ஆற்றங்கரையிலுன்
கால்கள் பட்டுச் சலசலத்த
நீரின் கானத்தினை
பேராசைக் காற்று
மூங்கில்களுக்குள் அனுப்புகிறது
அம் மூங்கில் பறித்து
செய்த புல்லாங்குழல்
ஊதத் தருமிசை
நீரினுடையதா
காற்றுடையதா
மூங்கிலுடையதா
உன்னுடையதாவென
ஆய்வுகள் நடக்கின்றன
***
அவர்கள்
நீ பேசக் கேட்டிருந்தால்
பூலோகத்தின் மனமாற்றும்
தேனினிய ராகத்தை
உன் குரலொன்று மட்டுமே
எப்பொழுதும் கொண்டிருக்கிறதென்று
ஏக முடிவாக ஆய்வுக் குறிப்புக்களை
வரி பிசகாது எழுதிமுடித்து
மீண்டும் யாரும் முடிவினை
மாற்றியெழுதிடக் கூடாதென
எழுதுகோல்களைத் தொலைத்திடுவர்
- எம்.ரிஷான் ஷெரீப்