்து சிதறியது

நேற்றிரவு கனவுகளில்
தோன்றிய கவிதையின்
வடிவற்ற படிமங்கள்
விடியலின் கூரான
கதிர்களால்
உடைக்கப் பட்டுவிட்டன...

நினைத்ததுபோலவே அதோ
அக்கம்பிகளின் கீழே
தொங்கி நின்ற நிறமற்ற துளி ஒன்றில்
அவள் விழிநீரும் சேர
தொடர்பைத் துண்டித்து
விடை சொல்லாது விழுந்து மடிந்தது ...

மடிதலுக்காக இன்னும்
சிலவற்றை அக்கம்பிகளில்
இணையற்று தொங்குகின்றன...
அவள் விழிகளை
ஏக்கத்துடன்
பார்த்தபடி......

- கலாசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)