மலைகளின் உயரம் குறைகின்றது
பளு ஏந்தி பயணிக்கின்ற
மலைவாழ் மக்களின்
பாதச்சுவடுகளில்....!

கடல் நீர்மட்டம்
அதிகரிக்கிறது
கடலோர மக்களின்
வியர்வையிலும், கண்ணீரிலும் ...!

பனைமரங்களின்
பக்கவாட்டிலான செதுக்கல்கள்
தேய்ந்து காணப்படுகிறது
இவர்கள் மார்பிலும் கைகால்களிலும்...!

சாக்கடையிலும் கழிவுநீரிலும்
நாள்முழுதும் நாடு மணக்க
சுத்தம் செய்யும்  இவர்கள்
அசுத்தத்தின் துர்நாற்றம் மட்டுமே அறிகிறார்கள் ....!

பகல் முழுதும் வயல் காட்டில்
இவர்களின் கடின உழைப்பு
ஏர்கள் புதுப்பிக்கப்படுவதில்லை
அறுவடைக்கான இவர்கள் கனவுகளும்....!

இன்னும் ஏராளம் சொல்லலாம்
உழைப்பின் விதங்களும்
உழைப்பவர்களின்
அவலங்களும் .....!

இருந்தும் இளைப்பாறுகையில்
இவர்களில் சோகம் பெரும்பாலும் காண்பதில்லை
பதிலாக மகிழ்ச்சி நிறைந்த பகிர்தல்கள்
ஏனெனில் இவர்கள் உழைக்கிறார்கள் ...!

- கலாசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)